சட்டவிரோத செயல்பாட்டில் தங்கச் சுரங்கம்: இனி ட்ரோன்கள் பறந்து பறந்து கண்காணிக்கும்- அதிரடி நடவடிக்கை!
கூடலூர் கோட்டத்திற்குட்பட்ட தேவாலா-பந்தலூர் பகுதியில் சட்டவிரோத தங்கச் சுரங்கத்தை எதிரத்து நடவடிக்கை எடுக்கும் வகையில் தமிழக வனத்துறையினர் சுரங்கத்தை ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்க இருக்கின்றனர். வனத்துறை அதிகாரியின் உத்தரவின் பேரில் சட்டவிரோத நடவடிக்கையை கண்காணிக்க ஆளில்லா விமானங்கள் அனுப்பப்பட இருக்கிறது.

சட்டவிரோதமான தங்க சுரங்கம்
பந்தலூர் வனச்சரக அலுவலர் ஜி.ராம்குமார் தலைமையிலான குழுவினர், ட்ரோன் கேமரா மூலமாக சட்டவிரோதமான தங்க சுரங்கம் தோண்டுபவர்களை அடையாளும் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேவாலா பந்தலூர் சுற்றுவ்ட்டார பகுதிகளில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து சுரங்கம் அமைத்து தங்கம் சேகரிப்பு பணி ஈடுபட்டு வருகிறது. ஆங்கிலேயேர்களின் ஆட்சி காலம் நிறைவு பெற்றதையடுத்து இந்த பகுதி வனத்துறை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தொடர்ந்து இந்த பகுதிக்குள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் வருவதற்கு தடை
தொடர்ந்து இந்த பகுதிகளுக்குள் மக்கள் வரவும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் சிலர் புதிய சுரங்க பாதைகள் அமைத்து தங்க படிமங்களை எடுத்து வருவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து கூடலூர் வன அலுவலர் கொம்முஓம்காரம் உத்தரவின்பேரில், ட்ரோன் மூலம் கண்காணிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதையடுத்து ட்ரோன் கேமராவின் மூலம் ஆட்கள் நடமாட்டம், தங்க படிமன்கள் சேகரிப்பு உள்ளிட்ட செயல்கள் கண்காணிப்பு செய்ய முடியும் என கூறப்படுகிறது.

640 ஹெக்டேர் வனப்பகுதி
தேவாலா பந்தலூர் பகுதியில் 640 ஹெக்டேர் வனப்பகுதியில் 5000-க்கும் மேற்பட்ட சட்டவிரோத தங்க சுரங்கங்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சில சுரங்கங்கள் கைவிடப்பட்ட நிலையில் இருந்தாலும் மற்றவை இன்னும் கிராமங்களில் வசிக்கும் சுரங்கத் தொழிலாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தி நியூஸ் மினிட் தெரிவித்த தகவல்களை குறித்து பார்க்கலாம். அதில், பந்தலூர் வன ஊழியர் ஒருவர் தெரிவித்த கருத்துகளை பகிர்ந்துள்ளது. அதில் சுரங்க தொழிலாளர்களை காட்டில் இருந்து விலக்கி வைக்கவும் செழித்து இருக்கும் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளை ஒட்டுமொத்தமாக பார்வையை பெறுவதற்கும் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக கண்காணிப்பு சிரமம்
அதேபோல் காடுகளுக்குள் வாகனம் வரும் சத்தம் கேட்டவுடன் சுரங்கத் தொழிலாளர்கள் தப்பி விடுகிறார்கள். அதேபோல் மழை பெய்து வருவதால் சாலை மற்றும் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பது என்பது சிரமமாக இருக்கிறது எனவும் இருப்பினும் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு என்பது அப்பகுதியின் சட்டவிரோத நடவடிக்கையை குறைக்கும் என அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 12 அடி ஆழமுள்ள சுரங்க பள்ளம்
அக்டோபர் 5 ஆம் தேதி சுமார் 12 அடி ஆழமுள்ள சுரங்க பள்ளத்தில் குட்டி யானை ஒன்று தவறி விழுந்தது. பின் வனத்துறையினர் அதை மீட்டனர். சில நாட்களுக்கு பிறகு அக்டோபர் 9 ஆம் தேதி ஒரு வயது கொண்ட யானையின் எச்சங்கள் சுரங்க தளத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த யானை ஆறு மாதங்களுக்கு முன்பு சுரங்கத்தில் விழுந்து இறந்திருக்கலாம் எனவும் கூறப்பட்டது. சுரங்கக் குழிகளில் ஒன்றில் விலங்கு அல்லது மனிதன் விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் கூறப்படுகிறது. அதேபோல் கடந்த பல ஆண்டுகளாக நடுத்தர வயதுடைய ஆண்களும் பெண்களும் தங்கச் சுரங்கத்தில் ஈடுபட்டு வந்தாலும் பல பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும் தற்போது சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ரூ.40,000 அபராதம் விதிப்பு
அதேபோல் தி இந்து நாளிதழில் வெளியான தகவலின்படி, சேரம்பாடி ரேஞ்ச் பகுதியில் புதிய சுரங்கக் குழி தோண்டியதாகக் கூறப்பட்ட நான்கு பேரை வனத்துறையினர் நவ.,8 ஆம் தேதி கைது செய்தனர். இதையடுத்து அவர்களுக்கு ரூ.40,000 அபராதம் விதிக்கப்பட்டது. ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும் பணி என்பது எல்லைப் பகுதிகளில் தொடங்கி பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ட்ரோன்கள் பயன்பாடு அதிகரிப்பைத் தொடர்ந்து அதை பறக்கவிடுவதற்கும் கட்டுப்பாடுகள் அந்த பகுதிகளுக்கு ஏற்ப விதிக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications