ஒரே நாளில் மாறிய வாழ்க்கை.. 6 இலக்க சம்பளம் TO 20 டாலர்கள்.. ஒயின் ஆலையில் முன்னாள் Meta ஊழியர்!
மெட்டா (Meta) நிறுவனத்தில் 6 இலக்க சம்பளம் பெற்று பணிபுரிந்து வந்த பெண் ஊழியர் ஒருவர் திடீரென்று பணி நீக்கம் செய்யப்பட்டதால், உள்ளூரில் உள்ள ஒயின் ஆலையில் வேலைக்கு சேர்ந்து விட்டார். அவருக்கு 20 டாலர்கள் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. மெட்டாவுக்கு பின் தனது நிலைமை குறித்து அவர் உருக்கமாக தெரிவிக்கிறார்.
சமீப காலமாக மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 5 முதல் 8 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த ஊழியர்களும் ஒரே நாளில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மைக்ரோசாப்ட் (Microsoft), மெட்டா (Meta), ட்விட்டர் (Twitter), அமேசான் (Amazon), ஃபேஸ்புக் (Facebook) போன்ற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களே பல்லாயிரணக்கான ஊழியர்களை தொடர்ந்து நீக்கி வருகிறது.

இதில் மெட்டா (Meta) நிறுவனம் கிட்டத்தட்ட 16 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்களை பணி நீக்கம் செய்துவிட்டது. அந்த வகையில், கடந்த பிப்ரவரி மாதம் 10,000 பேரையும், அதற்கு முன்னதாக 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11,000 பேரையும் பணிநீக்கம் செய்திருந்தது. இதில் வேடிக்கை என்வென்றால், பணி நீக்கம் செய்யப்பட்ட பலருக்கு அதிகாலை 4 மணிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு தொழில்நுட்ப நிறுவனங்கள் கடுமையான ஆட்குறைப்பு நடவடிக்கையை செய்து வருகிறது. நிதி நெருக்கடி காரணமாகவே பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்தந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இதற்குகேற்றாற்போலவே மெட்டா நிறுவனத்தில் 21 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்ட பின்பு அந்த நிறுவனத்துக்கு ரூ.46,597 கோடி நிகர லாபம் கிடைத்துள்ளது.
அதோடு மெட்டா நிறுவனத்தின் பங்குகளும் அதிகரித்துள்ளன. இதன் மூலம், பணிநீக்க முடிவு லாபத்தை நோக்கியது என்று தொழில்நுட்ப நிறுவனங்கள் சொல்லாமல் சொல்லிக் காட்டுகின்றன. இதனால் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை பறிபோகுமோ? என்ற அச்சத்திலேயே இருக்கின்றனர்.
இவர்களின் நிலைமை இப்படியென்றால், ஏற்கனவே பணிநீக்கம் செய்யப்பட்டவர்களின் நிலை எப்படி இருக்கும். பலர் எந்த வேலைக்கு செல்வது என்ற குழப்பத்தில் உள்ளனர். சில உள்ளூரில் கிடைக்கும் வேலைக்கு சென்றுவருகின்றனர். மாதம் 50 ஆயிரம் டாலர்களுக்கும் மேல் சம்பளம் வாங்கியவர்கள் சில நூறு டாலர்களுக்கு இப்போது வேலைக்கு செல்கின்றனர்.
அந்த வகையில் மெட்டா (Meta) நிறுவனத்தில் 9 ஆண்டுகளாக பணிபுரிந்து 6 இலக்க சம்பளம் பெற்று வந்த பெண் ஊழியர் உள்ளூரில் உள்ள ஒயின் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்துள்ளார். ஒரு மணி நேரத்துக்கு 20 டாலர்கள் மட்டும் சம்பாதித்து வருகிறார். இதுகுறித்து தனது லிங்க்ட்இன் (LinkedIn) பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், "மெட்டாவின் பணிநீக்கத்துக்குப் பின் நான் பெண்கள் நடத்தும் ஒயின் ஆலையில் வேலைக்கு சேர்ந்துவிட்டேன். புதிதாக ஒரு வேலையை செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன். 6 இலக்க சம்பளம் வாங்கிய எனக்கு இங்கு ஒரு மணி நேரத்துக்கு 20 டாலர்கள் மட்டுமே கிடைத்தாலும் மகிழ்ச்சியாவே இருக்கிறேன். இருப்பினும் சில செலவுகளை நினைக்கும்போது மன உளைச்சல் அடைகிறேன்.
இந்த தொழில்நுட்பத்துறை எங்களிடம் பயத்தை ஏற்படுத்துகின்றன. எங்களது பணியிடங்கள் விஷமத்தனமாக மாறிவருகின்றன. உண்மையை சொல்லப்போனால், நான் எனது தொழில்நுட்ப பணியை மட்டுமே நேசித்தேன். சிறப்பாகவே பணிபுரிந்தேன். அதேவேளையில் அது தவிர வேறேதையும் கற்றுக்கொள்ளாமல் விட்டுவிட்டேன். இப்போது மீண்டும் தொழில்நுட்பம் சார்ந்த பணிக்கு செல்வது என்பது மிகுந்த போட்டித்தன்மை மிக்கத்தாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications








