TRAI-யிடம் அடிபணிந்த BSNL.. உண்மையாவே எங்கெல்லாம் 4G, 5G கிடைக்குது? பிஎஸ்என்எல் கவரேஜ் மேப் வெளியானது!
பிஎஸ்என்எல் (BSNL) என்று சுருக்கமாக அழைக்கப்படும், அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனம் ஆன பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டின் (Bharat Sanchar Nigam Limited) நெட்வொர்க் கவரேஜ் மேப்ஸ் (Network Coverage Maps) இப்போது பயனர்கள் அணுகும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது இந்த வரைபடம் பிஎஸ்என்எல்-ன் 4ஜி மற்றும் 5ஜி நெட்வொர்க் கவரேஜை சரியாக குறிக்கவில்லை என்றாலும், அது விரைவில் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இப்போதைக்கு வரைபடம் நேரலையில் மட்டுமே உள்ளது மற்றும் இதை இந்தியா முழுவதும் உள்ள பயனர்களால் அணுக முடியும். இந்த வரைபடத்தை பின்வரும் இணைப்பின் மூலம் அணுகலாம் - https://bsnl.co.in/coveragemap.

இந்த கவரேஜ் மேப்ஸ் ஆனது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் (TRAI - Telecom Regulatory Authority of India) கட்டாயப்படுத்தப்பட்ட பின் நேரலைக்கு வந்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு டெலிகாம் ஆபரேட்டருக்கும் இந்த வரைபடத்தை வெளியிட மார்ச் 31, 2025 கடைசி தேதியாக இருந்தது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வரைபடங்களை வெளியிட்டிருந்தாலும், பிஎஸ்என்எல் அதை இன்னும் முழுமையாக செய்யவில்லை.
இந்த கவரேஜ் மேப்ஸ்-ன் கீழ் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சரியான மற்றும் நிகழ்நேர கவரேஜ் தரவை காட்ட வேண்டும். அதாவது எங்கெல்லாம் 4ஜி கிடைக்கிறது மற்றும் எங்கெல்லாம் 5ஜி கிடைக்கிறது போன்ற விவரங்களை காட்ட வேண்டும். வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்க திட்டமிட்டுள்ள சேவைகள் குறித்து அவர்களுக்குத் தெரியப்படுத்த இது ஒரு பெரிய முயற்சியாகும். இதற்காக நிச்சயம் டிராய்-க்கு நாம் ஒரு நன்றி கூறியே ஆகவேண்டும்.
இந்தியாவில் உள்நாட்டு 4ஜி-ஐ பயன்படுத்தும் ஒரே தொலைத்தொடர்பு ஆபரேட்டர் பிஎஸ்என்எல் மட்டுமே ஆகும். மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தத்தம் பயனர்களுக்கு 4ஜி-ஐ வழங்க வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியை நாடின. பாதுகாப்பு நிலைப்பாட்டிற்காகவும், சுயசார்பு கண்ணோட்டத்தாலும், 4ஜி வெளியீட்டிற்கு பிஎஸ்என்எல் நிறுவனம் உள்நாட்டு தொழில்நுட்பத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அரசாங்கம் கட்டாயபடுத்தியதும், இதனால்தான் தான் எல்லாமே தாமதமாக நடக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது
கடந்த மாதம் பிஎஸ்என்எல் நிறுவனமானது, எப்போது அதன் 4ஜி சேவை (BSNL 4G) அறிமுகம் தொடர்பான பணிகள் முடிவுக்கு வரும் மற்றும் எப்போது அதன் 5ஜி சேவைக்கான (BSNL 5G) அறிமுகம் தொடங்கும் என்கிற டைம்லைனை (Timeline) அறிவித்து இருந்த்தது. தற்போது பிஎஸ்என்எல் நிறுவனமானது அதன் 4ஜி சேவையை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஜூன் 2025 இறுதிக்குள் 1 லட்சம் சைட் சைட்கள் என்கிற இலக்கை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரை பிஎஸ்என்எல் 75,000க்கும் மேற்பட்ட சைட்கள் என்கிற இலக்கை அடைந்துள்ளது. மேலும் 80,000க்கும் மேற்பட்ட சைட்கள் 'டிப்லாய்' (Deploy) செய்யப்பட உள்ளன. ஜூன் 2025 இறுதிக்குள், ஒரு லட்சம் சைட்கள் ஆக்டிவ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா "மே - ஜூன் 2025 க்குள் அனைத்து 100,000 சைட்களையும் செயல்படுத்தும் இலக்கை வைத்துள்ளோம். இதை தொடர்ந்து, ஜூன் மாதம் தொடங்கி 4ஜி சேவையிலிருந்து 5ஜி சேவைக்கு மாறுவோம்" என்று கூறி உள்ளார்.
அதாவது 1 லட்சம் சைட்களை ஆக்டிவ் செய்த பிறகு, பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் 4ஜி சேவையை தொடர்ந்து விரிவுபடுத்தும். 4ஜி விரிவாக்கத்திற்கு உதவுவதற்காக, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்திற்கு ஆர்டரை நீட்டிக்க பிஎஸ்என்எல் நிறுவனம் தயாராக உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. 1 லட்சம் 4ஜி தளங்கள் ஒரு நல்ல மைல்கல் என்றாலும், அவை இந்தியா முழுவதும் சேவை செய்ய போதுமானதாக இல்லை.
5ஜி சேவையை பொறுத்தவரை, பிஎஸ்என்எல் நிறுவனம் ஏற்கனவே டெல்லியில் 5ஜி எஸ்ஏ-வை சோதிக்க திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில், டிசிஎஸ் உதவியுடன் தற்போதுள்ள 4ஜி தளங்களை 5ஜி-க்கு மேம்படுத்தும் பணிகளை செய்யவும் பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள 4ஜி சைட்களை ஒரு எளிய மென்பொருள் உந்துதலுடன் 5ஜி என்எஸ்ஏ-க்கு மேம்படுத்த முடியும் என்பதை டாடா குழுமம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications