PF பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி.. எப்போது தொடக்கம்? வெளியானது முக்கிய தகவல்..
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) வரும் ஜனவரி 2026 முதல் அதன் சந்தாதாரர்களுக்கு ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதியை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது பிஎப் திட்டம் என்பது தனியார் துறையில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். குறிப்பாக ஒவ்வொரு மாதமும் வாங்கும் சம்பளத்தில் ஒரு சிறிய தொகை இந்த பிஎப் கணக்குக்கு செல்கிறது.
அதே சிறிய தொகையை நிறுவனமும் பங்களிப்பு செய்கிறது. பின்பு இந்த தொகைக்கு வட்டி வருமானமும் கிடைக்கிறது. குறிப்பாக அவசர தேவைகளுக்கு பிஎப் சேமிப்பு மிகவும் உதவியாக இருக்கிறது. இதுதவிர பென்சன் போன்ற நன்மைகளும் உள்ளன. இதுபோன்ற சூழலில் பிஎப் (PF) உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வந்துள்ளது.

அதாவது பிஎப் பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கும் சேவைகள் வரும் 2026 ஜனவரி மாதம் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மிக முக்கியமான உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழு, அக்டோபர் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் அதன் வாரியக் கூட்டத்தில் பிஎப் பணத்தை ஏடிஎம் மூலம் எடுப்பதற்கு ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கும் வசதி ஊழியர்களுக்கு ஒரு மிகப் பெரிய நிவாரணமாக இருக்கும். அதாவது தற்போது பிஎப் பணத்தை எடுக்க வேண்டும் என்றால் ஆன்லைனில் கோரிக்கையை சமர்பிக்க வேண்டும். அதன்பிறகு நீண்ட நாள் காத்திருந்து பணத்தை எடுக்க முடியும். ஆனால் புதிய வசதி வந்த பிறகு நீண்ட நாள் காத்திருக்கும் சிரமம் தவிர்க்கப்படும்.
அதாவது ஊழியர்கள் ஏடிஎம் கிளைக்கு சென்று ஏடிஎம் மெஷின் மூலம் பிஎப் பணத்தை சில நொடிகளில் எடுக்க முடியும். குறிப்பாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு ஏடிஎம் போன்ற பரிவர்த்தனைகளை அனுமதிக்கத் தயாராக உள்ளது என்பதை அவர்கள் புரிந்துகொண்டதாக மத்திய அறங்காவலர் குழு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஏடிஎம் மூலம் பிஎப் பணம் எடுக்கும் வசதி வந்தாலும் அதில் ஒரு குறிப்பிட்ட வரம்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த வரம்பு குறித்து இன்னும் விவாதிக்கப்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு EPFO ஏடிஎம்களை திறப்பது குறித்து வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியுடன் அமைச்சகம் விவாதித்துள்ளதாகத் தொழிலாளர் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக மக்கள் தங்களது பிஎப் கணக்குகளை அதிக அளவில் அணுக அனுமதிக்க விரும்புவதால் ஏடிஎம்கள் ஒரு முக்கிய தேவையாகக் கருதப்படுவதாக அந்த அதிகாரி கூறியுள்ளார்.

அதுவும் பிஎப் உறுப்பினர்களுக்கு ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கு ஒரு சிறப்பு ஏடிஎம் அட்டை வழங்கப்படும். பின்பு அது அவர்களின் பிஎப் நிதியில் ஒரு பகுதியை ஏடிஎம் மையங்கள் மூலம் எளிமையாக எடுக்க அனுமதிக்கும். ஏடிஎம் மூலம் பிஎப் பணத்தை எடுக்க அனுமதிப்பது, அவசரக் காலங்களில் உறுப்பினர்கள் நிதியை அணுகுவதை மிகவும் வசதியாக மாற்றும் என நிபுணர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சமீபத்தில் பிஎப் பேலன்ஸ் விவரங்களைத் தெரிந்துகொள்ள Passbook Lite (பாஸ்புக் லைட்) எனும் வசதியை அறிமுகம் செய்தது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு. இதுதவிர வேலை மாறும்போது தேவைப்படும் Annexure K என்ற ஆவணத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் வசதியும் கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வசதிகள் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும். பின்பு பிஎஃப் விவரங்களை எளிதாக அணுக உதவும்.


Click it and Unblock the Notifications








