ரேஷன் கார்டு முதல் பான் கார்டு வரை: ஏப்.1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள்.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
மார்ச் மாதம் முடிய இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் சில முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது ரேஷன் கார்டு முதல் பான் கார்டு வரை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விதிமுறை மாற்றங்கள் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
ரேஷன் கார்டு
கோடைக்காலத்தில் நிலவக்கூடிய கடும் வெப்ப அலைகளின் போது மக்கள் ரேஷ்ன கடைகளில் நீண்ட வரிசையில் நின்று சிரமப்படுவதைத் தவிர்க்கவும், உணவுப் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு தற்போது ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது ஏப்ரல் மாதத்தில் இருந்து மூன்று மாதங்களுக்கு (ஏப்ரல், மே, ஜூன்) தேவையான ரேஷன் பொருட்கள் ஒரே தவணையாக வழங்கப்பட உள்ளன.

குறிப்பாக கோதுமை கொள்முதல் தொடங்க உள்ளதால், மத்திய அரசின் கிடங்குகளில் உள்ள பழைய இருப்புகளை காலி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர மார்ச் 25-ம் தேதிக்குள் ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்கள் தங்களின் கைவிரல் ரேகையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் எனவும், அப்படி செய்யாதபட்சத்தில் உங்கள் பெயர் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்படவும் வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஏடிஎம் மற்றும் வங்கி விதிகள்
HDFC வாடிக்கையாளர்கள் வங்கி கார்டு இல்லாமல் யூபிஐ (UPI) மூலம் ஏடிஎம்-இல் பணம் எடுக்கும் வசதி இனி உங்கள் மாதாந்திர இலவச பரிவர்த்தனை கணக்கில் சேர்க்கப்படும். இலவச லிமிட் (எச்டிஎப்சி ஏடிஎம்-ல் 5 முறை, மற்றவற்றில் 3-5 முறை) தாண்டினால், ஒருமுறை பணம் எடுக்க ரூ.23 பிளஸ் வரி வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி பாதுகாப்பு முக்கிய பாதுகாப்பு காரணங்களுக்காக டெபிட் கார்டு மூலம் ஒரு நாளைக்கு எடுக்கும் வரம்பை ஒரு லட்சத்திலிருந்து ரூ.50000-ரூ.75000 ஆகக் குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஜியோ பேமெண்ட் வங்கி அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகளிடம் சென்று கியூஆர் கோடை(QR Code) ஸ்கேன் செய்து கைமாற்றாக ரொக்கப் பணம் பெற்றுக்கொள்ளும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டது.

பிஎஃப் பணத்தை யுபிஐ மூலம் எடுக்கும் வசதி
வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், தற்போது தங்களது கணக்கில் உள்ள பணத்தை வங்கி மூலம் பெறுகின்றனர். இந்நிலையில் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் தங்களுடைய பிஎஃப் தொகையை யுபிஐ மூலம் நேரடியாக வங்கிக்கணக்கில் பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்பட பிறகு, அதை டிஜிட்டல் கட்டணமாகவோ, ஏடிஎம் மூலம் பணமாகவோ எடுத்துக்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.
நிலம் அல்லது வீடு
புதிய வருமான வரிச் சட்டத்தின் படி, ரியல் எஸ்டேட்டில் ரூ.20 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள நிலம் அல்லது வீட்டை வாங்கினாலோ, பரிசாகப் பெற்றாலோ பான் கார்டு தேவைப்படும். முன்பு இந்த லிமிட் ரூ.10 லட்சமாக இருந்தது. குறிப்பாக இந்த மாற்றம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும்.
அதேபோல் புதிய வருமான விதியின்படி ரூ.5 லட்சத்திற்கும் மேலான இருசக்கர வாகனங்களை வாங்கினால் பான் கார்டை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும். மேலும் கார் வாங்கினாலும் பான் கார்டு கட்டாயம் ஆகும். இதற்கு டிராக்டர்கள் மட்டும் விதிவிலக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பான் கார்டு
இதுவரை புதிய பான் கார்டு பெற ஆதார் அட்டை மட்டுமே போதுமானதாக இருந்தது. ஆனால் வரும் ஏப்ரல் 1, 2026 முதல் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது, பிறந்த தேதியை உறுதிப்படுத்தும் ஆவணத்தை தனியாகச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate), வாக்காளர் அடையாள அட்டை (Voter ID), பாஸ்போர்ட் (Passport), ஓட்டுநர் உரிமம் (Driving License), பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு மேற்பட்ட கல்விச் சான்றிதழ்கள் (Mark Sheets/TC) போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்து புதிய பான் கார்டு பெற முடியும்.


Click it and Unblock the Notifications








