எச்சரிக்கை இல்ல கட்டளை.. இன்னொரு முகத்தை காட்டத் தொடங்கிய Elon Musk!
மற்ற உறுப்பினர்களை போல் ஆள்மாறாட்டம் செய்யும் கணக்குகளை ட்விட்டர் தடை செய்யும் என எலான் மஸ்க் அறிவித்திருக்கிறார். இந்த விஷயம் உண்மையாகவே பாராட்டத்தக்க ஒன்று. ட்விட்டரை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு மஸ்க்கின் இந்த அறிவிப்பு பேரதிர்ச்சியாக இருக்கும்.

ட்விட்டரை வாங்கும் மஸ்க்
ஆரம்பக்கட்டத்தில் ட்விட்டரை வாங்க விருப்பம் தெரிவித்த மஸ்க், பின் இந்த முடிவில் இருந்து பின்வாங்கினார். இதற்கு பிரதான காரணமாக ஒன்றை குறிப்பிட்டார். அதாவது ட்விட்டரில் ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் குறித்த விவரத்தை நிர்வாகம் முறையாக சமர்பிக்கவில்லை என மஸ்க் கூறினார். இதையடுத்து பல்வேறு விவாதங்கள் சர்ச்சைகள் எழுந்தது. இவை அனைத்துக்கும் பிறகு மஸ்க் ட்விட்டரை வாங்க மீண்டும் விருப்பம் தெரிவித்து அதை வாங்கவும் செய்தார்.

பிழையை சரி செய்யத் தொடங்கிய மஸ்க்
ட்விட்டரை மஸ்க் வாங்கியவுடன் ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் குறித்து நடவடிக்கை எடுப்பாரா? முந்தை நிர்வாகத்தின் குற்றத்தை சுட்டிக்காட்டிய மஸ்க் அவரது தலைமையில் பொறுப்பேற்ற உடன் அதை சரி செய்வாரா? என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டது. இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் மஸ்க் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்.

ஆள்மாறாட்டம் செய்தால் தடை உறுதி
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை போல ஆள்மாறாட்டம் செய்து பல கணக்குகள் கண்டறியப்பட்டதை அடுத்து மஸ்க் இந்த முடிவை எடுத்துள்ளார் என கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபருக்கு மட்டும் இந்த சிக்கல் இல்லை சிறிய நடிகர் முதல் ஒவ்வொரு பிரபலங்களுக்கும் இந்த சிக்கல் இருந்தது. அது என் கணக்கு அல்ல, இது தான் எனது அதிகாரப்பூர்வ கணக்கு என பலரும் விளக்கமளித்ததை பார்த்திருப்போம். அந்தளவிற்கு ட்விட்டரில் போலி ஆள்மாறாட்ட கணக்குகள் இருந்தது.

எச்சரிக்கை அல்ல கட்டளை
இதுகுறித்த அறிவிப்பை மஸ்க் ட்வீட்டின் மூலம் வெளியிட்டார். அதில், ட்விட்டர் தற்போது நேரடியாக கணக்குகளை இடை நிறுத்தும் எனவும் மற்றவர்களை போல் ஆள்மாறாட்டம் செய்வது கண்டறியப்பட்டால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ட்விட்டர் பயனர்களின் உண்மைத் தன்மைக்கு இது நடவடிக்கை உகந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.

இன்னொரு முகத்தை காட்டும் மஸ்க்
எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய நாள் முதல் தற்போதுவரை வெளியாகும் அனைத்து அறிவிப்புகளும் ட்விட்டர் பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையிலாக தான் இருந்தது. அதே நேரத்தில் மஸ்க் சில நடவடிக்கைகளை பயனர்களின் நலன் கருதி எடுக்கத் தொடங்கி இருக்கிறார் என்பதையும் குறிப்பிட வேண்டிய நேரம் இது.

பயனர்களின் நலன் கருதி நடவடிக்கை
ட்விட்டரில் ட்வீட் எடிட் ஆப்ஷன் ட்விட்டர் ப்ளூ சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைத்து வருகிறது. இந்த ட்வீட்டர் ப்ளூ சந்தா சேவையும் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் மட்டுமே கிடைக்கிறது. இந்த நிலையில் ட்வீட் எடிட் பட்டன் சேவையை அனைவருக்குமானதாக மாற்ற எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ப்ளூ டிக் ஆப்ஷன்
ட்விட்டரின் புதிய தலைவரான எலான் மஸ்க், ட்விட்டரின் ப்ளூ டிக் ஆப்ஷனை பெறுவதற்கு அனைத்து பயனர்களும் மாதம் 8 டாலர் செலுத்த வேண்டும் என அறிவித்தார். அதாவது இந்திய மதிப்புப்படி மாதம் ரூ.660 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பால் திகைப்பில் இருந்த பயனர்கள் தற்போதுஆசுவாசம் அடைந்திருக்கின்றனர்.

அனைவருக்கும் இலவசம்
எலான் மஸ்க் எடிட் பட்டனை அனைத்து பயனர்களுக்கும் இலவசமாகக் கிடைக்கச் செய்ய திட்டமிட்டுள்ளதாக பிளாட்ஃபார்மரின் கேசி நியூட்டன் தெரிவித்துள்ளார். தற்போது இந்த சேவையானது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள Twitter Blue சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் மஸ்க்
உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ட்விட்டரை வாங்குவதற்கு முன்பே ட்வீட் எடிட் ஆப்ஷன் அறிமுகம் செய்து குறித்த விவாதத்தை முன்வைத்தார். இவர் ட்விட்டரை வாங்கினால் ட்வீட் எடிட் பட்டன் ஆப்ஷன் அனைவருக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஆப்ஷன் அனைவருக்கும் கிடைக்க இருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.


Click it and Unblock the Notifications