LPG-க்கு மாற்றாக நிதின் கட்கரி காட்டிய புதிய வழி! Ethanol Stove.. இனி தண்ணீரும் எத்தனாலும் போதும்!
இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏறிக்கொண்டே போகிறதே என கவலைப்படும் மக்களுக்கு ஒரு நல்ல செய்தியை சொல்லி இருக்கிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி. அதாவது எத்தனால் மற்றும் தண்ணீர்க் கலவையில் இயங்கும் ஒரு புதிய வகை ஸ்டவ் (Ethanol Stove) தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளார் நிதின் கட்கரி.
அதாவது சமீபத்தில் நாக்பூரில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த புதிய வகை தொழில்நுட்பம் வர்த்தக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களை விட மிகவும் மலிவானது மட்டுமின்றி புகையில்லா சமையலுக்கும் வழிவகுக்கும் எனக் கூறியுள்ளார்.

இந்த ஸ்டவ் எப்படி வேலை செய்கிறது? அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்ட தகவலின்படி, இதன் டெக்னாலஜி ரொம்பவே சிம்பிள், எத்தனாலை தண்ணீருடன் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து, அதன் மூலம் சமையலுக்குத் தேவையான நெருப்பை உருவாக்க முடியும் என்று கூறியுள்ளார். அதுவும் இது முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் என்பதால் எல்பிஜி மற்றும் மண்ணெண்ணெய் ஆகிய பாரம்பரிய எரிபொருட்களுக்கு ஒரு சூப்பரான மாற்றாக இது அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க இந்தியா தீவிரமாக முயன்று வரும் இந்த நேரத்தில் கட்கரியின் இந்த அறிவிப்பு ஒரு புதிய தொடக்கமாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் இந்தியாவில் எத்தனால் பயன்படுத்துவது புதிதல்ல. அதாவது கடந்த பத்து ஆண்டுகளில் பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. குறிப்பாக 2014-ம் ஆண்டில் 1.5 சதவீதம் இருந்த எத்தனால் கலப்பு 2025-ல் கிட்டத்தட்ட 20 சதவீதம் தொடும் அளவுக்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுவரை வாகனங்களுக்கு எரிபொருளாகப் பயன்பட்டு வந்த எத்தனால் இப்போது முதன்முறையாகச் சமையலறைக்குள் வர உள்ளது.
அதுவும் எத்தனால்-தண்ணீர் ஸ்டவ் தொழில்நுட்பம், எல்பிஜி (LGP) சிலிண்டரை விட மலிவானது மட்டுமின்றி இது ஒரு மேட் இன் இந்தியா தயாரிப்பு என்பது தான் சிறப்பு. இந்தியா தனது எண்ணெய் தேவையில் கிட்டத்தட்ட 87 சதவீதம் இறக்குமதி செய்வதாகவும், இதற்காக ஆண்டுக்கு பல லட்சம் கோடிகளை செலவிடுவதாகவும் நிதின் கட்கரி பலமுறை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில் தான் எத்தனால் பயன்பாட்டை அதிகரிப்பது இறக்குமதி சுமையைக் குறைப்பதோடு, மாசுபாட்டையும் கட்டுப்படுத்த உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

எத்தனால் எப்படி தயாரிக்கப்படுகிறது?
பொதுவாக எத்தனால் என்பது கரும்பு, மக்காச்சோளம் மற்றும் விவசாயக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு ஆல்கஹால் அடிப்படையிலான உயிரி எரிபொருள் ஆகும். குறிப்பாக பெட்ரோல் டீசல் போன்ற புதைபடிவ எரிபொருட்கள் உடன் ஒப்பிடும்போது எத்தனால் மிகவும் சுத்தமாக எரியக்கூடியது. கார்பன் மோனாக்சைடு போன்று தீங்கு விளைவுக்கும் மாசுகளையும் இது குறைவாகவே வெளியிடுகிறது. இதனால் மண்ணெண்ணெய் அல்லது விறகு அடுப்புகளால் ஏற்படும் வீட்டு மாசை குறைக்கவும், இறக்குமதி செய்யப்படும் எல்பிஜியை சார்ந்திருப்பதை குறைக்கவும், கரும்பு மற்றும் சோள விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவும் இந்த தொழில்நுட்பம் உதவும் என்று கூறுகின்றனர்.
இந்த எத்தனால்-தண்ணீர் ஸ்டவ் திட்டம் நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் இதில் மிகப் பெரிய சாவல்கள் இருக்கின்றன. அதாவது இந்த தொழில்நுட்பம் நாடு முழுவதும் பரவலாக பயன்பாட்டுக்கு வர வேண்டுமென்றால், எரிபொருள் தடையின்றி கிடைப்பது, பாதுகாப்பு தரநிலைகள், அடுப்பின் விலை மற்றும் விநியோக கட்டமைப்பு என பல விஷயங்கள் அமைய வேண்டும். இந்தியா முழுவதும் ஏற்கனவே மானியங்கள் மற்றும் விரிவான விநியோக நெட்வொர்க்குகளுடன் எல்பிஜி ஒரு வலுவான இடத்தை பிடித்துள்ளது. ஆகவே இந்த எல்பிஜி சிஸ்டத்தை மாற்றி மக்கள் மத்தியில் இந்த புதிய தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கையை உருவாக்குவது மிகப் பெரிய வேலை தான். ஆகவே எத்தனால் ஸ்டவ் இந்தியாவில் முக்கியமான இடத்தைப் பிடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications