சென்னையின் சில பகுதிகளில் 30 நிமிடங்கள் வரை இலவச வைஃபை.! சென்னை மாநகராட்சி அறிவிப்பு.!
அண்மையில் வெளிவந்த தகவலின்படி, சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியின் சார்பில் நிறுவப்பட்டுள்ள ஸ்மார்ட் கம்பங்கள் உள்ள பகுதிகளில் 30 நிமிடங்களுக்கு வைஃபை தொடர்பைப் பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னை மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பல்வேறு விதமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கட்டுப்பாட்டு மையம் அமைப்பதன் முக்கிய நோக்கம் என்னவென்றால்,மாநகரின் பல பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள திட்டப் பணிகளை ஒருங்கிணைந்து நிர்வாகச் செயல்திறனை மேம்படுத்துவதே ஆகும்.

அதேபோல் மாநகரின் முக்கிய இடங்களில் கண்காணித்தல், பேரிடர் மேலாண்மை குறித்து தகவல் கருவிகள் மூலம் அறிதல், மழை பொழிதல் அளவைக் கண்டறிதல், வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்களில் நீர் அளவைக் கண்டறிதல், திடக்கழிவு அகற்றும் பணிகளை கண்காணிக்க கேமரா நிறுவுதல் மற்றும் அதனை சார்ந்த தகவல்கள் பெறப்பட்டு, அதன்மீது நடவடிக்கை எடுத்தல் போன்றபல பணிகள் இந்த கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து கண்காணிக்கப்படுகின்றன.

மேலும் இந்த திட்டத்தில் சிறப்பு அம்சமாக சென்னை மாநகரில் பல்வேறு இடங்களில் 49 எண்ணிக்கையிலான ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் கம்பங்களில் இருக்கும் வைஃபை தொடர்பை பொதுமக்கள் 30 நிமிடங்கள் வரை இலவசமாக பயன்படுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது பொதுமக்கள் தங்கள் செல்போனில் இலவச வைஃபை பெறுவதற்கு கைப்பேசி எண்ணைப் பதிவு செய்து ஓடிபி மூலம் இந்த சேவையைப் பெற்றுக்கொள்ளலாம். குறிப்பாக பொதுமக்கள் இலவச வைஃபை இணைப்பு அமைக்கப்பட்டுள்ள 49 ஸ்மார்ட் கம்பங்கள் உள்ள இடங்களை பெருநகர சென்னை மாநகராட்சியின்https://chennaicorporation.gov.in/gcc/images/WiFiSmartPol.pdf இணையதள இணைப்பைப் பயன்படுத்தி தெரிந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த சேவை மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications