ஹா ஹா ஹா., ரொம்ப நக்கல் தான்: வழக்கு தொடரும் ட்விட்டரை கிண்டல் அடித்து Elon Musk மீம்!
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றுவது குறித்த செய்தி தான் சமீபகால பேசு பொருளாக இருந்தது. 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை மஸ்க் எப்போது நிறைவேற்றுவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்து வந்த நிலையில் திடீரென ட்விட்டரை வாங்கும் முயற்சி கைவிடப்படுவதாக அறிவித்துவிட்டார். ஏன் இப்படி அறிவித்தார், இதற்கு ட்விட்டர் நிறுவனம் எடுத்த நடவடிக்கை என்னவென்று பார்க்கலாம்.

ஒப்பந்தம் நிறைவேற்றப்படாது என முன்னதாகவே அறிவித்த மஸ்க்
ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு வாங்குவது உறுதி செய்யப்பட்டது. போலி மற்றும் ஸ்பேம் கணக்குகள் குறித்த முறையான ஆவணங்களை ட்விட்டர் நிறுவனம் சமர்பிக்கவில்லை என குறிப்பிட்ட மஸ்க் இதுகுறித்த தரவுகள் சமர்பிக்கும் வரை இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படாது என தெரிவித்திருந்தார்.

ஒப்பந்தத்தின் விதிமுறைகளை ட்விட்டர் மீறியுள்ளது
மேலும் தரவுகளை வழங்க மறுத்ததன் மூலம் ட்விட்டர் தனது ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறியுள்ளதாகவும் இந்த மீறல் என்பது ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்க வழிவகுக்கும் எனவும் மஸ்க் தரப்பு வழக்கறிஞர்கள் குழு ட்விட்டர் நிறுவனத்தை முன்னதாகவே எச்சரித்து இருந்தது.

முறையான ஆவணங்கள் எங்கே: எலான் மஸ்க்
ட்விட்டர் தளத்தில் உள்ள போலி மற்றும் ஸ்பேம் கணக்குகள் குறித்து முறையாக அறிவிக்கும் வரை ட்விட்டர் தளத்தை வாங்கப் போவதில்லை என எலான் மஸ்க் முன்னதாகவே தெரிவித்தார். ட்விட்டரில் 5 சதவீதம் மட்டுமே ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் இருக்கிறது என ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்திருக்கும் நிலையில் அதற்கான முறையான ஆவணங்களை கேட்டு மஸ்க் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இதுக்கு சாத்தியமே இல்லை: சிஇஓ பராக் அகர்வால்
ஆனால் ஸ்பேம் கணக்குகளை பொது மற்றும் தனிப்பட்ட விவரங்களை பயன்படுத்தி வெளிப்படியாக உருவாக்க முடியாது எனவும் எந்த கணக்குகள் எம்டிஏயூஎஸ் ஆக கணக்கெடுக்கப்படும் என்பதை அறிவது சாத்தியமற்ற செயல் எனவும் ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வால் பதிலளித்தார்.

டீல் ரத்து, வாய்ப்பு முடிந்துவிட்டது: எலான் மஸ்க்
இந்த நிலையில் எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முயற்சியை கைவிடுவதாக அறிவித்துள்ளார். போலி மற்றும் ஸ்பேம் கணக்குகள் குறித்த தகவலை தெரிவிக்க உரிய கால அவகாசம் அளித்தும் ட்விட்டர் நிறுவனம் அதை வழங்க தவறவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒப்பந்தத்தை நிறைவேற்ற சட்ட நடவடிக்கை
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ட்விட்டர் நிறுவனம், எலான் மஸ்க் ஒப்பந்தத்தை மீறியதாகவும் இதன்காரணமாக 1 பில்லியன் டாலர் ட்விட்டருக்கு அபராதம் செலுத்த வேண்டும் எனவும் எனவே இதுகுறித்து அவர் மீது வழக்கு தொடர இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் ஒப்பந்தத்தை நிறைவேற்ற சட்ட நடவடிக்கை தொடர திட்டமிட்டிருக்கிறோம் இதில் நாங்கள் வெற்றி பெறுவோம் எனவும் ட்விட்டர் குறிப்பிட்டுள்ளது.
மீம் மூலம் பதிலளித்த ட்விட்டர்
ட்விட்டரின் இந்த மிரட்டலை கிண்டல் அடிக்கும் வகையில் எலான் மஸ்க் ட்விட்டரில் மீம்ஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதன் ஒரே மீம்ஸ் இல் எலான் மஸ்க் சிரிப்பது போன்ற வெவ்வேறு புகைப்படத்துடன் நான்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டிருக்கிறது.
1. முதலில் என்னால் ட்விட்டரை வாங்க முடியாது என்று சொன்னார்கள்
2. பின் போலி கணக்கு குறித்த தகவலை வெளியிட மறுத்துவிட்டார்கள்
3. தற்போது நீதிமன்றத்தின் மூலம் ட்விட்டரை வாங்க கட்டாயப்படுத்துகிறார்கள்
4. இப்போது நீதிமன்றத்தில் போலி கணக்கு தகவலை அவர்கள் வெளியிட வேண்டும்
எலான் மஸ்க் சிரிப்பது போன்ற புகைப்படத்துடன் இந்த விளக்கமும் மீம் இல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டரில் ட்விட்டரையே கிண்டல் அடிக்கிறார் எலான் மஸ்க் என சமூகவலைதள வாசிகள் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

சரிவை சந்தித்த ட்விட்டர் மதிப்பு
ட்விட்டரை மஸ்க் வாங்குவது உறுதி செய்யப்பட்ட உடன் ட்விட்டரின் பங்கு சரிவை சந்தித்தது. இதையடுத்து ட்விட்டரை வாங்குவதாக மஸ்க் அறிவித்தபோது இருந்த பங்கு மதிப்பு தற்போது இல்லை. எனவே மஸ்க் ட்விட்டரை குறைந்த விலையில் வாங்க முயற்சிக்கிறார் என தகவல்கள் வெளியான நிலையில் தற்போது முற்றிலுமாக பின்வாங்கி விட்டார்.


Click it and Unblock the Notifications