வரிசை ரொம்ப பெருசு-முடிவுக்கு வந்ததா உலகின் பெரிய டிராஃபிக் ஜாம்?- வைரல் வீடியோ, சாட்டிலைட் புகைப்படம்!
ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளையும், ஐரோப்பிய நாடுகளையும் இணைக்கும் மிக முக்கியமான மனிதரால் உருவாக்கப்பட்ட கடல் வழித்தடம்தான் சூயஸ் கால்வாய். எகிப்தில் உள்ள இந்த கால்வாய் கடந்த 1859ம் ஆண்டில் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது. 193 கி.மீ. நீளம் கொண்ட இந்த கால்வாய் மூலம், மத்தியதரைக் கடல் செங்கடலுடன் இணைக்கப்பட்டது.
இந்த கால்வாய் வழியாக தினமும் சுமார் 50 கப்பல்கள் கடந்து செல்கின்றன. இதனால், உலக வா்த்தகத்தின் 10% இந்த கால்வாய் வழியாக நடைபெற்று வருவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த வழித்தடம் வழியாக பெட்ரோலிய பொருட்கள், ரசாயனங்கள், இரும்பு, எஃகு, ஆட்டோமொபைல், இயந்திரங்கள், ஜவுளி, கைவினைப்பொருட்கள் உள்ளிட்டவற்றை இந்தியா ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்து வருகிறது. இந்தியா மட்டும் ஆண்டிற்கு ரூ.14.48 லட்சம் கோடி மதிப்பில் வர்த்தகம் செய்து வருகிறது.
இந்நிலையில், இந்த கால்வாயில் பிரம்மாண்டமான எவர் கிரீன் சரக்கு கப்பல், சூறாவளிக் காற்றால் கடந்த 23ம் தேதி குறுக்கே திரும்பி சிக்கிக் கொண்டது. அந்த கடல் வழிப்பாதையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அந்த கால்வாயை கடக்க முடியாமல் நூற்றுக்கணக்கான சரக்கு கப்பல்கள் நடுகடலில் நிற்கின்றன. இதனால்,ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான சரக்குகள் நடுகடலில் தேங்கி உள்ளன.
இந்த கப்பலை மீண்டும் மிதக்க வைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த கப்பலை கூடிய விரைவில் மீட்கவில்லை என்றால் உலக பொருளாதாரமே ஸ்தம்பிக்கும் என கூறப்பட்டது. குறிப்பாக, எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.
கப்பலின் அடிப்பகுதியில் இருக்கும் மணலை தோண்டி எடுத்து கப்பலை வெளியே இழுப்பதற்காக 12 இழுவை படகுகள் பணியாற்றி வந்தது. இதுவரை 20,000 டன் மணல் அகற்றப்பட்டது. இந்த முயற்சி தோல்வி அடையும் நிலையில் கப்பலில் உள்ள சரக்கு பெட்டகங்களை இறங்கி கப்பலின் எடையை குறைக்க முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
கப்பல் எப்போது மிதந்து போக்குவரத்து சீர் செய்யப்படும் என சொல்லமுடியாத நிலையில், சுமார் 320 கப்பல்கள் இந்த வழியை கடந்து செல்வதற்கு காத்துக்கிடக்கின்றன. அதேபோல் ஒரு சில கப்பல்கள் ஆப்பிரக்க கண்டத்தை சுற்றிக் கொண்டு செல்லத் தொடங்கிவிட்டது.
கப்பல் திசை திரும்பி நிற்கிறது. இது தொழில்நுட்ப கோளாறா, கடும் காற்று காரணமா அல்லது மனிதத் தவறா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கப்பல் தோண்டி எடுக்கப்பட்ட மணல் உள்ளிட்ட பல்வேறு முயற்சியால் மிதக்கத் தொடங்கியுள்ளன. இருப்பினும் கப்பல் பயணத்தை தொடரவில்லை. அடுத்த பகுதிகளில் தரைதட்டாமல் எவர்கிவன் கப்பல் கடந்து விடுமா என்பது சந்தேகமா இருக்கும் நிலையில் இந்த கப்பலை ஓரமாக நிறுத்திவிட்டு பிற கப்பல் போக்குவரத்தை தொடங்கலாமா என ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மறுபுறம் கப்பல் மிதக்கத் தொடங்கியுள்ளதால் சூயஸ் கால்வாயில் போக்குவரத்து விரைவில் சீர்செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications