பேங்க் அக்கவுண்ட் இருக்கா? இனிமேல் 75 சதவீத பணம்.. UPI, ATM பரிவர்த்தனை.. PF உறுப்பினர்களுக்கு புது ரூல்ஸ்!
இந்தியாவில் பணியாற்றும் கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு முக்கியமான சேவையை வழங்கி வரும் இபிஃஎப்ஓ (EPFO) ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees' Provident Fund Organisation) ஆனது இபிஃஎப்ஓ 3.0 (EPFO 3.0) என்ற புதிய டிஜிட்டல் மேம்பாட்டு திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த புதிய திட்டத்தின் மூலம், இபிஃஎப் உறுப்பினர்கள் தங்களது பிஃஎப் பணத்தை நேரடியாக யுபிஐ மூலமாகவும், யுபிஐ வசதி கொண்ட ஏடிஎம்கள் மூலமாகவும் எளிதாக எடுத்து கொள்ளலாம். ஆனால், எவ்வளவு பணத்தை எடுக்க முடியும் என்பதை ஒட்டுமொத்த உறுப்பினர்களும் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

பொதுவாக பிஃஎப் பணத்தை எடுக்க விண்ணப்பித்தால், பல்வேறு ஆவணங்கள் மற்றும் சரிபார்ப்பு நடைமுறைகள் இருக்கின்றன. இதனால் பணம் கைக்கு வர சில நாட்கள் காத்திருக்க வேண்டி இருக்கிறது. ஆனால், இபிஃஎப்ஓ 3.0 அறிமுகமான பிறகு, இந்த செயல்முறை பெரும்பாலும் காகிதமற்ற (Paperless) முறையாக மாறிவிடும்.
இதனால் விண்ணப்ப செயல்முறை வேகமாக முடிவடைந்து, உறுப்பினர்கள் தங்களது பணத்தை விரைவாக பெற முடியும். யுபிஐ வழியாக எடுக்க வழிவகை செய்ய இருப்பதால், நேரடியாக வங்கி கணக்குக்கு பணத்தை மாற்றி தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ள முடியும். பிஃஎப் பணத்தில் எவ்வளவு சதவீதத்தை எடுக்கலாம்?
புதிய விதிகளின்படி, உறுப்பினர்கள் பொதுவாக தங்களது இபிஃஎப் சேமிப்பில் இருந்து 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படலாம். ஆனால் அனைத்து பணத்தையும் ஒரே நேரத்தில் எடுத்துக்கொள்ள அனுமதி கிடைக்காது. மொத்த தொகையில் இருந்து 50 சதவீதம் முதல் அதிகபட்சம் 75 சதவீதம் வரையில் எடுக்கலாம்.
ஆகவே, கணக்கில் உள்ள மொத்த தொகையில் குறைந்தபட்சம் 25 சதவீதம் கட்டாயமாக இருப்பு வைக்க வேண்டும். அதாவது, பிஃஎப் கணக்கில் முழுமையாக பணத்தை செய்ய முடியாது. இந்த 25 சதவீத தொகை உறுப்பினரின் எதிர்கால ஓய்வூதிய பாதுகாப்பிற்காக இருப்பு தொகையாக வைத்திருக்கப்படும். ஆட்டோ செட்டில்மெண்ட் வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
இபிஃஎப்ஓ மேலும் ஒரு முக்கிய மாற்றத்தையும் செய்துள்ளது. இதுவரை ஆட்டோ செட்டில்மெண்ட் (Auto Settlement) மூலம் விரைவாக வழங்கப்பட்ட பிஃஎப் பணத்தின் உச்ச வரம்பு ரூ.1 லட்சமாக இருந்தது. தற்போது அது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவ செலவுகள், கல்வி, திருமணம், வீடு வாங்குதல் உள்ளிட்ட அவசர தேவைகள் பூர்த்தியாகும்.
அதேபோல மிக குறுகிய காலத்தில் பணத்தை பெற முடியும். பல சந்தர்ப்பங்களில், விண்ணப்பம் செய்த மூன்று நாட்களுக்குள் பணம் கிடைக்கும் வகையில் இந்த அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், இபிஃஎப்ஓ 3.0 எப்போது அறிமுகமாகும் என்ற கேள்வி உறுப்பினர்கள் மத்தியில் இருக்கிறது. மே மாதத்தில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மத்திய தொழிலாளர் அமைச்சர் Mansukh Mandaviya சமீபத்தில் தெரிவித்த தகவலின்படி, இந்த புதிய வசதிக்கான சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. எனவே EPFO 3.0 சேவை விரைவில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அறிமுகம் செய்யப்படவில்லை. இருப்பினும், யுபிஐ வழியாக எடுப்பது சோதனை செய்யப்பட்டது.
இந்த சோதனை வெற்றிகரமாகவும் முடிந்தது. ஆகவே, அடுத்த மாதத்தில் எதிர்பார்க்கலாம். இபிஃஎப்ஓ 3.0 நடைமுறைக்கு வந்தால், பிஃஎப் பணத்தை பெறுவதற்கான கால தாமதம் குறைந்து, உறுப்பினர்கள் தங்களது சேமிப்பை யுபிஐ வழியாக எளிதாகவும் விரைவாகவும் பயன்படுத்தும் வசதி கிடைக்கும். இருப்பினும், 100 சதவீத பணத்தையும் எடுக்க முடியாது.


Click it and Unblock the Notifications