அரசு வேளாண் துறை போலப் போலி வலைத்தளம் உருவாக்கி 3000 பேரிடம் 12 லட்சம் மோசடி.!
மத்திய வேளாண் துறையில் உள்ள காலி பணியிடத்திற்கு வேலை வாங்கித்தருவதாகக் கூறி, ஒரு மர்ம கும்பல் ஆன்லைன் மூலம் சுமார் 3000 பேரிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்துள்ளது.
மத்திய வேளாண் துறையில் உள்ள காலி பணியிடத்திற்கு வேலை வாங்கித்தருவதாகக் கூறி, ஒரு மர்ம கும்பல் ஆன்லைன் மூலம் சுமார் 3000 பேரிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்துள்ளது.
இந்த மர்ம கும்பலை பயன்படுத்திய கம்ப்யூட்டரின் ஐ.பி விலாசத்தை வைத்து டெல்லி போலீசார் இருவரைக் கைது செய்துள்ளனர்.

போலி வலைத்தளம்
மத்திய வேளாண் துறையில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி "panditdeendayalkrishivikas.com" என்ற வலைத்தளம் மூலம் நூதன முறையில் இந்த மோசடி நடந்துள்ளது. வேலைவாய்ப்பு தேடிய பலரும் இந்த வலைத்தளத்தை உண்மையான வேளாண்மை வலைத்தளம் என்று நம்பி பணத்தை இழந்துள்ளனர்.

உண்மையான முகவரி
மத்திய வேளாண்துறை அமைச்சகத்தின் உண்மையான முகவரியை வலைத்தளத்தில் பயன்படுத்தி, அந்த விலாசத்திற்கு விண்ணப்பங்களை அனுப்புமாறு வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. துணிச்சலாக இந்தக் கும்பல் தனது கைவரிசையை காட்டியுள்ளது.

3000 விண்ணப்பங்கள்
வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்ய விரும்பும் ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் தலா ரூ.400 என்ற விதத்தில் சுமார் 3000 விண்ணப்பங்களுக்கு இந்தக் கும்பல் பணம் வசூலித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவேண்டும் என்றும் வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

போலி வங்கி அக்கௌன்ட்
பணத்தைச் செலுத்துவதற்கென்று பிரத்தியேக போலி வங்கி அக்கௌன்ட்டையும் இந்தக் கும்பல் உருவாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனுப்பிய பல விண்ணப்பங்கள் வேளாண் அமைச்சகத்தின் அலுவலகத்திற்கு தொடர்ந்து வந்து குவியத் தொடங்கியதால், சந்தேகத்தின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் போலியான வலைத்தளம் மூலம் பலர் ஏமாற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

கைது
இது தொடர்பாக டெல்லி போலீசாரிடம் வேளாண்மை அமைச்சகம் புகார் அளித்தது. போலி வலைத்தளம் உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டரின் ஐ.பி விலாசத்தை வைத்து டெல்லி போலீசார் இருவரைக் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக இன்னும் மூவரை போலீசார் தேடிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications