சரியான பல்ப், சேட்டை பிடிச்சவரு: டுவிட்டர் விடுத்த அழைப்பு., கடைசி நேரத்தில் டுவிஸ்ட் அடித்த மஸ்க்!
டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இணைவதற்கு எலான் மஸ்க்கிற்கு நிறுவனத்தின் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் மஸ்க் இந்த குழுவில் இணைய மறுத்துவிட்டார். எங்கள் பங்குதாரர்கள் எங்கள் வாரியத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களின் உள்ளீட்டை எப்போதும் மதிப்போம் என அகர்வால் டுவிட் செய்துள்ளார். டுவிட்டரின் மிகப்பெரிய பங்குதாரராக மஸ்க் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் குழுவில் இணைய மறுப்பு
டுவிட்டர் இயக்குனர் குழுவில் இணையாவிட்டாலும் தளத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் குறித்த ஆலோசனை வழங்குவதாக மஸ்க் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் தெரிவித்த தகவலை பார்க்கையில், ஏப்ரல் 9 ஆம் தேதி டுவிட்டர் இயக்குனர் குழுவில் இணைவதாக அறிவிக்கப்பட்டது, ஆனால் மஸ்க் இந்த குழுவில் இணைவதற்கு விருப்பமில்லை என தெரிவித்துவிட்டார் என குறிப்பிட்டுள்ளார். மேலும் பங்குதாரர்கள் எங்கள் இயக்குனர் குழுவில் இணையாவிட்டாலும் அவர்களது மரியாதையும், மதிப்பும், உள்ளீடும் பாதுகாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் அறிக்கை
எலான் மஸ்க் டுவிட்டர் இயக்குனர் குழுவில் இணைய வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் குறிப்பிட்டுள்ளார். எலான் மஸ்க் டுவிட்டர் இயக்குனர் குழுவில் சேராமல் இருப்பதற்கான காரணங்கள் குறித்து பார்க்கையில், எலான் மஸ்க் டுவிட்டர் பங்குகளை வாங்குவதில் முறையான ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என அமெரிக்க பங்குச்சந்தை இந்த மனுவைத் தள்ளுபடி செய்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதன் காரணமாகவே மஸ்க் டுவிட்டர் இயக்குனர் குழுவில் இணைய மறுத்துவிட்டார் என கூறப்படுகிறது.

டுவிட்டர் பங்குகளை வாங்கிய மஸ்க்
டுவிட்டரின் மிகப் பெரிய பிரபலங்களில் பிரதானமான ஒருவர் எலான் மஸ்க். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர், உலகப் பணக்காரர்கள் பட்டியல் பிரதான ஒருவர் என்ற பல புகழ் இவருக்கு இருந்தாலும் தனது டுவிட்டர் பக்கத்தில் கேட்கப்படும் ஆக்கப்பூர்வமான கேள்விக்கான பதில்கள் மற்றும் உரையாடல்களை அடிப்படை தரப்பினரிடமும், இளைஞர்களிடமும் மேற்கொள்வார். இவர் டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குனர் குழு மீட்டிங்கில் இணைய இருக்கிறார் என தகவல்கள் வெளியானது.

சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள 9% பங்குகள்
எலான் மஸ்க், மிகப்பெரிய டுவிட்டர் இன்க்., தளத்தின் மிகப்பெரிய பங்குதாரராக உருவெடுத்து இருக்கிறார். மஸ்க் சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள 9% பங்குகளை வாங்கி இருக்கிறார். இதையடுத்து தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் மஸ்கை டுவிட்டர் இயக்குனர் குழுவில் இணைத்தார். டுவிட்டர் போர்ட் மீட்டிங்கில் அவர் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மஸ்க் தன்னைத்தானே கேலி செய்து, அடுத்து என்ன நடக்கும் என கணித்து மீம் ஒன்றை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை வழங்குவதில் வல்லவர்
2024 ஆம் ஆண்டு வரை இவர் இயக்குனர் குழுவில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டது. மேலும் இவர் பதவியில் இருக்கும் காலம் மற்றும் இந்த காலம் முடிந்து 90 நாட்கள் வரை இவர் சார்ந்தோ அல்லது இவரை சார்ந்து இருப்பவர்களின் வழியாக 14.9 சதவீதத்துக்கு மேல் டுவிட்டரில் பங்கு வைத்துக் கொள்ள முடியாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இதுகுறித்து கூறிய டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால், டுவிட்டர் தளத்தில் எலான் மஸ்க் அதிக நம்பிக்கை வைத்திருப்பதோடு அவ்வப்போது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை வழங்குவார். தற்போது மஸ்க் டுவிட்டர் குழுவில் இணைய இருப்பது தளத்தை மேலும் பலம் சேர்க்கும் வகையில் இருக்கும் என குறிப்பிட்டார். டுவிட்டர் குழுவில் இணைந்து பணியாற்றுவதற்கு ஆர்வத்துடன் இருப்பதாக மஸ்க் டுவிட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications