ஜிசாட்-1 செயற்கைக்கோள்: கவுண்ட் டவுன் தொடங்கியது: எப்போது விண்ணில் பாயும்?
இஸ்ரோ அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் புவி வளம் சார்ந்த பல்வேறு தகவல்களை அனுப்பும் ஜிசாட் 1 செயற்கைக்கோள் நாளை அதிகாலை விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கான 26 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கியது. அதாவது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ்
தவான் விண்வெளி நிலையத்திலிருந்து ஜிசாட் 1 செயற்கைக்கோள் செலுத்தப்படும் என்றும், ஜிஎஸ்எல்வி - எஃப் 10 ராக்கெட் இந்த செயற்கைக்கோளை சுமந்து செல்லும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஜிசாட் 1 செயற்கைக்கோளில் அதிநவீன கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே பாதுகாப்பு ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய பகுதிகளை இடைவிடாது கண்காணிக்கும் என்று கூறப்படுகிறது.

வெளிவந்த தகவலின் அடிப்படையில், இரவு, பகல் எந்த நேரமாக இருந்தாலும் மழைப் பொழிவின் போதும் துல்லியமான படத்தை எடுத்துதரும் ஆற்றல் இந்த கேமராவிற்கு உண்டு எனக் கூறப்படுகிறது. அதேபோல் சீன எல்லைப் பகுதிகளில் அந்நாட்டு படைகளின் நகர்வுகளையும் எளிதில் கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

இஸ்ரோ வெளியிட்ட தகவலின்படி, நாளை காலை 5.43 மணிக்கு இந்த ஜிசாட் 1 செயற்கைக்கோள் ஏவப்படும் நிலையில், 26 மணி நேர கவுண்ட் டவுன் இன்றுதொடங்கியது. மேலும் வனம், விளைநிலம், கனிம வளம், பனிப் பிரதேசம் போன்றவற்றின் தகவல்களையும் ஜிசாட் 1 செயற்கைக்கோள் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

அதேபோல் மறுபுறம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.அண்மையில் ககன்யான் விண்கலத்தின் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ சார்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த ககன்யான் திட்டமானது 2022-ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இஸ்ரோ நிறுவனம் ஏற்கனவே இதற்கான விண்வெளி வீரர்களை தேர்ந்தெடுத்துள்ள நிலையில், அவர்களுக்கு ரஷ்யாவின் ககரின் விண்வெளி பயிற்சி மையத்தில் பயிற்சி கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் இஸ்ரோ தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications