இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை.. தொலைதூர பகுதிகளுக்கு அதிவேக இணையம்.. மீண்டும் விண்ணப்பித்த எலான் மஸ்க்..
உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் (Starlink) நிறுவனம் இந்தியாவில் தனது சேவையை தொடங்க இதற்கு முன்னதாக ஒப்புதல் பெறுவதில் தடைகளை எதிர்கொண்ட நிலையில் மீண்டும் விண்ணப்பித்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை
உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராகவும், உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை வகிப்பவராகவும் எலான் மஸ்க் (Elon Musk) திகழ்கிறார். அவரது ஸ்டார்லிங்க் நிறுவனம் செயற்கைக்கோள் வழி இணைய சேவையை உலகின் பல நாடுகளுக்கு விரிவுபடுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்திய சந்தையிலும் தனது சேவையை அறிமுகப்படுத்த நிறுவனம் முயற்சி மேற்கொண்டது.

ஆனாலும் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் சில விதிமுறைகள் மற்றும் தொழில்நுட்ப நடைமுறைகள் இந்திய அரசின் விதிகளுடன் ஒத்துப்போகாததால் அனுமதி வழங்கப்படவில்லை. குறிப்பாக தேசிய பாதுகாப்பு தொடர்பான கவலைகள் மற்றும் சில தொழில்நுட்ப அம்சங்கள் காரணமாக ஒப்புதல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில் எலான் மஸ்க் தனது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை மீண்டும் இந்தியாவில் தொடங்கும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளார். இதற்காக, இந்திய விதிமுறைகளுக்கு ஏற்ப தேவையான மாற்றங்களை மேற்கொண்ட ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையத்திடம் மீண்டும் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளது.
இந்தியாவின் தொலைதூர மற்றும் கிராமப்புறங்களில் இன்னும் தரமான இணைய வசதி கிடைக்காத பகுதிகளில் வாழும் மக்களுக்கு இந்த ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை பெரும் பயனளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த எலான் மஸ்க், இந்தியாவில் போதிய இணைய வசதி கிடைக்காமல் இருக்கும் மக்களுக்கு ஸ்டார்லிங்க் உதவிகரமாக இருக்கும் என குறிப்பிட்டார். அதுவும் கிராமப்புறங்களில் வசிக்கும் மற்றும் இணைய சேவைகள் குறைவாகக் கிடைக்கும் மக்களை இந்த சேவை சென்றடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மலைப்பகுதிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் செல்போன் டவர்கள் அமைத்து, தரைவழி கேபிள்கள் மூலம் இணைய வசதியை ஏற்படுத்துவதற்கு அதிகளவு செலவும் கட்டமைப்பு வசதிகளும் தேவைப்படும். ஆனால், செயற்கைக்கோள் அடிப்படையில் இயங்கும் ஸ்டார்லிங்க் இணைய சேவையில் இதுபோன்ற சிக்கல்கள் குறைவாக இருப்பதால், எளிதாக இணைய இணைப்பை வழங்க முடியும்.

அதேபோல் வெள்ளம், நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும் சமயங்களில் செல்போன் கோபுரங்கள் மற்றும் தரைவழி இணைய கட்டமைப்புகள் சேதமடைந்து தகவல் தொடர்பு பாதிக்கப்படலாம். ஆனால், செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஸ்டார்லிங்க் சேவை மூலம் இதுபோன்ற அவசர காலங்களிலும் இணைய இணைப்பை வழங்க முடியும்.
இதுதவிர அதிக மக்கள் தொகை கொண்ட நகர்ப்புறங்களில் ஜியோ, ஏர்டெல் போன்ற பாரம்பரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவைகளுக்கு ஸ்டார்லிங்க் முழுமையான மாற்றாக அமையாது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மாறாக, தற்போதுள்ள இணைய சேவைகளுக்கு துணையாக செயல்பட்டு, குறைந்த மக்கள் தொகை கொண்ட தொலைதூரப் பகுதிகளிலேயே ஸ்டார்லிங்கின் சேவை அதிக முக்கியத்துவம் பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் அதிகவேக இணைய சேவை இந்தியாவில் கிடைத்தால் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications