வாய கழுவுங்க சார்.. இப்போதான் கொரோனா கிட்ட இருந்து தப்பிச்சு இருக்கோம்.. புது பீதியை கிளப்பும் Elon Musk!
பொதுவாகவே.. உண்மையை சொன்னாலே பலருக்கும் கசக்கும். அதிலும் எலான் மஸ்க் (Elon Musk) சொல்லும் உண்மைகள் மிகமிக கசக்கும். அப்படியான ஒரு பகீர் உண்மையை கூறி.. கூகுள், மைக்ரோசாப்ட, ஓப்பன்ஏஐ போன்ற நிறுவனங்களின் வயிற்று எரிச்சலை வாங்கிக்கட்டி கொண்டுள்ளார் எலான் மஸ்க்!
ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX), டெஸ்லா (Tesla), மற்றும் எக்ஸ் (X) பிளாட்ஃபார்மிற்கு சொந்தக்காரரும், உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க், கிரேட் ஏஐ டிபேட் (Great AI Debate) என்கிற கருத்தரங்கில் கலந்துகொண்டு ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸால் ஏற்படும் அபாயங்கள் (Risks of Artificial Intelligence) குறித்து பேசினார்.

அப்போது ஏஐ (AI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் ஆனது மனித இனத்தை அழிப்பதற்கு 10% முதல் 20% வாய்ப்புள்ளது (10 to 20 percent chances of AI destroying humanity) என்கிற "ஓப்பன் ஸ்டேட்மென்ட்டை" எலான் மஸ்க் முன்வைத்தார்.
கூகுள் (Google), மைக்ரோசாஃப்ட் (Microsoft), ஓப்பன்ஏஐ (OpenAI) போன்ற நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு.. கோடி கோடிகளாக பணத்தை கொட்டி ஏஐ தொழில்நுட்பம் (AI Tecnology) தொடர்பாக முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கும் நேரத்தில், எலான் மஸ்க்கின் இந்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடக்கக்கூடிய நல்ல விஷயங்களோடு ஒப்பிட்டு பார்க்கும் போது, அதே ஏஐ வழியாக வரும் ஆபத்துகள் குறைவு தான் என்றாலும் கூட எலான் மஸ்க் தனது "20% சான்ஸ் இருக்கு!" என்கிற வார்த்தையில் இருந்து பின்வாங்கவில்லை. மேலும் எதை அடிப்படையாக கொண்டு இந்த கணக்கீடுகளை அவர் முன்வைக்கிறார் என்பதற்கான விவரங்களையும் அவர் சமர்ப்பிக்கவில்லை.
ஏஐ தொழில்நுட்பம் ஆனது மனிதகுலத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சில வாய்ப்புகளை கொண்டுள்ளது. இந்த விஷயத்தில் நான் ஜெஃப் ஹிண்டனுடன் ஒற்றுப்போகிறேன். சாத்தியமான நேர்மறையான சூழ்நிலை ஆனது எதிர்மறையான சூழ்நிலையை விட அதிகமாக இருக்கும் என்று தான் நம்புவதாகவும் எலான் மஸ்க் கூறியுள்ளார்.

எலான் மஸ்க் இப்படி கூறுவது முதல் முறை அல்ல. கடந்த நவம்பரில், ஏஐ தொழில்நுட்பம் ஆனது மோசமாக மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தார். இடைப்பட்ட காலத்தில் ஏஐ-க்கென விதிகள் இருக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார். இப்படியெல்லாம் ஒருபக்கம் பேசிக்கொண்டே எக்ஸ்ஏஐ (xAI) என்கிற ஏஐ நிறுவனத்தையும் தன்வசம் கொண்டுள்ளார். கேட்டால் இது ஏஐ-ஐ இன்னும் சிறந்ததாக மாற்றுவதற்கான ஒரு நிறுவனம் என்கிறார்!
சமீபத்தில் எலான் மஸ்க், தனது சொந்த ஏஐ சாட்பாட் ஆன க்ரோக் ஏஐ-ன் இரண்டாவது வெர்ஷன் (Grok 2 AI) தற்போது பயிற்சியில் இருப்பதாகவும், அது பொது வெளிக்கு வரும்போது அனைத்து எதிர்பார்ப்புகளையும் தாண்டிவிடும் என்றும் கூறியிருந்தார். மேலும் சில தினங்களுக்கு முன்னர் ஓப்பன் சோர்ஸ் (Open Source) ஆக்கப்பட்ட க்ரோக் ஏஐ-யின் 1.5 வெர்ஷன் (Grok AI 1.5 Version) ஆனது அடுத்த வாரம் முதல் எக்ஸ் பிளாட்ஃபார்மில் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
க்ரோக் 2 வெர்ஷன் ஆனது ஒவ்வொரு மெட்ரிக்கிலும் ஏற்கனவே உள்ள ஏஐ-ஐ விட சிறப்பாக செயல்பட வேண்டும் என்கிற நோக்கத்தின் கீழ் பயிற்சியில் உள்ளதாகவும், க்ரோக் 1.5 ஆனது கோடிங் மற்றும் கணிதம் தொடர்பான பணிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை பெற்றுள்ளதாகவும் எலான் மஸ்க் ட்வீட் செய்திருந்தார்.
ஒட்டுமொத்தமாக.. கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏஐ-க்கும், ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி-க்கும் போட்டியாக தன்னால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் "கண்ணும் கருத்துமாக" செய்துவிட்டு.. இன்னொரு பக்கம் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸால் ஏற்படும் அபாயங்கள் என்கிற கருத்தரங்கில் அமர்ந்துகொண்டு "கருத்துக்களை கண்டபடி" அள்ளி வீசுகிறார். இதில் எந்த எலான் மஸ்க்கை நம்புவது? ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸிடம் தான் கேட்க வேண்டும்!


Click it and Unblock the Notifications








