இந்த ஒரு வார்த்தைக்கு தான் காத்திருந்தோம்.. BSNL யூசர்களே தயாரா இருங்க.. நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகிடுச்சு!
"இந்த ஒரு வார்த்தைக்கு தானே இவ்வளவு நாட்கள் காத்திருந்தோம்" என்று பெருமூச்சு விடும்படியாக பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) அறிமுகம் தொடர்பான ஒரு முக்கியமான நகர்வுக்கு இந்திய அரசின் அமைச்சர்கள் குழு (Group of Ministers - GoM) ஒப்புதல் அளித்துள்ளது.
அதென்ன ஒப்புதல்? 1 லட்சம் தளங்களில் (1 Lakh Sites) பிஎஸ்என்எல்-ன் 4ஜி நெட்வொர்க்கை வெளியிடுவதற்கான கோரிக்கைக்கு இந்திய அரசின் அமைச்சர்கள் குழு பச்சைக்கொடி காட்டியுள்ளது. இது ஒப்புதல், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க்கின் அறிமுகம் கைக்கு எட்டும் தூரத்தில் வந்துவிட்டதை உணர்த்துகிறது.

"1 லட்சம் தளங்களுக்கான முன்மொழிவுக்கு ஜிஓஎம் ஒப்புதல் அளித்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனமானது அடுத்த ஏழு நாட்களில் கொள்முதல் ஆர்டரை (Purchase order - PO) முன் வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் ஆன பிகே புர்வார் (PK Purwar) இடிடெலிகாமிடம் (ETTelecom) கூறியுள்ளார்.
அடுத்தது என்ன? இந்த ஒப்புதலை தொடர்ந்து, மும்பையை தலைமையிடமாக கொண்டுள்ள டிசிஎஸ் (Tata Consultancy Services - TCS) மற்றும் டாடா குழுமமானது (Tata Group) 100,000 தளங்களில் பயன்படுத்துவதற்கு தேவையான 4ஜி உபகரணங்களை (4G Equipment) வழங்க வேண்டும். இதற்கான மதிப்பீடு ரூ.24,556.37 கோடி ஆகும்.
இந்த மதிப்பீட்டில் நெட்வொர்க் கியருக்கான (Network Gear) செலவு மட்டுமே தோராயமாக ரூ.13,000 கோடி ஆகும், அத்துடன் மூன்றாம் தரப்பு (Third-party) பொருட்கள் தொடர்பான செலவுகள் மற்றும் 10 ஆண்டு வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தம் (Annual Maintenance Contract - AMC) ஆகியவைகளும் இந்த செலவில் அடங்கும்.
135 டவர்களில் சத்தமின்றி நடக்கும் 4ஜி சோதனை! உள்நாட்டு தொலைத்தொடர்பு அடுக்கை (Indigenous Telecom Stack) பயன்படுத்தி, சுமார் 135 டவர்களில் பிஎஸ்என்எல் நிறுவனமானது தனது 4ஜி சேவைகளை நேரடியாக சோதனை செய்ய தொடங்கியுள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் "நாங்கள் இதை அடுத்த மூன்று மாதங்களுக்கு சோதிப்போம். பின்னர் ஆகஸ்ட் மாத வாக்கில் 200 டவர்களுக்கு இதை விரிவுபடுத்துவோம்" என்றும் அஷ்வினி வைஷ்ணவ் கூறி உள்ளார். 200 தளங்களில் சோதனை முடிந்ததும், பிஎஸ்என்எல் நிறுவனமானது வணிக ரீதியாக 4ஜி சேவைகளை அறிமுகம் செய்யும்.
முதற்கட்டமாக பஞ்சாபின் மூன்று மாவட்டங்களான ஃபெரோஸ்பூர், பா-தன்கோட் மற்றும் அமிர்தசரஸில் பிஸ்என்எல் 4ஜி அறிமுகம் செய்யப்படும். இருப்பினும் அறிமுகம் குறித்து சரியான தேதிகள் எதுவும் வெளியாகவில்லை. இதே வேகத்தில் பிஎஸ்என்எல் செல்லும் பட்சத்தில் இந்நிறுவனத்தின் 4ஜி நெட்வொர்க் இந்த 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகமாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
பிஎஸ்என்எல் 5ஜி எப்போது அறிமுகமாகும்? தகவல் தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்வின் கூற்றுப்படி, "பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி உபகரணங்கள் ஆனது சாஃப்ட்வேர் அப்கிரேட் (Software upgrade) வழியாக கூடிய விரைவில் 5ஜி-க்கு மேம்படுத்தப்படும்". அதாவது பிஎஸ்என்எல் 4ஜி அறிமுகமான வேகத்தில் பிஎஸ்என்எல் 5ஜி நெட்வொர்க்கும் (BSNL 5G Network) அறிமுகமாகும்.


Click it and Unblock the Notifications








