மிடில் கிளாஸ் வாழ்க்கை.. அப்பா சொத்துலாம் இல்ல.. Elon Musk பகிர்ந்த துயரங்கள்.. புல்லரித்துப்போன உலகம்!
"உனக்கென்னப்பா அப்பா சொத்த வெச்சி பணக்காரனாகிட்டனு" நிறைய பேர்களை நெட்டிசன்கள் கிண்டல் செய்வதை நாம் பார்த்திருப்போம். அது சில நேரங்களில் உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், அதற்கெல்லாம் அப்பாற்பட்டது, எனது வாழ்க்கையென்று நெட்டிசன்களின் வாயை அடைக்கும் வகையில் தனது சிறுவயது துயரங்களை பகிர்ந்துள்ளார், எலான் மஸ்க் (Elon Musk).
உலகிலேயே மிகப்பெரிய பணக்காரரான (World Richest Man) எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 170 பில்லியன் டாலர்களாகும். பரம்பரை சொத்து என்பதே இல்லாமல், வெறும் 30 ஆண்டுகளில் உலகையே ஆளும் தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்கி காட்டியிருக்கிறார் எலான் மஸ்க். இவரை போன்று பலர் பரம்பரை சொத்தில்லாமல், கோடீஸ்வரர்களாக மாறியிருந்தாலும், இவர் அடைந்த உட்சத்தையும், புகழையும் போல வேறு யாரும் பெற்றதில்லை.

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிடுவது முதல், செயற்கை நுண்ணறிவையும் மனிதனையும் இணைப்பதற்கான முயற்சிகளை எடுப்பது வரை உலகின் எந்த தனியார் நிறுவனமும் சிந்தித்திராத எதிர்கால திட்டங்களை எலான் மஸ்க், பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டார். இவர் கைக்கு ட்விட்டர் நிறுவனம் வாராததற்கு முன்பு, இவரின் சில ட்வீட்களை ட்விட்டர் நிறுவனம் நீக்கியிருந்தது.
இதனால் கடுப்பான எலான் மஸ்க், சில மாதங்களில் பல லட்சம் கோடி ரூபாய் கொடுத்து அந்த நிறுவனத்தையே வாங்கிவிட்டார். இப்படி மிகப்பெரும் ஆளுமை கொண்ட இவருக்கு, கடந்த கால வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இருக்கவில்லை. இவரது சிறுவயது அனுபவங்கள் பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதனாலேயே நெட்டிசன்கள், பரம்பரை சொத்து இல்லாமல் இவ்வளவு பெரிய கேடீஸ்வரராக யாரும் வர முடியாது என்று அவரை தொடர்ந்து கிண்டல் செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக எலான் மஸ்க், தனது ட்விட்டர் பக்கத்தில், அவரது சிறுவயது துயரங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், "ஒரு லோயர் கிளாஸ் பொருளாதார நிலையில் வளர்ந்து, அப்பர் மிடில் கிளாஸ் (Upper Middle Class) நிலைக்கு நான் மாறினேன். எனது சிறுவயது பருவம் மகிழ்ச்சியாக இருக்கவில்லை. எனக்கு பரம்பரை சொத்து என்று எதுவும் கிடையாது.
யாரும் எனக்கு கோடி கோடியாக கொடுக்கவில்லை. ஒரு சிறிய எலக்ட்ரிக்கல்/மெக்கானிக்கல் இன்ஜினியரிங் நிறுவனத்தை தொடங்கிய எனது தந்தை, அதை 30 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தினார். அதன்பின் அந்த நிறுவனம் நஷ்டத்தில் விழுந்தது. என் தந்தை 25 ஆண்டுகளாக திவாலாகினார். இந்த நேரத்தில், நானும் எனது சகோதரனும் குடும்பத்தை நடத்த பணம் அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டோம்.
எனது தந்தை எனக்கு சொத்தை கொடுக்காவிட்டாலும், அதை விட மதிப்புமிக்க இயற்பியல், பொறியியல் மற்றும் கட்டுமானம் ஆகியவற்றின் அடிப்படைகளை கற்றுக் கொடுத்திருந்தார். சொல்லப்போனால், நான் என்னுடைய உயர்நிலைப் பள்ளி பருவத்துக்கு பின்பு, யாருடைய பணத்தையும் எதிர்பார்க்கவில்லை. என் தந்தைக்கு சொந்தமாக எமரால்டு சுரங்கம் (Emerald Mine) இருந்ததாக சிலர் நினைக்கின்றனர்.
இதற்கான எந்தவொரு ஆதாரமும் எங்களிடமில்லை. சில முறை எனது தந்தை, ஜாம்பியாவில் உள்ள ஒரு சுரங்கத்தில் தனக்கு பங்கு இருப்பதாக அடிக்கடி சொல்லிவந்தார். சில காலம் அதை நானும் நம்பினேன். ஆனால், நாங்கள் யாரும் சுரங்கத்தை கண்டதில்லை. ஒருவேளை அந்த சுரங்கம் இருப்பது உண்மையாக இருந்திருந்தால், அவருக்கு எனது சகோதரரிடமிருந்து எந்த பண உதவியும் தேவைப்பட்டிருக்காது" என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications








