துபாய் சாலைகளில் AI உதவியுடன் லேசர் ஸ்கேன்னிங்.. எதற்காக சாலைகள் ஸ்கேன் செய்யப்படுகிறது? உண்மை இதோ..
உலகிலேயே மிக சிறந்த சாலை கட்டமைப்பை கொண்ட நாடு எது என்றால்? உடனே எல்லோரும் தயங்காமல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (United Arab Emirates) என்று சொல்லலாம். அதிலும் குறிப்பாக துபாய் (Dubai) சாலைகளை பற்றி கூறியே ஆக வேண்டும்.
காரணம் இவை மிகவும் சிறந்த சாலை கட்டமைப்பை கொண்டுள்ளன. இந்த சாலைகள் எவ்வளவு சிறப்பானது என்றால், இங்கு மேடு பலன்களையே உங்களால் காண முடியாது என்று கூறப்படுகிறது. இருப்பினும், சாலைகளில் உள்ள சிறிய பிளவுகளை கூட மிச்சம் வைக்க இந்த நாடு விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

ஆம், துபாய் சாலையில் இனி 1மிமீ அளவில் கூட பிளவுகளை எதிர்காலத்தில் உங்களால் பார்க்கவே முடியாது என்று கூறப்பட்டுள்ளது. என்னது 1mm அளவில் கூட சாலையில் சிறிய பிளவுகள் கூட இருக்காதா? இது சாத்தியமா? எப்படி இத்தகைய சாலைகளை இவர்களால் மட்டும் உருவாக்க முடியும்? என்று உங்களுடைய கேள்விகள் அனைத்திற்கும் பதில் இங்குள்ளது.
துபாயின் முன்னோக்கி சிந்தனை மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக்கான அதிநவீன அணுகுமுறையை கையாள்வதில் இவர்களுக்கு நிகர் வேறு எந்த நாட்டவரும் இல்லை என்பதே உண்மை. அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் துபாய் வேற லெவலில் உள்ளது. எமிரேட்டின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) உதவியை சாலைகளில் பயன்படுத்த துவங்கியுள்ளது.
சாலைகளில் AI தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்த முடியும்? கார்களுடன் கேமராக்களை இணைத்து, அத்துடன் லேசர் ஸ்கேனர்களைப் பயன்படுத்தி, சாலையின் மேற்பரப்பை ஸ்கேன் செய்து விரிசல்கள், குழிகள் மற்றும் பராமரிப்பு தேவைப்படும் பிற குறைபாடுகளைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை துபாய் இப்போது செயல்படுத்த துவங்கியுள்ளது.

பேவ்மென்ட் மேனேஜ்மென்ட் சிஸ்டம் என்ற தொழில்நுட்பத்தை, ரோந்து வாகனங்களில் நிறுவப்பட்டு, சாலைகளின் நிலை குறித்த தகவல்களை சேகரிக்க நகரத்தின் நெடுஞ்சாலைகளை லேசர் ஸ்கேன் செய்து இந்த வாகனங்கள் சுற்றி வருகின்றன. இந்த அமைப்பு உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள் மற்றும் லேசர் ஸ்கேனர்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி AI லேசர் ஸ்கேனர், அந்த சாலைகளின் பரப்புகளில் பதின்மூன்று வெவ்வேறு விதமான குறைபாடுகளைக் கண்டறிய முடியும். இந்த குறைபாடுகளில் பரப்புகளில் ரட்டிங் (rutting), ராவெலிங் (ravelling), பேட்ச்சிங் (patching) மற்றும் லூசனிங் (loosening) போன்றவற்றை அடக்கும்.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் சாலைகளில் 1 மிமீ அளவுக்கு சிறியதாக இருக்கும் விரிசல்களை கூட இந்த AI கணினி கண்டறியும். விரிசல்களின் அகலம், ஆழம் மற்றும் அது உருவாகி இருக்கும் லொக்கேஷன் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை AI அல்காரிதம்களைப் பயன்படுத்தி கணினி நிகழ்நேரத்தில் தரவை சேகரிக்கிறது.

இந்த அமைப்பு RTA பொறியாளர்களுக்கான விரிவான அறிக்கைகளை உருவாக்குகிறது, அவர்கள் கணினி வழங்கிய தகவல்களின் அடிப்படையில் சாலைகள் பழுதுபார்க்கப்படும் என்று கூறப்படுகிறது. சிறிய விரிசல்களை ஆரம்ப காலத்திலேயே கண்டறிவது பராமரிப்புச் செலவுகளை வெகுவாக குறைக்கும் என்று கூறப்படுகிறது. இது வாகன ஓட்டிகளின் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
கூடுதலாக, இந்த அமைப்பு துபாயின் சாலைகளின் மெய்நிகர் வரைபடத்தை உருவாக்க உதவுவதாகவும் கூறப்படுகிறது. இது 97 சதவிகிதம் துல்லியமானது. இத்தகைய தொழில்நுட்பத்தை நமது ஊர்களில் பயன்படுத்தினால் எப்படி இருக்கும்? மெல்லிய தடிமன் கொண்ட நமது ஊரின் ரோட்டில் ஒரு ஆள் உயர பள்ளங்கள் இருப்பதை Ai கண்டால், கடுப்பாகி நமது நாட்டைவிட்டே வெளியேற யோசித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.


Click it and Unblock the Notifications








