ஸ்மார்ட்போனிலேயே மூழ்கி கிடக்குறீங்களா?... அப்ப இந்த 20-20 ஆட்டத்தை பழகுங்க!!
இருபத்தியோராம் நூற்றாண்டு வாழ்வியலின் இன்றியமையாத விஷயமாக மொபைல்போன்கள் மாறிவிட்டன. சந்தைப் போட்டியால் ஸ்மார்போன்களும், தரவுகளும் மிக மலிவான விலையில் கிடைப்பது மொபைல்போன் பயன்பாட்டை பன்மடங்கு அதிகரிக்கச் செய்துவிட்டது.

ஏராள நன்மைகள்
தொலைதொடர்பு வசதி என்பதை தாண்டி இன்று ஸ்மார்ட்போன்கள் ஏராளமான நன்மைகளை வழங்குகின்றன. அலுவலக பணிகள், பொழுதுபோக்கு வசதிகள், தொலைதொடர்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஒருங்கே வழங்குவதால், ஸ்மார்ட்போன் பயன்பாடு என்பது ஒவ்வொருவரின் வாழ்வின் அங்கமாக இருக்கின்றது.

அமிர்தமும் நஞ்சாகும்...
உலகிலேயே அதிக ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறிவிட்டது. ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல, ஸ்மார்ட்போன் பயன்பாடு பல்வேறு சமூக சீரழிவுகளுக்கும், உடல்நல பிரச்னைகளுக்கும் வித்திட்டு வருவதை மறுக்க இயலாது.

உடல்நல பிரச்னைகள்
குறிப்பாக, இளம் தலைமுறையினர் அதிக அளவில் மொபைல்போன் பயன்படுத்துவதால் அதிக உடல்நல மற்றும் மனநல பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர். மூளையின் செயல்பாட்டில் மந்தநிலை, மன அழுத்தம், நரம்பு கோளாறுகள், புற்றுநோய் மற்றும் முதுகு வலி பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவ உலகத்தினர் தெரிவிக்கின்றனர்.

மொபைலுக்கு நான் அடிமை
ஆறிலிருந்து ஆறுபது வரை மொபைல்போனுக்கு அடிமையாகிவிட்ட நிலையில், மொபைல்போன் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு, மூளை செயல்திறன் பாதிப்பு என்பது மிக முக்கிய பிரச்னையாக இருக்கும் என்றும் எச்சரித்து வருகின்றனர். இவற்றை எல்லாம் பொருட்படுத்துவதற்கும், சிந்திப்பதற்கும் நேரமில்லை.

சந்தேகம் இதுதான்...
ஆனால், எவ்வளவு நேரம் பயன்படுத்தினால் ஓரளவு இந்த பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம் என்ற கேள்வி பலருக்கும் தோன்றுவது இயல்பு. ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை எவ்வளவு முடியுமோ அவ்வளவு நல்லது என்பது ஒருபக்கம் இருந்தாலும், இதனை மனரீதியில் கால இலக்கு வைத்துக் கொள்வது பலன் தரும்.

இதை செய்யாதீங்க
சமீபத்திய ஆய்வுகளின்படி, குழந்தைகளிடம் வீடியோ சாட்டிங் செய்வதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும், 2 முதல் 5 வயதுடைய குழந்தைகள் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக ஒரு மணிநேரம் வரை மட்டுமே பார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.

20-20 ஆட்டம்
பெரியவர்கள் தொடர்ந்து ஸ்மார்ட்போனை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கலாம். 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 வினாடிகள் கண்களுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம். கண்களிலிருந்து 8 அங்குல இடைவெளியில் ஸ்மார்ட்போன்களை வைத்து பார்ப்பது வழக்கமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறைந்தது 16 முதல் 18 அங்குல இடைவெளியில் ஸ்மார்ட்போனை வைத்து பழகுவது பலன் தரும்.

இதுவும் கைகொடுக்கும்
ஸ்மார்ட்ஃபோனில் திரையில் பிரகாசத்தை குறைத்து வைத்துக்கொள்வதும் நல்லது. வெளிப்புற வெளிச்சத்திற்கு தக்கவாறு தானாக திரையில் பிரகாசம் மாறிக்கொள்ளும் வசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கும்பிடு போடுங்க...
சமூக வலைத் தளங்களில்தான் அதிக நேரம் செலவிடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, சமூக வலைத்தள செயலிகளை சில நாட்கள் முடக்கி வைத்தோ அல்லது நிரந்தரமாக நீக்கி வைத்து பார்ப்பதும் ஒரு உபாயம்தான்.

தூக்கத்திற்கு முன்...
குடும்பத்தினர், நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவதை வழக்கமாக மாற்றிக் கொள்வதும் உசிதம். தூங்குவதற்கு 2 மணிநேரம் முன்னதாக ஸ்மார்ட்போன் பயன்பாட்டை தவிர்ப்பதற்கும் அறிவுறுத்துகின்றனர்.

எவ்வளவு நேரம் பயன்படுத்தலாம்?
இப்போது இருக்கும் சூழலில், மொபைல்போன் பயன்பாட்டை முற்றிலுமாக குறைக்க சொல்ல இயலாது. ஆனால், நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக ஒன்றரை முதல் இரண்டு மணிநேரம் வரை பயன்படுத்துவது ஓரளவு பாதிப்புகளை குறைக்க உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications