ஏரி உடைஞ்சா மீன் ஏரியாக்கு வந்து தான் ஆகனும்.. இனி சென்னையில் தான் iPhone 14 உற்பத்தி!
ஐபோன் 14 மாடலை இந்தியாவில் தயாரிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம், புதிய ஐபோன் 14 சீரிஸ் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் முக்கிய பாதுகாப்பு திறன்களை கொண்டிருக்கிறது என ஆப்பிள் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஐபோன் 14 உற்பத்தித் தொடங்க காரணம் என்ன என்று பார்க்கலாம் வாங்க.

பட்டியலில் இணைந்த ஐபோன் 14..
ஆப்பிள் நிறுவனம், 2017 ஆம் ஆண்டு ஐபோன் எஸ்இ மூலம் இந்தியாவில் ஐபோன்களை உற்பத்தி செய்யத் தொடங்கியது. இதையடுத்து ஐபோன் 12, ஐபோன் 13 உள்ளிட்ட பல மாடல்களை ஆப்பிள் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் இந்தப் பட்டியலில் ஐபோன் 14ம் இணைந்திருக்கிறது.

மேம்படுத்தப்பட்ட கேமரா உடன் அறிமுகம்..
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஆப்பிள் iPhone 14 சீரிஸ்களை மேம்படுத்தப்பட்ட கேமரா, சக்திவாய்ந்த சென்சார்கள் மற்றும் அவசர கால SOS ஆதரவுகளுடன் அறிமுகம் செய்தது. இந்த தொடரில் நான்கு மாடல்கள் இடம்பெற்றது. அது ஐபோன் 14, ஐபோன் 14 ப்ளஸ், ஐபோன் ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆகும்.

சென்னையில் உற்பத்தி..
ஐபோன் 14 உள்ளூர் உற்பத்தியை ஆப்பிள் தொடங்குகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தைக்கு வருவதோடு, ஏற்றமதிக்கும் உபயோகிக்கப்படும் என கூறப்படுகிறது. ஐபோன் 14 உற்பத்தி ஆனது சென்னையில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஃபாக்ஸ்கானில் தொடங்க இருக்கிறது.

இந்தியாவில் தயாரிப்பு தொடங்குவதில் மகிழ்ச்சி..
இதுகுறித்து ஆப்பிள் PTIக்கு தெரிவித்த தகவலை பார்க்கலாம். அதில் ஐபோன் 14ஐ இந்தியாவில் தயாரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். புதிய ஐபோன் 14 சீரிஸ்கள் ஆனது புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் முக்கியமான பாதுகாப்பு திறன்களை கொண்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளது.
ஐபோன் 14 செப்டம்பர் 7, 2022 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்காவில் விற்பனைத் தொடங்கும் அதே நாளில் இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களும் கிடைக்கிறது.

பல நன்மைகள்..
ஆப்பிள் தனது ஆன்லைன் ஸ்டோரை செப்டம்பர் 2020 இல் நாட்டில் அறிமுகப்படுத்தியது. ஆப்பிள் இந்தியாவில் கால் பதித்த 22 ஆண்டுகளில் சமீப காலமாக தான் இந்தியாவில் மிகத் தீவிரமாக செயல்படத் தொடங்கி இருக்கிறது.
தற்போது சமீபத்திய மாடலின் உற்பத்தியே தொடங்க இருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.
இதன்மூலம் இந்தியாவில் வேலை வாய்ப்பு அதிகரிப்பதோடு, இறக்குமதி வரி குறைவு, ஏற்றுமதி அதிகரிப்பு என பல நன்மைகள் கிடைக்கும்.

25 சதவீத ஐபோன் உற்பத்தி..
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவை தனது உற்பத்தி மையமாக மாற்றும் முயற்சிகளை இரட்டிப்பாக்க இருக்கிறது. 2025 ஆம் ஆண்டுக்குள் 25 சதவீத ஐபோன் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்ற ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேக் இன் இந்தியாவை ஊக்குவிக்கும் வகையிலான இந்திய அரசின் செயல்பாடுகளே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

ஆப்பிள் ஆய்வாளர் ஜேபி மோர்கன் வெளியிட்ட தகவல்..
இந்த ஆண்டு நிலவரப்படி ஆப்பிள் நிறுவனம் சீனாவில் அதன் உற்பத்தியை குறைத்துள்ளதாகவும் அதேநேரத்தில் சீனாவுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் அதன் உற்பத்தியை அதிகரித்ததாகவும், இதே நிலை தொடரும் எனில் இந்தியாவில் உள்ள ஃபாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரான் உற்பத்தி நிலையங்களில் தான் ஐபோன் 15 மாடல்களின் அதிக உற்பத்தி செய்யப்படும் எனவும் ஆப்பிள் ஆய்வாளர் ஜேபி மோர்கன் தெரிவித்தார்.

இறக்குமதி குறையும்.. உற்பத்தி அதிகரிக்கும்..
ஐபோன் 14 மாடல்கள் இந்தியாவில் ஆப்பிள் உற்பத்தி செய்ய இருக்கிறது. தொடர்ந்து இந்தியாவில் அதிக ஐபோன் உற்பத்தி ஒதுக்கீடுகளை நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜேபி மோர்கன் குறிப்பிட்டார்.
சந்தை நுண்ணறிவு நிறுவனமான சைபர் மீடியா ரிசர்ச் (சிஎம்ஆர்) வெளியிட்ட தகவலில், ஐபோன்களின் இறக்குமதி 2019 ஆம் ஆண்டில் 50 சதவீதமாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 15 சதவீதமாக குறையும் என குறிப்பிட்டுள்ளது.
ஆப்பிளின் உள்நாட்டு உற்பத்தி 85 சதவீதமாக உயரும் என கணிக்கப்படுவதே இறக்குமதி குறையும் என மதிப்பிடுவதற்கு காரணம் ஆகும்.

ஐபோன் தயாரிப்பு அதிகரிக்கக் காரணம்..
முன்னதாக ஆப்பில் நிறுவனம் சீனாவில் பெரும்பாலான ஐபோன்களை தயாரித்திருக்கிறது. ஆப்பிள் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனமாகும்.
சமீபகாலமாக அமெரிக்காவும் சீனாவும் பொருளாதார ரீதியிலான மோதல்களை மேற்கொண்டு வருகிறது. எப்போது வேண்டுமானாலும் சிக்கல் வரும் என்பதை யூகித்த ஆப்பிள் மாற்று வழியை தேர்ந்தெடுத்துள்ளது. அதுதான் இந்தியாவில் ஐபோன் தயாரிப்பு அதிகரிக்கக் காரணம் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications