ரூ.1000 UPI பணம் போச்சு.. ஆனா, கணக்கில் வரல.. Google Pay, PhonePe, Paytm இருந்தா, இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க!
கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ (UPI) ஆப்களை பயன்படுத்தி பணத்தை அனுப்பும்போது, அனுப்பியவரின் பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து பணம் டெபிட் செய்யப்பட்டுவிடும்.. ஆனால், பெற வேண்டிய நபரின் பேங்க் அக்கவுண்ட்டுக்கு போய் சேராது.. இந்த நேரத்தில் என்ன நடக்கும்.. இதோ விவரங்கள்.
பொட்டிக்கடை முதல் சூப்பர் மார்கெட் வரையில் யுபிஐ பரிவர்த்தனைகள் வந்துவிட்டன. கூகுள் பே, பேடிஎம், போன்பே, பீம் போன்ற யுபிஐ ஆப்களை நேரடியாக பேங்க் அக்கவுண்ட்டுடன் லிங்க் செய்து, நொடியில் பணத்தை மாற்றி கொள்ள முடிகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளாக இருப்பதால், நெட்வொர்க் வீக், தொழில்நுட்ப கோளாறு, சர்வர் பிரச்சனைகளும் கூடவே வருகின்றன.

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளிலேயே பெரும்பாலான பணப்பரிமாற்றம் நடப்பதால், இதில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா பல்வேறு விதிகளையும் அமல்படுத்தி இருக்கின்றன. இந்த விதிகளின்படி பேமெண்ட்கள் நடப்பதால், தோல்வியுற்ற யுபிஐ பரிவர்த்தனைக்கான ரீபண்ட்டும் கிடைத்துவிடுகிறது.
தோல்வியுற்ற யுபிஐ பரிவர்த்தனைகள்: யுபிஐ ஆப்கள் வழியாக பேமெண்ட்களை செய்யும்போது, நெட்வொர்க் வீக்காக இருந்தாலோ, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டாலோ, சர்வர் பிரச்சனை நடந்தாலோ பணம் சென்று சேருவதில் சிக்கல் ஏற்பட்டுவிடும். அதாவது, அனுப்பியவரில் அக்கவுண்ட்டில் இருந்து பணம் டெபிட் செய்யப்பட்டுவிடும்.
ஆனால், பெற வேண்டிய நபருக்கு போய் சேர்ந்திருக்காது. இதனால் உடனே பணம் பறிபோய்விட்டது என்று நினைக்க வேண்டாம். உங்களது அக்கவுண்ட்டில் இருந்து எடுக்கப்பட்ட பணம், சரியான நபருக்கு செல்லவில்லை என்றால், அடுத்த நொடியே மீண்டும் உங்களது அக்கவுண்ட்டுக்கே திரும்பி வந்துவிடும். ஆகவே, பேலன்ஸை முதலில் சரிபார்த்து கொள்ளுங்கள்.
இப்படியும் வரவில்லை என்றால், 5 நாட்களுக்குள் வரவு வைக்கப்பட வேண்டும் என்று விதிகள் இருக்கிறது. இந்த விதிகளின்படி டெபிட் செய்யப்பட்ட பணம் அடுத்த 5 நாட்களுக்குள் மீண்டும் அதே அக்கவுண்ட்டுக்கு வந்துவிடும். இதற்கும் பணத்தை பெற வேண்டிய நபருக்கும் தொடர்பு கிடையாது. யுபிஐ ஆப்களில் பரிவர்த்தனை செய்வதால், டிரான்ஸாக்சன் ஐடி (Transaction ID) முக்கியமாகிறது.
ஆகவே, கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற எந்த யுபிஐ ஆப்களாக இருந்தாலும், தோல்வியுற்ற பரிவர்த்தனைகளின் (Failed Transaction) டிரான்ஸாக்சன் ஐடியை எடுத்து வைத்து கொள்ளுங்கள். 5 நாட்களுக்குள் பணம் திரும்ப வரவில்லை என்றால், இதை வைத்து பேங்குகள் மற்றும் யுபிஐ ஆப்களின் கஸ்டமர் கேரில் கேள்விகளை எழுப்ப முடியும். பணத்தையும் பெற முடியும்.
யுபிஐ ஆப்களில் அந்த பரிவர்த்தனையின் பக்கத்திலேயே புகார்களை தெரிவிக்க விருப்பங்கள் இருக்கிறது. இதை செய்து புகார் தெரிவிக்கலாம். ஒருவேளை பேங்குகளை தொடர்புகொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட பேங்குகளை ஆன்லைன் வழியாகவோ அல்லது நேரடியாகவோ அணுகலாம். இது நெட்வொர்க் வீக், தொழில்நுட்ப கோளாறு, சர்வர் பிரச்சனைக்கு மட்டுமேயாகும்.
பணத்தை தவறான அக்கவுண்ட்டுக்கு அனுப்பிவிட்டு, அந்த பணத்தை திரும்ப பெற கோரிக்கை வைக்க முடியாது. ஆகவே, ஒரு முறைக்கு இரண்டு முறை பணத்தை அனுப்பும் முன்பாக பெறுபவரின் விவரங்களை சரிபார்த்து கொள்ளுங்கள். இப்போது, யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப கோளாறு ஏற்படாமல் இருக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, பெரும்பாலும் பெறுபவருக்கு பணம் போகவில்லை என்றால், சில நொடிகளில் மீண்டும் அதே அக்கவுண்ட்டுக்கு பணம் வந்துவிடும். நெட்வொர்க் இல்லாத நேரத்தில் பேமெண்ட் முடிக்கப்படாது. டைம் அவுட் செய்யப்படும். இப்படி பல்வேறு பாதுகாப்பு விதிகளை ஆர்பிஐ மற்றும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா செய்துள்ளது.


Click it and Unblock the Notifications