தொடரும் வதந்திகள்- நஞ்சுண்டாபுரத்தில் கொரோனா மூன்றாவது அலை?- வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை!
நஞ்சுண்டாபுரத்தில் கொரோனா தொற்று மூன்றாவது அலை தொடங்கியது என பரவும் போலி தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் இந்த தகவல்களை பகிர்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கோவையில் கொரோனா பரவல் தொடர்பாக போலி தகவல்கள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாவட்ட மக்களிடையே தொடங்கி தமிழகத்தில் பல பகுதிகளிலும் கோவை மாவட்ட நஞ்சுண்டாபுரம் பகுதி குறித்து வதந்திகள் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. அந்த தகவல் படிப்பவர்கள் அனைவரையும் அச்சத்திற்கு உள்ளாக்கும் வகையில் இருக்கிறது. மேலும் அந்த தகவலில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பரவும் தகவல்களில்., இந்தியாவே திரும்பி பார்க்க வைக்க போகும் கோவை- நஞ்சுண்டாபுரம். 965 பேருக்கு பரிசோதனை செய்ததில் 680 பேருக்கு பாஸிடிவ் வந்துள்ளது. நஞ்சுண்டாபுரம் பகுதியில் இதுவரை 30 பேர் கொரோனாவால் இறந்து விட்டார்கள். கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை வளாகத்தில் குழந்தைகளுக்கு ஓ2 வசதியுடன் சுமார் 500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. இந்த செய்தி நியூஸ்பேப்பரில் வந்துள்ளது. 3வது அலை கோவையில் இருந்து தொடங்குகிறது உசார். என குறிப்பிடப்ட்டுள்ளது.

பரவும் வதந்திகள் உள்ள தகவல்கள் படிப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது. இது போலி தகவல் என அறிந்தும் சிலர் இதை வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்து வருகிறார்கள். இதையடுத்து இதுபோன்ற வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகராட்சி ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நஞ்சுண்டாபுரத்தில் 650 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது எனவும் கடந்த 10 நாட்களில் 56 நபர்களுக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார். இதையடுத்து பொதுமக்கள் இதுபோன்ற தகவலை பரப்பவும் வேண்டாம் நம்பவும் வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த தகவல்களை பரப்பிய நபர்கள் மீது போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட உள்ளதாகவும் கோவை மாவட்ட அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
வாட்ஸ்அப்-ல் இதுபோன்ற போலி தகவல்களை படித்து அச்சம் அடைவதோடு அதை பரப்பி பிறரையும் அச்சத்துக்கு உள்ளாக்குவது தங்களது நேரத்தை வீணடிக்கும் செயலாகும். எனவே இதுபோன்ற போலி தகவல்களை பரப்ப வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.


Click it and Unblock the Notifications