இந்திய வரலாற்றில் முதல்முறை.. "விண்ணில் பாயும் விக்ரம்" உற்று நோக்கும் உலக நாடுகள்- ரெடியா இருங்க!
இந்திய விண்வெளி வரலாற்றில் முதன்முறையாக தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனம் வடிவமைத்த Vikram S ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட இருக்கிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட இருக்கிறது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாகும். இந்தியாவில் நாளை நடக்கும் இந்த நிகழ்வை பல நாடுகளும் உற்று நோக்கி கவனித்துக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனம்
விண்வெளி ஆராய்ச்சியில் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனம் என்பது புதிதல்ல. எலான் மஸ்க் இன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாசாவின் விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது. அதேபோல் தான் ஜெஃப் பெசோஸ் இன் ப்ளூ ஆர்ஜின் நிறுவனம். விண்வெளி சுற்றுலா போன்ற திட்டங்களில் ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ் போன்ற உலகப் பணக்காரர்களின் தனியார் நிறுவனங்கள் விண்வெளி ஆராய்ச்சியில் போட்டிப்போட்டு வருகின்றன.

விக்ரம்-எஸ் ராக்கெட்
விண்வெளி ஆராய்ச்சியில் தனியார் நிறுவனம் என்பது புதிதல்ல என்றாலும் இந்திய வரலாற்றில் தனியார் நிறுவனம் என்பது இது முதன்முறை. தனியார் நிறுவனம் வடிவமைத்த "விக்ரம்-எஸ்" என்ற ராக்கெட் நாளை காலை 11:30க்கு விண்ணில் ஏவப்பட இருக்கிறது. நாசாவின் ஆராய்ச்சிக்கு மஸ்க் இன் ஸ்பேஸ் எக்ஸ் பங்கு பெரிதாக இருப்பது போல், இஸ்ரோவின் ஆராய்ச்சிக்கு தனியார் நிறுவனத்தின் பங்கு பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் இஸ்ரோ
இந்தியாவில் புதிதாக களமிறங்கும் தனியார் நிறுவனம் விண்வெளியில் செலுத்தும் ராக்கெட் மற்றும் அதன் முன்னேற்றம் மீது தான் எலான் மஸ்க் இன் ஸ்பேஸ்எக்ஸ் போன்ற விண்வெளி நிறுவனங்களின் கவனம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் உலகளாவிய விண்வெளி வர்த்தகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்க இஸ்ரோ முடிவு செய்திருக்கிறது.

விண்ணில் சீறிப்பாயும் விக்ரம் எஸ் ராக்கெட்
தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலான திட்டத்தை இஸ்ரோ 2020 ஆம் ஆண்டு செயல்படுத்தியது. இந்த திட்டத்திற்கு இன்ஸ்பேஸ் என பெயரிடப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ராக்கெட், செயற்கைக்கோள்களை தயாரிக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி தயாரிக்கப்பட்ட ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட இருக்கிறது.

ஸ்கைரூட் எனும் ஏரோஸ்பேஸ் நிறுவனம்
இந்த ராக்கெட்டை தயாரித்தது தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் எனும் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தான். இந்த நிறுவனம் தனது ராக்கெட்டுகளை தயாரிக்க இஸ்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி ராக்கெட்டுகளையும் தயாரித்தது. ஓராண்டுக்கும் மேலாக இந்த தயாரிப்பு பணி நடந்து வந்தது.

விக்ரம் என பெயர் வைக்க காரணம்..
இந்த நிலையில் தற்போது மூன்று வித எடை கொண்ட செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் வெவ்வேறு ராக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் அதிகப்பட்சமாக 480 கிலோ எடையை சுமந்து செல்லக்கூடிய ராக்கெட் தான் விக்ரம் எஸ். இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தையான மறைந்த விஞ்ஞானி விக்ரம் சாரா பாய் நினைவாக விக்ரம் என இந்த ராக்கெட்டுக்கு பெயரிடப்பட்டிருக்கிறது.

ராக்கெட்டில் உள்ள செயற்கைக்கோள்கள்
இந்த விக்ரம் எஸ் ராக்கெட் முன்னதாக நவம்பர் 15 ஆம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் வானிலை மோசமாக இருந்த காரணத்தால் அன்று ராக்கெட் விண்ணில் ஏவப்பட வில்லை. தொடர்ந்து நாளை ராக்கெட் விண்ணில் ஏவப்பட இருக்கிறது. புவியின் மேற்பரப்பில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் இந்த ராக்கெட்டில் உள்ள செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.

ஊக்குவிக்கும் இஸ்ரோ
இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் தனியார் நிறுவனம் என்பது இது முதன்முறை. இஸ்ரோ இதுபோன்ற பல தனியார் நிறுவனங்கள் தயாரித்த ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த திட்டமிட்டிருக்கிறது. இஸ்ரோவின் கண்டுபிடிப்புக்கும் ஆராய்ச்சிக்கும் இதுபோன்ற தனியார் புத்தாக்க நிறுவனங்கள் பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications