எலான் மஸ்க் வசமான ட்விட்டர்: ஊழியர்களிடம் பராக் அகர்வால் என்ன சொன்னார் தெரியுமா?
ட்விட்டர் தளத்தை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். சமீபத்தில் ட்விட்டர் இணையதளம் கருத்து சுதந்திரத்திற்கான தளமாக இல்லை' என கூறிவந்த எலான் மஸ்க், அந்நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியிருப்பதாக தெரிவித்தார். அதோடு ட்விட்டரில் எடிட் பட்டன் குறித்தும் அவர் பேசியிருந்தார். அதன்பின்பு ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கை 54.20 அமெரிக்க டாலர்களுக்கு வாங்க முன்வந்தார் எலான் மஸ்க்.

அதை தொடர்ந்து,ட்விட்டர் மற்றும் மஸ்க் என இரண்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்பு பேச்சுவார்த்தையில் 44 பில்லியன் டாலருக்கு மஸ்க்கிடம் விற்க ட்விட்டர் நிறுவனம் ஒப்புக்கொண்டது. குறிப்பாக நிர்வாக குழு உடனான பேச்சுவார்த்தையில் இந்த தொகைக்கு நிறுவனத்தை கொடுப்பதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனமாக இருக்கும் ட்விட்டர் இனி தனிநபர் நிறுவனமாக செயல்படும். அதேபோல் ட்விட்டர் நிறுவனத்தில் கருத்து சுதந்திரம் மேலும் வலுப்பெறும் என்று எலான் மஸ்க் தெரிவித்தார்.

அதேபோல் கருத்துச் சுதந்திரத்தை தான் நம்புவதாகவும் தன்னை மிக மோசமாக விமர்சிக்கும் நபரும் கூட ட்விட்டர் தளத்தில் தொடர்ந்து இருக்கவேண்டும் என்பதே தனது விருப்பம் என்று எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ட்விட்டர் நிறுவனம் கைமாறும் நிலையில், அந்நிறுவனத்தின் சிஇஓ பராக் அகர்வால் ஊழியர்களிடம் கூறியது தற்போது இணையத்தில்
வைரலாகி உள்ளது. அதாவது ஊழியர்களின் கூட்டம் ஒன்றில் பாரக் அகர்வால் கூறுகையில், எலான் மஸ்க் தலைமையில் ட்விட்டர் நிறுவனத்தின எதிர்காலம் நிச்சயமற்றதாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக ட்விட்டர் கைமாறும் நிலையில் அது எந்த திசையில் செல்லும் என்று எங்களுக்கே தெரியாது என்று கூறினார் அந்நிறுவனத்தின் சிஇஓ பராக் அகர்வால்.

அதேபோல் கடந்த சில ஆண்டுகளாக ட்விட்டர் நிறுவனத்திற்கு டிக்டாக் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற நிறுவனங்கள் கடும் போட்டி கொடுத்து வந்தன. பின்பு ட்விட்டர் சிஇஓ ஆக இருந்த ஜாக் டோர்சியின் செயல்பாடுகள் முதலீட்டாளர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து போர்ட் உறுப்பினர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகக் கடந்த நவம்பர் மாதம் சிஇஓ பொருப்பில் இருந்து விலகினார் ஜாக் டோர்சி. அதைத் தொடர்ந்து புதிய சிஇஓ ஆக இந்தியரான பராக் அகர்வால் நியமிக்கப்பட்டார்.

தற்போது எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி உள்ளதன் மூலம் விரைவில் பல அதிரடி மாற்றங்களை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் மிக விரைவில் மஸ்க் ட்விட்டர் ஊழியர்களுடன் ஒரு கேள்வி-பதில் அமர்வில் பங்கேற்பார் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications