New Rules April 2026: ஏப்ரல் 1 முதல் புதிய விதிகள்.. ரேஷன் கார்டு முதல் ரயில் டிக்கெட் வரை.. இதோ முழு விவரம்..
ஏப்ரல் 1, 2026 முதல் புதிய நிதியாண்டு தொடங்குவதால், நாடு முழுவதும் பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செயல்படுத்தப்படும். குறிப்பாக ரேஷன் கார்டு முதல் ரயில் டிக்கெட் வரை பல்வேறு புதிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
ரேஷன் கார்டு (ration card)
கோடைக்காலத்தில் நிலவக்கூடிய கடும் வெப்ப அலைகளின் போது மக்கள் ரேஷன் கடைகளில் நீண்ட வரிசையில் நின்று சிரமப்படுவதைத் தவிர்க்கவும், உணவுப் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு தற்போது ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது ஏப்ரல் மாதத்தில் இருந்து மூன்று மாதங்களுக்கு (ஏப்ரல், மே, ஜூன்) தேவையான ரேஷன் பொருட்கள் ஒரே தவணையாக வழங்கப்பட உள்ளன.

கோதுமை கொள்முதல் தொடங்க உள்ளதால், மத்திய அரசின் கிடங்குகளில் உள்ள பழைய இருப்புகளை காலி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்கள் தங்களின் கைவிரல் ரேகையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் எனவும், அப்படி செய்யாதபட்சத்தில் அடுத்தடுத்த மாதங்களில் இலவச அரிசி மற்றும் இதர பொருட்கள் வழங்கப்படாது என்று கூட்டுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிபில் ஸ்கோர்
வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கடன் வாங்கியவர்கள் தங்கள் கடன் மதிப்பெண்கள் புதுப்பிக்கப்படுவதற்கு ஒரு மாதம் காத்திருக்க வேண்டியதில்லை. அதாவது இப்போது சிபில் (CIBIL) மதிப்பெண்கள் மாதத்திற்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகின்றன. ஆனால் அடுத்த மாதம் (ஏப்ரல்) முதல் இந்த செயல்முறை ஒவ்வொரு எழு நாட்களுக்கும் ஒருமுறை செய்யப்படும். அதன்படி உங்கள் கடன் விவரத் தரவுகள் ஒவ்வொரு மாதமும் 7,14,21 மற்றும் 28-ம் தேதிகளில் புதிபிக்கப்படும். குறிப்பாக தங்கள் சிபில் ஸ்கோரை மேம்படுத்த முயற்சிப்பவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும்.
பந்தன் வங்கி (Bandhan Bank)
கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த பந்தன் வங்கி ஆரம்பத்தில் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனமான தொடங்கி, தற்போது நாடு முழுவதும் 6,300-க்கும் மேற்பட்ட கிளைகளுடன், கிராமப்புற மற்றும் நடுத்தரப் பிரிவினருக்குச் சேவைகளை வழங்கி வருகிறது.
சமீபத்தில் பந்தன் வங்கி அறிவித்துள்ள புதிய விதியின்படி, வாடிக்கையாளர்கள் அந்த வங்கியின் ஏடிஎம்களில் 5 முறை இலவசமாகப் பணப் பரிவர்த்தனை செய்யலாம். மற்ற வங்கிககளின் ஏடிஎம்களை பயன்படுத்தும்போது, சென்னை, பெங்களூரு போன்ற மெட்ரோ நகரங்களில் வசிப்பவர்களுக்கு 3 முறையும், மற்ற ஊர்களில் இருப்பவர்களுக்கு 5 முறையும் மட்டுமே இலவச அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவும் இந்த வரம்பை மீறினால் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் ரூ.23 வசூலிக்கப்படும். மேலும் இந்த வரம்பை மீறி பேலன்ஸ் செக் செய்வது போன்ற பணமல்லாத இதர சேவைகளுக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் போதுமான பணம் இல்லாமல் ஏடிஎம்மில் கார்டை செருகி, பரிவர்த்தனை தோல்வியடைந்தால் (Transaction Decline), அதற்காக ரூ.25 அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
விமானக் கட்டணங்கள்
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் தான் விமான நிறுவனங்கள் விமான எரிபொருளுக்கான (ATF) விலைகளை வெளியிடுகின்றன. குறிப்பாக இந்த விலை உயர்வால் விமான டிக்கெட்டுகளின் விலையும் அதிகரிக்கும். அதன்படி இம்முறை இஸ்ரேல் மற்றும் ஈரான் போருக்கு மத்தியில் இந்த விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில்வே இலவச உணவு, இலவச டிக்கெட் திட்டம்
இந்தியன் ரயில்வே இலவச உணவு, இலவச டிக்கெட் வழங்கும் புதிய திட்டத்தை ஏப்ரல் முதல் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக இந்திய ரயில்வே ஒரு விசுவாசத் திட்டத்தை (loyalty program) தொடங்க உள்ளது. குறிப்பாக இந்த விசுவாசத் திட்டத்தின் கீழ் தான் அடிக்கடி ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்குக் கிலோ மீட்டர் அடிப்படையில் வெகுமதிப் புள்ளிகள் வழங்கப்படும்.
இந்த வெகுமதிப் புள்ளிகள் மூலம் பயணிகள் உணவு முதல் பயணக் கட்டணம் வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக பயணிகள் பயணிக்கும் தூரம் அதிகரிக்க, அதிகரிக்க அவர்கள் பெறும் வெகுமதி புள்ளிகளும் (Rail Points) அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும்போது, அவர்கள் பெற்ற வெகுமதி புள்ளிகள் அடிப்படையில் கட்டணத்தில் தள்ளுபடி பெறலாம் அல்லது ஒரு முழுமையான பயணச்சீட்டை இலவசமாகப் பெறலாம் என்று கூறப்படுகிறது. அதேசமயம் பயணிகள் தங்களுக்குப் பிடித்த உணவுகளை ரயில் இ-கேட்டரிங் மூலம் இலவசமாக ஆர்டர் செய்ய முடியும். மேலும் பயணத்தின் போது ரயில் நிலையத்தின் சொகுசு ஓய்வறைகளில் இலவச உணவை உண்டு மகிழவும் முடியும். இதுதவிர வெகுமதி புள்ளிகளின் அடிப்படையில் டிக்கெட்டுகளை மூன்றாம் ஏசி-யிலிருந்து இரண்டாம் ஏசி-க்கும், இரண்டாம் ஏசி-யிலிருந்து முதல் ஏசி-க்கும் மாற்றிக்கொள்ள முடியும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டம் வரும் ஏப்ரல் மாதம் முதல் வந்தே பாரத் மற்றும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் பிரீமியம் ரயில்களில் முன்னோட்டமாகச் செயல்படுத்தலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications








