Facebook டேட்டா விற்பனை.. சிக்கிய Meta நிறுவனம்.. ரூ.10,741 கோடி அபராதம்.. என்ன நடந்தது?
நீங்கள் பேஸ்புக் (Facebook) யூசராக இருந்தால் உங்களது தனிப்பட்ட டேட்டாக்கள் உங்களின் அனுமதியின்றி அமெரிக்காவுக்கு பார்சல் செய்யப்பட்டால் எப்படி இருக்கும்? அப்படி கோடிக்கணக்கான மக்களின் டேட்டாக்களை அமெரிக்காவுக்கு பரிமாற்றம் செய்து சம்பவத்தில் சிக்கியிருக்கிறது மெட்டா நிறுவனம்.
இதனால், மெட்டா (Meta) நிறுவனத்துக்கு வரலாறு காணாத அளவில் பல்லாயிரம் கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வெறும் பேஸ்புக் டேட்டாக்களை வைத்து என்ன செய்ய முடியும் என்று நம்மிடையே கேள்வி எழலாம். இதுகுறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். ஒருவர் பேஸ்புக் பயன்படுத்த வேண்டும் என்றால், அதில் அவரது மொபைல் நம்பர், இமெயில் முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் கட்டாயமாக கொடுக்க வேண்டும்.

இந்த தகவல்களை வேறொரு பேஸ்புக் யூசர்கள் தெரிந்துக் கொள்ளாமல், பார்த்துக்கொள்ளும் வகையில் பேஸ்புக் நிறுவனம் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொடுத்துள்ளது. இதனால், பேஸ்புக் மூலம் ஒருவரது மொபைல் நம்பரையோ, இமெயில் முகவரியையோ கண்டுபிடித்து யாரும் யாரையும் தொடர்பு கொண்டுவிட முடியாது.
இதுபோன்று யூசர்களின் டேட்டாக்கள் பாதுகாப்பட வேண்டும் என்பது பல நாடுகளின் சட்ட விதிமுறைகளின் கீழ் வருகிறது. அதேபோல, ஐரோப்பிய யூனியன் (European Union) நாடுகளில் உள்ள பேஸ்புக் யூசர்களின் டேட்டாக்கள் வேறு எந்த நாடுகளுக்கும் பரிமாற்றப்படக் கூடாது என்று சட்டம் உள்ளது. இந்த சட்ட விதிமுறைகளை பேஸ்புக் நிறுவனம் மீறியதாகவும், அயர்லாந்து நாட்டு மக்களின் தனிப்பட்ட டேட்டாக்களை அமெரிக்காவுக்கு பரிமாற்றம் செய்ததாகவும் மெட்டா நிறுவனத்தின் மீது கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
இந்த புகார்களின் அடிப்படையில், ஐரிஷ் டேட்டா புரடக்ஷன் கமிஷன் (Ireland Data Protection Commission) தீவிர விசாரணை நடத்தி வந்தது. அந்த விசாரணையில், அயர்லாந்து பேஸ்புக் யூசர்களின் தனிப்பட்ட டேட்டாக்கள் 2020ஆம் ஆண்டு வரையில் அமெரிக்காவுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டு வந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து ஐரிஷ் டேட்டா புரடக்ஷன் கமிஷன் தரப்பில், ஐரோப்பிய டேட்டா புரடெக்ஷன் போர்டு (European Data Protection Board) விதிமுறைகளை மீறி மெட்டா நிறுவனம், அயர்லாந்து பேஸ்புக் யூசர்களின் தனிப்பட்ட டேட்டாக்களை அமெரிக்காவுக்கு பரிமாற்றம் செய்துள்ளது. இதன் காரணமாக, அமெரிக்க உளவுத்துறைக்கு ஐரோப்பிய நாடுகளின் டேட்டாக்கள் கிடைத்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மிகப்பெரும் நாடுகளுக்கு இடையேயான ரகசியங்கள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. ஆகவே, விதிகளை மீறிய மெட்டா நிறுவனத்துக்கு 1.2 பில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.10,761 கோடி) அபராதம் விதிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவன தலைவர் நிக் கிளெக் (Facebook president Nick Clegg) கூறுகையில், "எங்களது நிறுவனத்தைப் போலவே ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் ஐரோப்பிய யூனியன் நாடுகளில், இதே விதிமுறைகளின்படி செயல்பட்டு வருகின்றன.
ஆனால், எங்களுக்கு மட்டும் அபராதம் விதித்து, தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை கண்டு ஏமாற்றம் அடைகிறோம். இந்த முடிவு முற்றிலும் தவறானது மட்டுமல்லால், நியாயமற்றதாகும். சொல்லப்போனால், ஐரோப்பிய யூனியனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே டேட்டாக்களை பரிமாற்றம் செய்யும் யோசனையை தூண்டிவிடும் விதமாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது" எனத் தெரிவித்தார்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








