UPI சேவை இனி இந்தியாவில் மட்டுமல்ல பிரான்சிலும் செல்லும்.. மோடி அடித்த நெத்தியடி டீல்!
இந்தியாவில் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) சேவையை கோடிக்கணக்கான மக்கள் உள்நாட்டிலேயே பயன்படுத்தி வருகின்றனர். அடுத்தபடியாக, இனி இந்தியர்கள் UPI சேவையை பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாட்டில் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) பயன்படுத்த இந்தியாவும் பிரான்சும் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி புதிய தகவலை வெளியிட்டுள்ளார். இது இந்திய பயனர்களுக்கு ஒரு பெரிய புதிய சந்தை வாய்ப்பைத் திறக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சீன் நதியில் உள்ள ஒரு தீவில் உள்ள கலை நிகழ்ச்சிகள் மையமான La Seine Musicale இல் இந்திய சமூகத்தினரிடம் உரையாற்றிய மோடி, இந்த தகவலை தெரியப்படுத்தினார். இந்திய சுற்றுலாப் பயணிகள் இனி ஈபிள் டவர் இல் இருந்து UPI சேவையைப் பயன்படுத்தலாம் என்றும், இனி பிரான்ஸ் நாட்டில் UPI மூலம் மிக விரைவில் இந்திய ரூபாய்யையே பயன்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.
பிரான்சில், இந்தியாவின் UPI ஐப் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக மோடி அறிவித்திருக்கிறார். இந்த புதிய சேவை ஈபிள் டவரில் இருந்து தொடங்கப்படும், இப்போது இந்திய சுற்றுலாப் பயணிகள் UPI மூலம், ஈபிள் டவரில் ரூபாய்களில் பணம் செலுத்த முடியும் என்று பிரதமர் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2022 ஆம் ஆண்டில், UPI சேவைகளை வழங்கும் அமைப்பான நேஷனல் பேமெண்ட்ஸ் கார்பொரேஷன் ஆப் இந்தியா (National Payments Corporation Of India) (NPCI), பிரான்சின் வேகமான மற்றும் பாதுகாப்பான ஆன்லைன் கட்டண முறையான Lyra உடன் புதிய ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது இந்திய சுற்றுலா பயணிகளுக்கு பெரிதும் பயன்பெறும் என்று கூறப்படுகிறது.

இந்த 2023 இல், UPI மற்றும் சிங்கப்பூரின் PayNow சேவை உடன் இந்தியா கையெழுத்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளிலும் உள்ள பயனர்கள் எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளைச் செய்ய இந்த சேவை இப்போது அனுமதிக்கின்றது. UAE, பூட்டான் மற்றும் நேபாளம் ஆகியவை ஏற்கனவே UPI கட்டண முறையை ஏற்றுக்கொண்டுள்ளன.
NPCI இன்டர்நேஷனல் UPI சேவைகளை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் மேற்கு ஆசியாவில் நீட்டிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டால், இந்தியாவின் UPI சேவை வளர்ந்த உலகநாடுகள் மற்றும் வளர்ந்து வரும் உலக நாடுகளில் இனி பயன்படுத்த கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக, இந்த சேவை சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு சென்று படிக்கும் இந்திய மாணவர்களுக்கும் பெரிதும் பயன்படும் ஒரு முக்கிய அம்சமாக மாறும் என்று கூறப்பட்டு வருகிறது. இத்துடன், பிரான்சில் முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு நீண்ட கால ஐந்தாண்டு விசா வழங்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளதாக மோடி தெரிவித்தார்.
ஒரு வளர்ந்த தேசமாக வெளிவர விரைவான முன்னேற்றங்களைச் செய்து வரும் இந்திய சமூகம், இந்தியாவில் பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவின் இந்த புதிய ஒப்பந்தம் பற்றி உங்களுடைய கருத்து என்ன என்பதை தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications








