ChatGPT கதை முடிஞ்சுரும் போலயே.. எச்சரிக்கை செய்த எலான் மஸ்க்.. நடந்தது என்ன? இதோ முழு விவரம்..
உலகம் முழுவதும் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆனாலும் இதைப் பயன்படுத்துவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்நிலையில் குழந்தைகள் மற்றும் மனநலம் பாதிக்கப் பட்டவர்களை ChatGPT போன்ற ஏஐ செயலிகளிடம் இருந்து மிகத் தூரமாகத் தள்ளிவைக்க வேண்டும் எலான் மஸ்க் கூறியுள்ளார்.
வீட்டுப்பாடம் செய்வது முதல் பெரிய சாப்ட்வேர் எழுதுவது வரை அனைத்திற்கும் இந்த ChatGPT போன்ற செயலியை தான் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் குழந்தைகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சாட்ஜிபிடி போன்ற ஏஐ செயலிகளைத் தள்ளிவைக்க வேண்டும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

அதாவது சமீபத்தில் கனடா நாட்டில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் பயங்கரமான துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியது. இந்த தாக்குதலை நடத்திய நபர் அதற்கு முந்தைய சில நாட்களாக சாட்ஜிபிடி செயலியிடம் இது குறித்து மிக தீவிரமாக உரையாடி இருக்கிறார். அதுவும் வன்முறையை எப்படி அரங்கேற்றுவது என்பது தொடர்பான பல விஷயங்களை அவர் இந்த செயலியிடம் கேட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக அந்த நபரின் விசித்திரமான உரையாடல்களை ஓபன் ஏஐ நிறுவனத்தின் தானியங்கி பாதுகாப்பு சிஸ்டம் ஆனது முன்கூட்டியே கண்டுபிடித்து எச்சிக்கைக் கொடுத்துள்ளது. ஆனால் இந்த விஷயத்தை காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டுமா என்று அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் தங்களுக்குள்ளேயே விவாதித்துவிட்டு, கடைசியில் இது சட்டப்படி அதிகாரிகளிடம் சொல்ல வேண்டிய அளவுக்குப் பெரிய ஆபத்து இல்லை என்று அதை அப்படியே அலட்சியமாக விட்டுவிட்டனர். தாக்குதல் நடந்த பிறகுதான் அந்த நபரின் கணக்கை நிறுவனம் முடக்கியுள்ளது.
ஆனால் இந்த தகவல் ஒருவழியாக வெளியே வந்ததும் பெரிய பூகம்பமே வெடித்துவிட்டது. அதுவும் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த ஒரு மாணவனின் தாய், அந்த தாக்குதலை திட்டமிட சாட் ஜிபிடி தான் முழுமையாக வழிகாட்டி உதவி செய்தது என்று குற்றம் சாட்டி கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா உச்ச நீதிமன்றத்தில் ஓபன் ஏஐ நிறுவனம் மீது ஒரு வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
அதை தொடர்ந்து நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த ஓபன் ஏஐ நிறுவனம், இந்த சம்பவம் ஒரு விவரிக்க முடியாத மிகப் பெரிய துயரம் என்று அறிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும் நிஜ உலக அச்சுறுத்தல்களை ஏஐ மூலம் கண்டுபிடித்துத் தடுப்பதற்கான பாதுகாப்பு அம்சங்களை நிபுணர்களுடன் இணைந்து தீவிரமாக மேம்படுத்தி வருவதாகவும் அந்நிறுவனம் ஒரு விளக்கத்தைக் கொடுத்தது.
இந்நிலையில் தான் எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் ஓபன் ஏஐ நிறுவனத்தை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். சாட்ஜிபிடி தான் பல மரணங்களுக்குக் காரணம் என்றும், உங்களின் அன்புக்குரியவர்களை அதனிடம் இருந்து தள்ளி வையுங்கள் என்றும் அவர் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

ஆனால் எலான் மஸ்க் கூறியதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் களத்தில் குதித்தார். அதாவது எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் ஆட்டோபைலட் மோடில் விபத்துக்களை ஏற்படுத்துவதையும், மஸ்க் உருவாக்கிய க்ரோக் ஏஐ செயலியின் பாதுகாப்பு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி இருவருக்கும் மிகப்பெரிய ஆன்லைன் போர் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்பு ஏஐ தொழில்நுட்பத்தின் பாதுகாப்புக்கு ஒன்றாகக் குரல் கொடுத்த இவர்கள் இருவரும், இப்போது பொதுவெளியில் மிக மோசமாகத் தாக்கி பேசுவது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications








