அந்த லிங்கை தொடவே வேண்டாம்: தொட்டால் பணம் அபேஸ்- போலீஸார் கடும் எச்சரிக்கை!
இதை அப்டேட் செய்யாவிட்டால் வங்கி கணக்கு முடக்கப்படும் என வரும் மெசேஜ்ஜை கிளிக் செய்யவோ தொடவோ வேண்டாம் என சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து இதுகுறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதாவது அதிகாரப்பூர்வ வங்கி தளம் போன்றே ஒரு தளத்தை உருவாக்கி அதற்கான லிங்க் மெசேஜ் மூலமாக வருகிறது. வங்கி கணக்கில் இதை அப்டேட் செய்யவில்லை என்றால் உங்களது வங்கி கணக்கு முடக்கப்படும் 10 நிமிடத்துக்குள் அப்டேட் செய்ய வேண்டும் போன்ற தகவல்களுடன் இந்த லிங்க் வருகிறது.

இந்த மெசேஜ்களை பெறுபவர்கள் இந்த லிங்க்கை கிளிக் செய்து அதில் கேட்கப்படும் விவரங்களை பதிவு செய்கின்றனர். இந்த விவரங்களை பெற்றவுடன் கும்பல் மோசடி வேலையை தொடங்குகிறது. இதுபோன்று வரும் மெசேஜ்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் வங்கியில் இருந்து இதுபோன்ற மெசேஜ்களை அனுப்பப்படவில்லை எனவும் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கேஒய்சி அப்டேட் செய்யும்படி வங்கி மெசேஜ் போன்று ஒரு லிங்கை அனுப்புகின்றனர். இதில் சந்தேகத்திற்கு இடமான லிங்க் ஒன்றை அதிகாரப்பூர்வ வங்கி வெப்சைட் போன்றே வடிவமைத்து அனுப்புகின்றனர். மேலும் பயனர்களுக்கு இதுபோன்று வாட்ஸ்அப் செய்தி அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது.
அதேபோல் வெளியான தகவலின்படி வாட்ஸ் அப்-ல் எஸ்பிஐ வங்கி ரூ.50 லட்சம் மதிப்புள்ள பரிசுகளை வழங்குவதாக போலி மெசேஜ்கள் பரவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த அனைத்து தகவல்களும் மோசடி செயல்கள் என்பதால் இதை நம்ப வேண்டாம் என இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர். இந்தியாவில் இணைய பயனர்களில் கிட்டத்தட்ட 60 சதவீதம் பேர் கடந்த 1 ஆண்டில் மட்டும் ஹேக்கிங்கிற்கு பலியாகி இருக்கின்றனர் என தகவல்கள் தெரிவிக்கிறது.
கேஒய்சி சரிபார்ப்பு என்ற பெயரில் ஹேக்கர்கள் குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். அதில் ஒரு லிங்க் வழங்கப்படுகிறது. இந்த லிங்க்கை கிளிக் செய்யும் போது ஓபன் செய்யப்படும் தளம் அதிகாரப்பூர்வ ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வலைதளம் போன்றே இருப்பதாக கூறப்படுகிறது. உள்நுழைவதற்கு தொடரவும் என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் kyc.php பக்கத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

அதன்பின் நெட்பேங்கில் உள்நுழைய பயனர் பெயர், கடவுச்சொல், கேப்ட்சா உள்ள ரகசிய தகவலை பதிவிட இந்த பக்கம் கேட்கப்படுவதாக கூறப்படுகிறது. இது எதையும் கிளிக் செய்யவோ பூர்த்தி செய்யவோ வேண்டாம் என எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.
இதன்பிறகு பயனரிடன் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி எண் கேட்கப்படுகிறது. இதை உள்ளிட்டவுடன் பயனரை மற்றொரு பக்கத்திற்கு எடுத்துச் செல்கிறது. அதன்பின் மீண்டும் பயனர் பெயர், மொபைல் எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிடும்படி கேட்கிறது. தரவு உள்ளிட்டப்பிறகு பயனரின் ஓடிபி பக்கத்திற்கு திருப்பி விடுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேபோல் கவரச்சிகரமான இலவச பரிசுகள் மற்றும் பலவற்றை வழங்குவதாக கூறி ஏமாற்றி வருகின்றனர். இந்த தகவல் வாட்ஸ்அப் உள்ளிட்ட தளங்களில் பரவி வருகிறது. இதுபோன்ற தகவல்களை நம்பவும் வேண்டாம் பகிரவும் வேண்டாம். இந்த லிங்க்கை கிளிக் செய்யும் போது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் கவர்ச்சிகரமான புகைப்படத்துடன் வாழ்த்து செய்தி வருகிறது. ரூ.50 லட்சம் பரிசு தொகை கணக்கில் வரவு வைக்கப்படும் என கூறி தகவல்களை திருட முயல்கின்றனர். இதுபோன்ற தகவல்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.


Click it and Unblock the Notifications