இந்தியாவின் இந்த ராக்கெட்டை ஏன் Elon Musk-ன் SpaceX ஏவுகிறது? ISRO-வால் ஏன் ஏவ முடியவில்லை?
இந்தியா செய்யப்போகும் இந்த காரியத்தை கேள்விப்பட்டால்.. "அடப்பாவிகளா! எக்ஸ்ட்ரா 700 கிலோவிற்காக இஸ்ரோ (ISRO) மானத்தை எலான் மஸ்க்கிடம் (Elon Musk) அடகு வச்சிடீங்களா? இந்த விஷயம் நாசாவிற்கு (NASA) தெரிந்தால் என்ன ஆகுறது?" போன்ற கேள்விகள் மேலோங்கலாம்; அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை!
ஏனென்றால் காலம் காலமாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் உதவியும் ஒத்துழைப்பும் தான் மற்ற உலக நாடுகளுக்கு தேவைப்பட்டது. திடீரென இப்படி ஒரு தகவலை கேள்விப்பட்டால், மேற்கண்ட கேள்விகள் எழத்தான் செய்யும். இந்தியா அப்படி என்ன செய்ய போகிறது? இதோ விவரங்கள்:

இந்தியா அப்படி என்ன செய்ய போகிறது? ஒட்டுமொத்த உலக நாடுகளையும் திரும்பிபார்க்க வைத்த சந்திரயான் 3 மிஷனின் வெற்றிக்கு பிறகு, இந்த மிஷனில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் (Technology used in the mission) மற்றும் உலகளாவிய தனியார் விண்வெளி நிறுவனங்களுடனான கூட்டாண்மைக்கான (Partnerships with global private space companies) அழைப்பு இஸ்ரோவிற்கு விடுக்கப்பட்டது.
இதற்கிடையில் 2024 ஆம் ஆண்டின் முதல் நாளிலேயே தனது இஸ்ரோ முதல் எக்ஸ்போசாட் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி.. புத்தாண்டை வெற்றிகரமாக தொங்கியது. இந்நிலைப்பாட்டில் தான், எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் ராக்கெட்டை பயன்படுத்தி இஸ்ரோவின் செயற்கைகோள் ஒன்று விண்ணில் செலுத்தப்படவுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

ராய்ட்டர்ஸின் சமீபத்திய அறிக்கையின்படி, ஸ்பேஸ்எக்ஸின் பால்கன்-9 ராக்கெட்டை பயன்படுத்தி இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஒன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்தியாவில் தனது மற்ற தொழில்களை விரிவுபடுத்த விரும்பும் எலான் மஸ்க் நிறுவனத்துடனான இந்திய அரசாங்கத்தின் முதல் கூட்டாண்மை இதுவாகும்.
இஸ்ரோவால் இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்த முடியாதா? முடியாது! ஏனென்றால் விண்ணில் செலுத்தப்படவுள்ள இந்தியாவின் புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளின் எடை 4,700 கிலோ ஆகும். இஸ்ரோவால் அதிகபட்சம் 4,000 கிலோ எடையுள்ள விண்கலத்தை ஏவுவதற்கான ராக்கெட்டை மட்டும் தன்வசம் கொண்டுள்ளது.

அதாவது கூடுதலாக 700 கிலோ எடையை கொண்டுள்ளதால் இஸ்ரோவால் இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தமுடியாது. இந்த இடத்தில் தான் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ராட்சத ராக்கெட் ஆன பால்கன் 9 (Falcon 9) உள்ளே நுழைகிறது. இது 70 மீட்டர் நீளம் மற்றும் 3.7 மீட்டர் விட்டம் கொண்ட ஒரு ராக்கெட் ஆகும். இதனால் 22,800 கிலோ எடையுள்ள பேலோடுகளை கூட வெற்றிகரமாக விண்ணில் செலுத்த முடியும்.
ஸ்பேஸ்எக்ஸ் மூலம் செலுத்தப்பட உள்ள செயற்கைகோளின் பணி என்ன? இந்தியாவின் விண்வெளி ஏஜென்சியின் வணிகப் பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட்டின் (NewSpace India Ltd - NSIL) கூற்றுப்படி, இந்தியாவிற்கான இந்த புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆனது, நாட்டின் தொலைதூர மற்றும் இணைக்கப்படாத பகுதிகளில் பிராட்பேண்ட் தகவல்தொடர்புகளை மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது
எப்போது விண்ணில் செலுத்தப்படும்? சரியான வெளியீட்டு தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இது விண்ணில் செலுத்தப்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா உடனான இந்த கூட்டணி நிச்சயம் எலான் மஸ்கிற்கும் லாபகரமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
இதில் எலான் மஸ்க்கிற்கு என்ன லாபம்? ஸ்பேஸ்எக்ஸ், எக்ஸ் (X) மற்றும் டெஸ்லா (Telsa) நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், தனது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் பிராட்பேண்டை (Starlink satellite broadband) இந்தியாவிற்கும் கொண்டு வர விரும்புகிறார். அதற்காக அவர் நாட்டில் உள்ள தொலைத்தொடர்பு ஆப்ரேட்டர்களுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டி இருக்கும்.
அடுத்த 6 மாதங்களில் சுமார் 840 டைரக்ட்-டூ-மொபைல் போன் செயற்கைக்கோள்களை (Direct-to-mobile satellites) வெளியிட ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு முதல் டெக்ஸ்ட்-க்கான அணுகலையும், 2025 ஆம் ஆண்டு முதல் எல்டிஇ போன்களுக்கான வாய்ஸ் கால் மற்றும் டேட்டா நன்மைகளையும் வழங்கும்.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க இந்தியாவில் மின்சார வாகனங்களை தயாரிக்கும் தொழிற்சாலையை டெஸ்லா அமைப்பதற்கான முதலீட்டு திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையிலும் கூட உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் இவர் பிரதமர் மோடியையும் சந்தித்து இருந்தார். ஆக எப்படி பார்த்தாலும் இந்தியாவிற்கு உதவுவதால் எலான் மஸ்க்கிற்கு பெரிய அளவிலான லாபங்கள் உண்டு!


Click it and Unblock the Notifications








