பூதாகரமாக வெடிக்கும் பெகாசஸ் விவகாரம்- பிரான்ஸ் அதிபர் செல்போன் ஒட்டுக்கேட்பு? விசாரணை நடத்த உத்தரவு!
பெகாசஸ் உளவு சாஃப்ட்வேர் என்பது சமீபத்தில் பேசுபொருளாக மாறி வருகிறது. தற்போது பெகாசஸ் சாஃப்ட்வேர் மூலம் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் செல்போன் எண்ணும் வேவு பார்க்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த எண்களை நாங்கள் கண்டறிந்தோம் ஆனால் இம்மானுவேல் மேக்ரானின் தொலைபேசியின் தொழில்நுட்ப பகுப்பாய்வை எங்களால் மேற்கொள்ள முடியவில்லை என லாரன்ட் ரிச்சர்ட் தெரிவித்தார்.

வேவுபார்க்கப்பட்டதாக தகவல்
பெகாசஸ் சாஃப்ட்வேர் மூலம் வேவுபார்க்கப்பட்டதாக உலகம் முழுவதும் சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தினந்தோறும் புதுப்புது தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்து வருகிறது. அதன்படி தற்போது பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானின் செல்போன் எண்ணும் உளவு பார்க்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான்
பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானின் செல்போன் எண் உளவு பார்க்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு முதல் இம்மானுவேல் மேக்ரான் பயன்படுத்திய செல்போன் எண்களில் ஒன்றை ஒட்டுக்கேட்க மொராக்கோ நாட்டு உளவுத்துறையால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரான்ஸ் நாட்டின் லீ மான்டி நாளிதழ் தெரிவித்துள்ளது.

ஆதாரமற்றது எனவும் முறையற்ற தவறான குற்றச்சாட்டு
மொராக்கோ நாட்டு சார்பில் இதுகுறித்து வெளியான அறிக்கை குறித்து பார்க்கையில், பெகாசஸ் சாஃப்ட்வேர் மூலம் பிரான்ஸ் நாட்டு அதிபர் செல்போன் எண் உளவு பார்க்கப்பட்டதாக எழுந்த புகார் ஆதாரமற்றது எனவும் முறையற்ற தவறான குற்றச்சாட்டு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விளைவு மிக தீவிரமாக இருக்கும்
மேலும் இது உண்மை என நிறுவப்பட்டால் விளைவு மிக தீவிரமாக இருக்கும் என மேக்ரானின் அலுவலக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். பாரிஸை தளமாகக் கொண்ட ஃபோர்பிடன் ஸ்டோரீஸ் மற்றும் அம்னஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை ஆரம்பத்தில் கசிந்த எண்களை அணுகியது. பின் தி வாஷிங்டன் போஸ்ட், தி கார்டியன் மற்றும் லு மொன்ட் உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் பகிர்ந்து கொண்டன.

உலக நாடுகள் முழுவதும் சர்ச்சை
அதேபோல் ஈராக் அதிபர், தென் ஆப்பிரிக்க அதிபர், பாகிஸ்தான் பிரதமர், எகிப்து பிரதமர், மொராக்கோ அதிபர் ஆகியோரின் செல்போன் எண்களும் வேவு பார்க்கப்பட்டதாக அமெரிக்கா பிரபல நாளிதழான வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. பெகாசஸ் மென்பொருள ஹேக்கிங் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

PEGASUS என்ற சாஃப்ட்வேர்
இஸ்ரேலை தளமாகக் கொண்ட என்எஸ்ஓ நிறுவனத்தின் PEGASUS என்ற சாஃப்ட்வேரை பயன்படுத்தி ஏணைய நாடுகளை சேர்ந்த முக்கிய புள்ளிகளின் செல்போன் புகைப்படங்கள், உரையாடல்கள், பகிர்வு என அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதில் பத்திரிக்கையாளர்கள், அரசியல் தலைவர்கள் என பலர் இருக்கலாம் என கருதப்பட்டது.

செய்தி நிறுவனங்கள் இணைந்து ஆய்வு
இதையடுத்து பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Forbidden Stories என்ற செய்தி நிறுவனத்துடன் இந்தியா உட்பட பல நாடுகளின் பத்திரிக்கை நிறுவனங்கள் இணைந்து ஆய்வு நடத்தின. இந்தியாவை சேர்ந்த The Wire உட்பட பிற நாடுகளை சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட், தி கார்டியன் உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் இணைந்து ஆய்வுகளை நடத்தின. இந்த ஆய்வின் முடிவில் பல தகவல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

இஸ்ரேல் நாட்டின் என்எஸ்ஓ நிறுவனம்
இஸ்ரேல் நாட்டின் என்எஸ்ஓ நிறுவனத்திடம் உளவு பார்ப்பதற்காக சுமார் 50,000-த்துக்கும் மேற்பட்ட மொபைல் எண்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. என்எஸ்ஓ நிறுவனம் என்பது ஹேக்கர்களை மையமாக கொண்டு செயல்படும் அமைப்பாகும். இதில் 50 நாடுகளை சேர்ந்த 1000-த்துக்கும் மேற்பட்ட நபர்களை அடையாளம் காண முடிந்தது. இதில் 189 ஊடகவியலாளர்கள், 600-க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உட்பட 65 வணிக நிர்வாகிகள், 85 மனித உரிமை ஆர்வலர்கள், பல அரசியல் தலைவர்கள் இருப்பதாக தி வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. பத்திரிகையாளர்கள் என்று பார்க்கையில் அசோசியேட்டட் பிரஸ், ராய்ட்டர்ஸ், சிஎன்என், தி வோல் ஸ்ட்ரீட் ஜர்னல், லு மொன்ட் மற்றும் தி பைனான்சியல் டைம்ஸ் உள்ளிட்ட பல செய்தி நிறுவனத்தின் ஊழியர்கள் இடம்பெற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications