Google Pay, போன்பே மூலம் ரூ.2000க்கு மேல் அனுப்பினால் ஜிஎஸ்டி-யா? மத்திய அரசு தந்த விளக்கம் இதோ..
கூகுள் பே (Google pay), போன்பே (PhonePe), பேடிஎம் போன்ற யுபிஐ (UPI) செயலிகளை நாடு முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். அதாவது இதுபோன்ற யுபிஐ செயலிகள் மூலம் நாம் அனைவரும் வங்கிகளுக்குச் செல்லாமல் எளிதாகப் பணப்பரிமாற்றம் செய்து வருகிறோம். அதுவும் யுபிஐ செயலிகள் மூலம் ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்குச் சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது
ஜிஎஸ்டி?
இந்நிலையில் கூகுள் பே, பேடிஎம் உள்பட அனைத்து யுபிஐ செயலிகளிலும் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் பணப்பரிமாற்றம் செய்யும்பட்சத்தில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகின. ஆனால் தற்போது யுபிஐ செயலிகள் பரிவர்த்தனைகளில் ரூ.2,000 ரூபாய்க்கும் மேல் செலவழிக்கும்போது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

குறிப்பாக நாடு முழுவதும் செல்போன் மூலம் நடைபெறும் யுபிஐ பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் யுபிஐ பரிவர்த்தனைகளுக்குச் சேவை வரி விதிக்கப்படும் என்று தகவல் வெளியானது. அதுவும் ரூ.2000-க்கும் அதிகமான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும் இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
ஆனால் தற்போது இந்த தகவலை மத்திய அரசு மறுத்தது. மேலும் இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் ஒரு விளக்கம் அளித்துள்ளது. அதில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது பற்றி வெளியான செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் முற்றிலும் தவறானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இதுபோன்ற ஒரு திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்றும் மத்திய நிதி அமைச்சகம் சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. குறிப்பாக வணிகர்கள் தொடர்புடைய சில குறிப்பிட்ட யுபிஐ பணம் வசூலிப்புக் கருவிகள் மூலமான பரிவர்த்தனைகளுக்கு மட்டும் பொருந்தும் என்றும் நுகர்வோருக்கும் அதற்கு எந்த தொடர்பும் இல்லை என மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது.
ஏப்ரல் 1 முதல் புதிய விதிகள்:
கூகுள் பே (Google Pay), போன் பே (PhonePe), பேடிஎம் (paytm) போன்ற யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தும் மக்களுக்கு கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய விதிமுறைகள் வந்துள்ளன. அதன்படி யுபிஐ செயலிகளுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் குறிப்பிட்ட காலத்திற்குச் செயல்பாட்டில் இல்லையென்றால் அவை வங்கி கணக்கில் இருந்து அகற்றப்படும் என்று இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் (NPCI) தெரிவித்துள்ளது.
அதாவது உங்களது வங்கி கணக்கில் செயலற்ற மொபைல் இணைக்கப்பட்டிருந்தால் அது நீக்கப்படும். பின்பு கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ மூலம் நீங்கள் பணம் அனுப்ப முயற்சிக்கும் போது இது உங்களுக்குப் பிரச்சனையை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டில் சைபர் குற்றங்கள் அதிகரித்து உள்ளதால் NPCI இந்த முடிவை எடுத்துள்ளது.
செயலற்ற மொபைல் நம்பர் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால் கண்டிப்பாக அவை யுபிஐ அமைப்புகளுக்குள் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறுகளையும் ஏற்படுத்தக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தான் வங்கி கணக்கில் செயலற்ற மொபைல் இணைக்கப்பட்டிருந்தால் அது நீக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நம்பர் உங்கள் வங்கி கணக்குடன் இணைந்திருக்கிறதா என்பதை ஒன்றுக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். மேலும் உங்களது வங்கி கணக்கில் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் செயலில் இல்லை என்றாலோ அல்லது சிறிது காலமாக ரீசார்ஜ் செய்யவில்லை என்றாலோ அந்த நம்பர் உங்களுடைய பெயரில் இருக்கிறதா என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதற்கு நீங்கள் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா அல்லது எந்த ஆபரேட்டரை பயன்படுத்தியிருக்கிறீர்களோ அவர்களுடைய கஸ்டமர் கேருக்கு தொடர்பு கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications