பேஸ்புக் காதலி: கத்தி முனையில் பணம், நகை அபேஸ் செய்த 17 வயது சிறுவர்கள்!
சமூக வலைத்தளத்தில் பெண் போலப் போலியான கணக்கிலிருந்து ஆண்களை மயக்கி அவர்களிடமிருந்து பணம், நகை, ஸ்மார்ட்போன் மற்றும் ஏ.டி.எம் கார்டு போன்றவற்றைத் திருடிய 17 வயது சிறுவர் கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். எப்படி இந்த சிறுவர்கள், ஆண்களை ஏமாற்றி தங்கள் வலையில் சிக்க வைத்துள்ளனர் என்று தெரியுமா?

பேஸ்புக் காதலி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சண்முக சுந்தரம் என்ற 36 வயது இளைஞர், பேஸ்புக்கில் பெண் பெயரில் இயங்கிவரும் பேஸ்புக் அக்கௌன்ட்டிற்கு நட்பு அழைப்பு விடுத்துள்ளார். நட்பு அழைப்பு விடுத்த சிறிது நேரத்தில் அந்த பெண்ணுடன் நண்பரானார் சண்முக சுந்திரம், பெண் பெயரில் இயக்கி வரும் போலியான கணக்கிலிருந்து 17 வயது சிறுவர்கள் பெண் போல அவருக்குப் பதில் அளித்துள்ளனர்.

ஆண் குரலைப் பெண் குரலாக மாற்றும் பிரத்தியேக செயலி
சண்முக சுந்தரத்திடம் பேசி பழகி ஆசை வார்த்தை கூறி, அவரை மயக்கிய சிறுவன், சாட்டிங்கை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்று போனில் சண்முக சுந்தரத்துடன் பெண்குரலில் பேசி இருக்கிறான். ஆண் குரலைப் பெண் குரலாக மாற்றும் பிரத்தியேக செயலியைப் பயன்படுத்தி இந்த சிறுவன் பெண் போலப் பலமணிநேரம் சண்முக சுந்தரத்துடன் காதல் உரையாடலில் கொஞ்சியுள்ளான்.

தனிமையில் சந்திக்க வேண்டும்
ஒருகட்டத்தில் சண்முக சுந்தரத்தைத் தனிமையில் சந்திக்க வேண்டும் என்று ஆசை வார்த்தை கூறி சென்னைக்கு வரவழைத்துள்ளான். சென்னை வந்த சண்முக சுந்தரத்தை கோயம்பேட்டிலிருந்து மாதவரம் பேருந்து நிலையத்துக்கு வரச் சொன்ன போலி காதலி, அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வருமாறு கூறியுள்ளான். பல ஆசைகளுடன் காத்திருந்த சமூக சுந்தரத்திற்கு அதிர்ச்சி அப்பொழுது தான் வந்து தாக்கியுள்ளது.

கத்தி முனையில் மிரட்டல்
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காத்திருந்த சண்முக சுந்தரத்தை, 5 சிறுவர்கள் சுற்றி வளைத்துக் கத்தி முனையில் மிரட்டத் துவங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் 17 வயது மட்டுமே நிரம்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தனது ஆசை காதலியைச் சந்திக்கும் ஆவலில் வந்து திருட்டு பாய்ஸ்சிடம் சிக்கிய முரட்டு சிங்கிள் ஆகிவிட்டோம் என்றும் அவருக்கு அப்பொழுது தான் விளங்கியுள்ளது.

பணம் நகை கொள்ளை
கத்திமுனையில் சண்முக சுந்தரத்தை மிரட்டிய சிறுவர்கள், அவரிடமிருந்து 5 ஆயிரம் ரூபாய் பணம், தங்க சங்கிலி, மோதிரம், ஸ்மார்ட்போன் போன்றவற்றை வழிப்பறி செய்துள்ளனர். அதுமட்டுமின்றி அவரிடமிருந்த ஏடிஎம் கார்டின் ரகசிய எண்ணையும் மிரட்டி வாங்கி, ஏ.டி.எம்மிலிருந்து பணம் எடுக்க 3 சிறுவர்கள் சென்றுள்ளனர்.

சிறுவர்கள் கைது
ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் சண்முக சுந்தரத்தை இரண்டு சிறுவர்கள் கத்தி முனையில் மடக்கி வைத்துள்ளனர். அந்தப்பக்கமாக வந்த ரோந்து போலீசாரின் வாகனத்தைக் கண்டு கூக்குரலிட்ட சண்முக சுந்தரத்தை காவல்துறையினர் மீட்டனர். தப்பி ஓடிய இரண்டு சிறுவர்களையும் விரட்டி பிடித்த காவல்துறையினர், பணம் எடுக்கச் சென்ற மூவரையும் பிடிக்க முயற்சி செய்துள்ளனர்.

பல நாட்களாக வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல்
ஆனால் பணம் எடுக்க சென்ற 3 சிறுவர்களும் போலீசாரைக் கண்டதும் தப்பிச்சென்று விட்டதாகக் கூறப்படுகின்றது. பேஸ்புக்கில் பெண்கள் போல பழகி இவர்கள் பல நாட்களாக வழிப்பறியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. போலீசாரிடம் இருந்து தப்பிச்சென்ற யுவராஜ் மற்றும் சதீஷ் ஆகியோர் கிழக்கு கடற்கரைச் சாலையில் விபத்தில் சிக்கிப் பலியானதும் தெரியவந்துள்ளது.

உஷராக இருங்கள்
முகம் தெரியாத நபர்களிடம் தங்களின் தனிப்பட்ட விபரங்களைப் பகிர வேண்டாம் என்றும், நம்ப வேண்டாம் என்றும் சமூக வலைத்தளங்களே அறிவுரை வழங்கி வருகிறது. இருப்பினும் சபலத்தால் பல முரட்டு சிங்கிள்கள் இந்த மாதிரியான வழிப்பறி கும்பல்களிடம் சிக்கி சின்னாபின்னம் ஆகிவிடுகின்றனர். இனியாவது கொஞ்சம் உஷராக இருங்கள் சிங்கில்ஸ்களே!


Click it and Unblock the Notifications