ஃப்ரீடம் 251 ஏமாற்று வேலை காங்கிரஸ் கிளப்பிய புதிய குழப்பம்.!!
"ப்ரீடம் 251" ஸ்மார்ட் போன் திட்டம் மோசடி திட்டம் என்றும், இதன் அறிமுக நிகழ்ச்சியில் பாஜக தலைவர் கலந்து கொண்டதற்கு காங்கிரஸ் எம்.பி பிரமோத் திவாரி கடும் ஆட்சேபனை தெரிவித்ததோடு இந்த திட்டம் குறித்து மத்திய அரசு முறையான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்பி பிரமோத் திவாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தின் போது, சந்தேகத்தை வெளிப்படுத்திய பிரமோத் திவாரி கூறியதாவது:-

குற்றச்சாட்டு
" நான் உறுதியான குற்றச்சாட்டை முன்வைக்கிறேன். மிகப்பெரும் ஒரு மோசடியை அரசு செய்யவுள்ளது. கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரும் மோசடியாக பாஜக ஆட்சியில் இது அமையவுள்ளது.

தலைவர்
இந்த நிறுவனத்தின் மொபைல் போனை பா.ஜ.க தலைவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். பா.ஜ.க தலைவர்களுக்கு இந்த மோசடியில் தொடர்பு உள்ளது. மேக் இன் இந்தியா பற்றி பேசி, மேக் இன் மோசடி வேலையை அவர்கள் செய்து வருகின்றனர்.

உத்தரவாதம்
இந்த மொபைல் போனுக்கு ஆறு கோடிக்கும் அதிகமான முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு போன் 251 ரூபாய் என்றாலும் கூட நுற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை மொபைல் நிறுவனம் வசூலித்து விடும். நிறுவனம் வசூலிக்கும் பணத்துக்கு உத்தரவாதம் வேண்டும்.

பதில்
ஒரு போனின் குறைந்தபட்ச விலை ரூ 1400 என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரே கூறுகிறார். பிறகு எப்படி வெறும் 251 ரூபாயில் இந்த போனை விற்க முடியும். ரூ.251 க்கு மொபைல் போன் வாங்க முடியும் என்றால், பிற நிறுவனங்கள் எப்படி ரூ. 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் விலை நிர்ணையிக்கின்றன. இரண்டில் ஒன்று தவறாக இருக்க வேண்டும். அரசு இதற்கு பதிலளிக்க வேண்டும்" என்றார்.

குழப்பம்
நொய்டாவை சேர்ந்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் இந்த திட்டம் மத்திய அரசு துணையோடு துவங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. கருவியின் விழாவில் பா.ஜ.க தலைவர் கலந்து கொண்டதை தொடர்ந்து புதிய குழப்பத்தை காங்கிரஸ் கிளப்பியுள்ளது.

விநியோகம்
கருவி வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யப்படும் வரை இது போன்ற குழப்பங்களை தவிர்க்க முடியாது.


Click it and Unblock the Notifications