PF சந்தாதாரர்களுக்கு குட் நியூஸ்.. உரிமை கோரப்படாத ரூ.5200 கோடி நிதி.. தானாகவே செலுத்தப்படும்.. இதோ விவரம்..
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தற்போது உரிமை கோரப்படாமல் முடங்கிக் கிடக்கும் சுமார் ரூ.5200 கோடி நிதியைச் சம்பந்தப்பட்ட சந்தாதார்களின் வங்கி கணக்குகளுக்குத் தானாகச் செலுத்தும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது பல ஆண்டுகளாக எந்தவித பரிவர்த்தனையும் இன்றி செயலற்று இருக்கும் PF கணக்குகளைக் கண்டறிந்து, அவற்றுக்கான தொகையை எவ்வித விண்ணப்பமும் இன்றி தானாகவே திருப்பிச் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதன்மூலம் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் அலைச்சலின்றி தங்களின் பணத்தைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த பிப்ரவரி மாத நிலவரப்படி, இபிஎஃப்ஒ-வில் சுமார் 31.8 லட்சம் கணக்குகள் செயலற்ற நிலையில் உள்ளன. அதுவும் 55 வயது கடந்த சந்தாதார்கள் பணி ஓய்வு பெற்று, தொடர்ந்து 3 ஆண்டுகள் எவ்வித பங்களிப்பும் செலுத்தவில்லை எனில், அவர்களின் கணக்குகள் செயலற்ற கணக்குகளாகக் கருதப்படும். மேலும் இதில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கிக் கிடக்கும் 7 லட்சம் கணக்குகளும் அடங்கும்.
தற்போது இந்த நிதியை மீட்பதற்காக, தொழில்நுட்ப உதவியுடன் ஆதார் சரிபார்க்கப்பட்ட கணக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இப்போது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட சுமார் 8.10 லட்சம் செயலற்ற கணக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் 14000 கணக்குகளில் தலா ரூ.5 லட்சம் மேல் இருப்பு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற மத்திய அறங்காவலர் வாரியத்தின் கூட்டத்தில், முதல்கட்டமாக ரூ.1000-க்கு குறைவான இருப்பு கொண்ட கணக்குகளுக்கு நிதியைத் திருப்பிச் செலுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிஎஃப் கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பதை எஸ்எம்எஸ், மிஸ்டு கால் போன்ற வழிகளை பயனடுத்தி எளிமையாகத் தெரிந்துகொள்ள முடியும். சரி இப்போது பிஎஃப் கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்கான வழிகளைப் பார்க்கலாம்.
வழிமுறை-1: உங்களது பிஎஃப் கணக்கோடு பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து பின் வரக்கூடிய முறையில் ஒரு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். அதாவது EPFOHO UAN ENG என்ற முறையில் இந்த 7738299899 எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும். குறிப்பாக நீங்கள் எஸ்எம்எஸ் அனுப்பிய உடனே பிஎஃப் அமைப்பு உங்களது கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்ற விவரத்தை எஸ்எம்எஸ் வழியாக அனுப்பி வைத்து விடும்.

வழிமுறை-2: உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 9966044425 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். அடுத்த சில நொடிகளில் உங்கள் மொபைல் நம்பருக்கு எஸ்எம்எஸ் முறையில் உங்கள் பிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்ற விவரம் தெரிய வந்துவிடும்.
வழிமுறை-3: உங்களது போனில் Umang செயலி பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதில் இபிஎப்ஓ என கிளிக் செய்து பாஸ்புக் என்ற ஆப்ஷனில் கிளிக் செய்ய வேண்டும். அடுத்து அதில் உங்களது யுஏஎன் நம்பரை உள்ளீடு செய்தால் உங்களது பிஎஃப் கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பதைச் சுலபமாகத் தெரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








