Gas சிலிண்டர் புது ரூல்ஸ்.. e-KYC செய்யாத வீட்டுக்கு கேஸ் வராது.. ஆக.16 க்குள் இதை செய்யணும்.. எப்படி செய்வது?
இந்தியாவில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் (LPG Gas Cylinder) பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், ஆதார் சார்ந்த இ-கேஒய்சி (e-KYC) சரிபார்ப்பை ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்குகள் முடிக்குமாறு கேஸ் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் எச்பிசிஎல் ஆகியவை கெடு வைத்துள்ளன.
இதற்காக வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் (SMS) வழியாக அலர்ட் கொடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ் மானிய விலையில் கேஸ் சிலிண்டர்களை பெறும் வாடிக்கையாளர்களும், மற்ற வீட்டு உபயோக கேஸ் வாடிக்கையாளர்களும் இந்த இ-கேஒய்சி நடைமுறையை கட்டாயம் செய்து முடிக்க வேண்டி இருக்கிறது.

போலியாக பெறப்பட்ட கேஸ் இணைப்புகளை முடக்குதல், முறைகேடாக பெறப்பட்டு வரும் கேஸ் சிலிண்டரை திரும்பப் பெறுதல், 2 கேஸ் கனெக்சனை வைத்திருந்தால் அதை தவிர்த்தல் (எல்பிஜி மற்றும் பிஎன்ஜி) ஆகியவற்றுக்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் எச்பிசிஎல் ஆகியவை இந்த கேஒய்சி நடைமுறையை செய்கின்றன.
இப்படி நிர்ணயிக்கப்பட்ட ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் இ-கேஒய்சி சரிபார்ப்பை முடிக்காமல் போனால், வாடிக்கையாளர்களின் கேஸ் இணைப்புகள் முற்றிலும் ரத்து செய்யப்படாது. ஆகவே, இந்த புதிய நடைமுறையால் சிக்கல் ஏற்படும் என்று எண்ண வேண்டாம். இருப்பினும், கேஸ் சிலிண்டர் பெறுவது தற்காலிகமாக இடைநிறுத்தம் (Temporary Suspension) செய்யப்பட வாய்ப்புள்ளது.
அதாவது, கேஒய்சி விவரங்களை கொடுக்கும் வரை கேஸ் சிலிண்டர் கொடுப்பது ஒத்தி வைக்கப்படலாம். மேலும், வீட்டு உபயோகத்திற்கான மானிய விலையில் அல்லது குறைந்த விலையில் கேஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் தகுதியையும் வாடிக்கையாளர்கள் இழக்க நேரிட வாய்ப்புள்ளது. உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு கிடைக்கும் சிலிண்டருக்கும் மானிய தொகை தவறலாம்.
ஏற்கனவே, முகவர்கள் மூலமாகவோ அல்லது சம்பந்தப்பட்ட கேஸ் நிறுவனங்களின் ஆப்கள் வழியாகவோ பயோமெட்ரிக்/இ-கேஒய்சி முறையை செய்து முடித்தவர்களுக்கு இந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி கெடு பொருந்தாது. இதுவரை செய்யாதவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆகவே, உடனடியாக இந்த இ-கேஒய்சி நடைமுறையை முடிப்பது வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் தாமதத்தை தவிர்க்கும்.
ஆன்லைனில் இ-கேஒய்சி செய்வதற்கான வழிமுறைகள்: வாடிக்கையாளர்கள் தங்களது கேஸ் நிறுவனத்துக்கு ஏற்ப ஆப்கள் அல்லது வெப்சைட்டில் இதை செய்து கொள்ளலாம். இருப்பினும், ஆப் வழியாக செய்வது மொபைல் நம்பர் மற்றும் ஓடிபி அணுகலுடன் எளிதாக இருக்கும். இண்டேன் கேஸ் இணைப்பு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் IndianOil ONE ஆப்பை பயன்படுத்தலாம்.
பாரத் கேஸ் இணைப்பு வைத்து இருக்கும் வாடிக்கையாளர்கள் Hello BPCL ஆப்பை பயன்படுத்தி கொள்ளலாம். எச்பி கேஸ் இணைப்பை வைத்து இருக்கும் வாடிக்கையாளர்கள் HP Pay ஆப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ஆப்களை கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் (Apple App Store) ஆகியவற்றில் இருந்து மட்டும் டவுன்லோட் செய்வது நல்லது.
அதேபோல சம்பந்தப்பட்ட கேஸ் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வெப்சைட் வழியாகவும் டவுன்லோட் செய்யலாம். வேறு எங்கும் இதுபோன்ற ஆப்களை பெற வேண்டாம். மேலும், முக அங்கீகாத்தை சரிபார்ப்பு செய்ய மத்திய அரசின் AadhaarFaceRD ஆப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். பிறகு சம்பந்தப்பட்ட கேஸ் நிறுவனத்தின் ஆப்களை ஓப்பன் செய்து கொள்ளுங்கள்.
இதில் கேஸ் இணைப்புடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரை கொடுத்து லாகின் செய்து கொள்ளுங்கள். பாஸ்வேர்ட், ஓடிபி கேட்கப்படும். இதையும் கொடுத்துவிடுங்கள். இப்போது உங்களது விவரங்கள் அதில் காண்பிக்கப்படும். இதில் இ-கேஒய்சி செய்யப்பட்ட வேண்டிய வாடிக்கையாளர்களுக்கு முகப்ப பக்கத்திலேயே கேஒய்சி விருப்பும் இருக்கும்.
இதை கிளிக் செய்தால் போதும், தேவையான விவரங்கள் கேட்கப்படும். ஆதார் நம்பருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் இருக்க வேண்டும். அதேபோல முக அங்கீகாரம் சரிபார்ப்பு செய்யப்படுவதால், செல்பீ கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை வைத்திருக்க வேண்டும். இப்படி எளிதாக முடிக்கலாம். இல்லையென்றால், கேஸ் நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று முடிக்கலாம்.


Click it and Unblock the Notifications