இனி போன்லாம் பண்ணாதிங்க whatsapp-லயே கேஸ் சிலிண்டர் புக் பண்ணலாம்: இதோ நம்பர் மற்றும் முறை?
போன் மூலம் ஆர்டர் செய்யும் முறையை மாற்றும் விதமாக வாட்ஸ் ஆப் மூலமாகவே இனி கேஸ் சிலிண்டர் ஆர்டர் செய்யலாம் என் அறிவிக்கப்பட்டுள்ளது.

போன் செய்தே சிலிண்டர் முன்பதிவு
இத்தனை நாளாக சிலிண்டர் ஆர்டர் செய்ய வேண்டுமானால் போன் செய்தே முன்பதிவு செய்யவேண்டும். ஆனால் டிஜிட்டல் இந்தியாவில் எத்தனையோ சிறப்பம்சங்களும், தொழில்நுட்பங்களும் வளர்ந்துக் கொண்டே வருகிறது. அதன்படி தற்போது நவீன முறையில் சிலிண்டர் ஆர்டர் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி வாட்ஸ் ஆப் மூலம் சமையல் எரிவாயு
இனி வாட்ஸ் ஆப் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி நிர்வாக இயக்குநர் பி.ஜெயதேவன், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

தமிழகத்தில் 1.36 கோடி சமையல் எரிவாயு இணைப்பு
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தமிழகத்தில் 1.36 கோடி சமையல் எரிவாயு இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்கள் உள்ளனர். தற்போது தொலைபேசி மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதுபோன்று பதிவு செய்யப்பட்டுள்ள செல்ஃபோன் எண்ணில் இருந்து இனி வாட்ஸ் ஆப் மூலமாகவும் பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.

75888 88824 என்ற எண்ணில் வாட்ஸ்-அப்
75888 88824 என்ற எண்ணில் வாட்ஸ்-அப் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். 7588888824 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் REFILL என்று அனுப்பி சிலிண்டரை முன்பதிவு செய்யலாம்.

குறுஞ்செய்தி மூலம் ஒரு லிங்க்
சிலிண்டர் வினியோகம் செய்த உடன் சரியான கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளதா? சரியான எடையில் சிலிண்டர்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளதா? சிலிண்டர்களில் சீல் மற்றும் கசிவுகள் குறித்து வினியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து சரியான முறையில் சேவை அளிக்கப்படுகிறதா? என்று வாடிக்கையாளர்களின் கருத்தை அறிவதற்காக அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் ஒரு லிங்க்கை இந்தியன் ஆயில் நிறுவனம் அனுப்புகிறது. அதில் வாடிக்கையாளர்கள் தங்களது கருத்தை பதிவு செய்யலாம்.

வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார்கள்
இதேபோல், இந்தியன் ஆயில் நிறுவன இணையதளத்திலும் வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்யவும் மற்றும் சந்தேகங்கள் குறித்து தெளிவு பெறவும் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர்கள் சிலவற்றை கடைகளில் பயன்படுத்தி விட்டு மீண்டும் கொண்டு வந்து வீடுகளில் வினியோகிக்கப்படுவதால் அவற்றின் எடை குறைவாக உள்ளதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார்கள் வருகின்றன.

சிலிண்டருக்கான மானியத் தொகை குறித்த விவரம்
எனவே, வாடிக்கையாளர்கள் சிலிண்டர்களை வாங்கும் போது அவற்றின் எடையை பரிசோதித்து தருமாறு சிலிண்டர் சப்ளை செய்யும் ஊழியரிடம் வலியுறுத்த வேண்டும். சிலிண்டருக்கான மானியத் தொகை குறித்த விவரம் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கும் புதிய சேவை விரைவில் தொடங்கப்படும். வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் சென்னையில் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும், என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications