ஆதார் கார்டு அப்டேட் செய்யவில்லையா? அப்போ பேங்க் ஆப் வழியாக பணம் அனுப்ப முடியாது! எந்த வங்கியில்? உண்மையா?
Fact Check: எஸ்பிஐ பேங்க் (SBI Bank) மற்றும் எஸ்பிஐ யோனோ ஆப்பை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மத்தியில் புதிய குழப்பம், சந்தேகம் கிளம்பியுள்ளது. அது என்னவென்றால் - ஆதார் அப்டேட் (Aadhaar Update) செய்யவில்லை என்றால் எஸ்பிஐ யோனோ (SBI Yono) ஆப் ஆனது பிளாக் (Block) செய்யப்படுமா? என்பது தான்!
சமூக ஊடக தளங்களில் தீயாக பரவி வரும் "ஒரு மெசேஜ்" ஆனது ஆதார் விவரங்களை புதுப்பிக்க தவறிய பயனர்களின் எஸ்பிஐ யோனா ஆப் ஆனது பிளாக் செய்யப்படும் என்று கூறுகிறது. கூடவே ஆதார் அப்டேட் செயல்முறையை முடிக்க கீழே உள்ள ஏபிகே (APK) ஃபைல்-ஐ பதிவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்யுமாறும் "அந்த மெசேஜ்" வலியுறுத்துகிறது.

இருப்பினும், பிஐபி (PIB) என்கிற பத்திரிகை தகவல் பணியகத்தின் உண்மை சரிபார்ப்பு பிரிவு (Fact Check unit) ஆனது இந்த "மெசேஜ்" தவறானது மற்றும் போலியானது என்று குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்த எக்ஸ் (X) பதிவில், எஸ்பிஐ யோனோ ஆப் முடக்கப்படும் என்ற வார்னிங் மெசேஜ் போலியானது என்பதை பிஐபி-யின் உண்மை சரிபார்ப்பு குழு தெளிவுபடுத்தியது.
குறிப்பிட்ட பதிவானது, ஆதார் அப்டேட் செய்யவில்லை என்றால் எஸ்பிஐ யோனோ ஆப் பிளாக் செய்யப்படும் என்று எஸ்பிஐ பெயரின்கீழ் சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு மெசேஜ் போலியானது. பயனர்கள் எந்த ஏபிகே ஃபைல்களையும் பதிவிறக்கம் செய்யவோ அல்லது தனிப்பட்ட, வங்கி அல்லது ஆதார் தொடர்பான விவரங்களை பகிரவோ வேண்டாம். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அதிகாரப்பூர்வமற்ற மெசேஜ்கள் மூலம் இத்தகைய தகவல்களை தேடுவதில்லை என்றும் பிஐபி எச்சரித்துள்ளது.
ஒருவேளை நீங்கள் இதுபோன்ற ஆப் அல்லது ஆவணத்தை பதிவிறக்கம் செய்தால் என்ன நடக்கும்? எஸ்பிஐ-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, ஆண்ட்ராய்டு டிவைஸ்களில் பெரும்பாலும் ஏபிகே பைல்களாக விநியோகிக்கப்படும் மோசடி ஆப்களை பதிவிறக்குவது அல்லது பிடிஎப்கள் (PDF) அல்லது வோர்ட் (Word) பைலட்கள் போன்ற தீங்கிழைக்கும் ஆவணங்களை திறப்பது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
இந்த பைல்கள் உடனடி நிதி இழப்பு, தனிப்பட்ட மற்றும் வங்கி தரவு திருட்டு அல்லது பயனரின் டிவைஸை நீண்டகால "சமரசத்திற்கு" (Long-term compromise) வழிவகுக்கும். இத்தகைய தீங்கிழைக்கும் பைல்கள் டிவைஸிற்குள் மறைந்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை திறக்கப்படும் வரை அல்லது அனுமதிகள் வழங்கப்படும் வரை பெரும்பாலும் பாதிப்பில்லாததாக தோன்றும்.
இதுபோன்ற ஆவணங்களில் மறைக்கப்பட்ட தீங்கிழைக்கும் பேலோடுகள் (Hidden malicious payloads) இருக்கலாம். அவற்றில் ஸ்கிரிப்டுகள் அல்லது உட்பொதிக்கப்பட்ட இயங்கக்கூடிய பைல்கள் திறக்கப்படும்போது தானாகவே இயங்கும். பல சந்தர்ப்பங்களில், இது ஸ்பைவேர், ரான்சம்வேர் அல்லது ட்ரோஜன் மால்வேரை இன்ஸ்டால் செய்வதற்கு வழிவகுக்கும்.
இந்த ஆவணங்கள் அல்லது ஆப்கள் - லாக்-இன் விவரங்கள், வங்கி தகவல் அல்லது ஆதார் விவரங்களை திருட வடிவமைக்கப்பட்ட ஃபிஷிங் வலைத்தளங்களுக்கும் பயனர்களை திருப்பிவிடலாம். பயனர்கள் இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான மெசேஜ்களை கண்டால் [email protected] என்கிற முகவரிக்கு தேவையான நடவடிக்கைக்காக புகாரளிக்கலாம்.
எஸ்பிஐ யோனோ ஆப் என்பது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் விரிவான டிஜிட்டல் வங்கி தளமாகும். இந்த ஆப், பயனர்கள் அக்கவுண்ட்களை திறக்க, பணம் அனுப்ப, பணம் பெற, பில்களை செலுத்த, ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய மற்றும் முன் அங்கீகரிக்கப்பட்ட கடன்களை அணுக அனுமதிக்கிறது. இது மற்ற வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு, யுபிஐ பேமண்ட்களுக்கான தளத்தை பயன்படுத்தவும் உதவுகிறது.


Click it and Unblock the Notifications