தனிநபர் தகவல் பாதுகாப்பு: ஃபேஸ்புக்கின் புதிய நெறிமுறைகள் 11 இந்திய மொழிகளில் தயார்.!
மார்ச் மாதம் இந்நிறுவனம், தனிநபர் தகவல் தொடர்பான தன்னுடைய கொள்கைகளை எளிமைப் படுத்தியும், தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையிலும் திருத்தி வெளியிட்டது.
கேம்பிரிட்ஜ் அனலிடகா வழியாக வெளியான தகவல்கள் தொடர்பான பிரச்சினை பேஸ்புக் நிறுவனத்திற்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. அமெரிக்காவின் நெருக்குதல்கள் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜீகர்பெர்க்கின் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் 2018 மே மாதம் 25ஆம் தேதி முதல் ஐரோப்பிய நாடுகளில் அமலுக்கு வந்துள்ள பொதுத் தகவல் பாதுகாப்பு நெறிமுறைகள் தொடர்பான புதிய சட்டம், (General Data Protection Regulation (GDPR)) பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களுக்கு புதிய கடிவாளத்தைப் போட்டுள்ளன.

இத்தகைய சூழ்நிலையில், உலகின் மிகப்பெரும் சமூக வலைதளமாக விளங்கும் முகநூல் நிறுவனம், தனிநபர் தகவல் பாதுபாப்பு தொடர்பான தன்னுடைய கொள்கைகளை மறு ஆய்வு செய்ய முன்வந்துள்ளது. 11 இந்திய மொழிகளில் இந்தத் தகவல் பாதுகாப்பு தொடர்பான புதிய நெறிமுறைகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. முதலில் ஆன்ட்ராய்டு மொபைல் போன் மூலம் முகநூலைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இவ்வசதி கிடைக்கவுள்ளது. வரும் நாட்களில் பேஸ்புக் வாடிக்கையாளர்கள் தகவல் பாதுகாப்பு தொடர்பாகப் பல புதிய வசதிகளை அனுபவிக்க உள்ளனர்.

தகவல் பாதுகாப்பில் புதிய அம்சங்கள்
விளம்பரங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட நம்முடைய தகவல்கள், பொதுப் பார்வைக்காக வெளிப்படுத்தப்பட்ட நம்முடைய தகவல்கள், முகத் தோற்றத்தின் வழியாக பயனாளரை அங்கீகரிக்கும் தொழில்நுட்பத் தகவல், பாதுகாப்பு நெறிமுறைகள் தொடர்பான பேஸ்புக் நிறுவன கொள்கைள் ஆகிய அனைத்தும் நமக்கு வெளிப்படையாகக் காண்பிக்கப்படும். "எங்களுடைய சேவையை மேம்படுத்தும் வகையிலும் தகவல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் பயனாளர்களிடம் எங்களுடைய புதிய நடைமுறைகள் தொடா்பான கருத்துக்களைத் தெரிவித்து அதற்கேற்ற தகவல்கள் கேட்டுப் பெறப்படும்" என்கிறார் பேஸ்புக் நிறுவனத்தின் தனிநபர் தகவல் அலுவலர், எரின் இகன் (Erin Egan).

முதலில் ஐரோப்பா மற்றும் கனடா நாட்டுப் பயனாளர்களுக்கு
மார்ச் மாதம் இந்நிறுவனம், தனிநபர் தகவல் தொடர்பான தன்னுடைய கொள்கைகளை எளிமைப் படுத்தியும், தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையிலும் திருத்தி வெளியிட்டது. திருத்தப்பட்ட நடைமுறைகள் தொடர்பான வசதிகள் உடனடியாக ஐரோப்பா மற்றும் கனடா நாட்டுப் பயனாளர்களுக்குக் கிடைத்தன. தற்போது உலகில் உள்ள பிற நாட்டுப் பயனாளர்களின் பயன்பாட்டுக்காக வெளிவரவிருக்கிறது.

தகவல் பாதுகாப்பு அம்சமும் பயனாளர்களின் தேர்வும்
இந்தப் புதிய வசதியின்படி, பேஸ்புக் பயன்பாட்டில் தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பாகத் தாங்கள் ஏற்கனவே தெரிவு செய்திருந்த தேர்வுகள் காண்பிக்கப்படும். பயன்படுத்த வேண்டாம் என முடிவு செய்த பகுதிகள் காண்பிக்கப்படாது. உதாரணமாக, முகத் தோற்ற அடிப்படையிலான அங்கீகாரம், விளம்பரத்தை அடிப்படையாகக் கொண்ட தகவல்கள் ஆகியவற்றைக் காண்பிக்க வேண்டாம் (disabled ) என நீங்கள் ஏற்கனவே முடிவு செய்திருந்தால் அது தொடர்பான கருத்துக்கள் மீண்டும் உங்களிடம் கேட்கப்படாது. நீங்கள் ஏற்கனவே தேர்வு செய்திருந்த அம்சங்கள் மட்டுமே உங்கள் பேஸ்புக் பக்கத்தில் தோன்றும். ஒரு வேளை, பயனாளர்கள் தங்களுடைய விருப்பங்களை மாற்றிக் கொள்ள விரும்பினால் அதற்கான வாய்ப்பு வழங்கப்படும். பேஸ்புக்கில் நுழைந்து Settings > Privacy Shortcuts பகுதிக்குச் சென்று தங்களுக்கு ஏற்றப் புதிய விருப்பங்களைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

முக்கியமான மூன்று விசயங்கள்
சமூக ஊடக நிபுணர்களின் கருத்துக்களின்படி, பேஸ்புக்கின் தகவல் பாதுகாப்பு தொடர்பான இந்தப் புதிய மாற்றங்கள் மூன்று முக்கியமான விசயங்களைக் கருத்தில் கொண்டு செய்யப்பட்டுள்ளது. பேஸ்புக் பயனாளர்கள் எளிமையாகப் புரிந்துகொள்வதற்கு ஏற்ற மொழி மற்றும் வடிவமைப்பு, பயனாளர்களின் அனுபவத்திற்கு ஏற்பத் தகவல்களை மறுஆய்வு செய்வதற்கான கருத்துக் கேட்பு வசதி, மாற்றி அமைக்கப்படும் புதிய நெறிமுறைகளைப் பயனாளா்களுக்கு Facebook, email, SMS ஆகியவற்றின் மூலமாக உடனடியாகத் தெரியப்படுத்துதல் ஆகிய மூன்று விசயங்களை உள்ளடக்கியுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.


புதிய உரிமைகள் எதுவும் கோரப்படாது
"பதிவிடப்படும் தகவல்களை நாங்கள் எவ்வகையில் பயன்படுத்துகிறோம் என்பதை பயனாளர்கள் புரிந்து கொள்வது முக்கியமானதாகும். ஏப்ரல் மாதத்தில் இருந்து, தகவல் பாதுகாப்பு தொடர்பான எங்களுடைய கொள்கைகளை மிகத் தெளிவாக விளக்கி அவற்றை மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகளின் மூலமாகப் பயனாளர்களுக்குத் தெரியப்படுத்தத் தொடங்கிவிட்டோம். வருகின்ற நாட்களில் இவற்றை முகநூல் வழியாகவும் பயனாளர்கள் அறிந்து கொள்ளலாம். பயனாளர்களின் தகல்களைச் சேகரித்து அவற்றை பேஸ்புக் மூலமாகப் பயன்படுத்தவோ அல்லது பிறருக்குப் பகி்ர்வதற்காகவோ புதிதாக எந்த உரிமையையும் பயனாளர்களிடம் எங்கள் நிறுவனம் கேட்கவில்லை" என்கிறார் பேஸ்புக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்.


Click it and Unblock the Notifications