டோமினோஸ் பீஸ்ஸா ஆர்டர் செய்தவர்களின் தகவல் ஹேக்.. கிரெடிட் கார்டு விபரம் வரை 'எல்லாம்' திருட்டு..
பிரபலமான பீஸ்ஸா விற்பனை நிலையமான டோமினோஸ் இந்தியாவில் இணைய தாக்குதலுக்குப் பலியானதாகத் தெரிகிறது. இஸ்ரேலிய சைபர் கிரைம் உளவுத்துறையின் இணை நிறுவனர் அலோன் கால் கூறுகையில், இந்திய டொமினோஸின் 13 டிபி உள் தரவை ஹேக்கர்கள் அணுகியுள்ளனர். இதில் ஐடி, லீகல், பைனான்ஸ், சந்தைப்படுத்தல், நிறுவனத்தின் செயல்பாடுகள் போன்றவற்றுடன் 250க்கும் மேற்பட்ட ஊழியர்களின் பணியாளர் விவரங்களையும் ஹேக்கர்கள் திருடி உள்ளனர்.

கிரெடிட் கார்டு விவரங்கள் உட்பட வாடிக்கையாளர் பெயர்கள் திருட்டு
டொமினோஸின் இந்தியா பயன்பாட்டில் பீஸ்ஸா வாங்குவதற்குப் பயன்படுத்தப்படும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டு விவரங்கள் உட்பட வாடிக்கையாளர் பெயர்கள், தொலைப்பேசி எண்கள், மின்னஞ்சல் ஐடிகள், விநியோக முகவரி, கட்டண விவரங்கள் உள்ளிட்ட அனைத்து வாடிக்கையாளர் விவரங்களும் ஹேக்கர்களால் சூறையாடப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக சுமார் 18 கோடி ஆர்டர் விவரங்களை ஹேக்கர்கள் திருடியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

550,000 டாலர் விலைக்கு தகவல்கள் டார்க் வெப்பில் விற்பனை
இதில் அதிர்ச்சி அடையும் விஷயமே, ஹேக்கர்கள் திருடிய இந்தியர்களின் முழு தரவையும் ஹேக்கர்கள் டார்க் வெப் மூலம் விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளனர். அலோன் காலின் கூற்றுப்படி, முழு தரவுத்தளத்திற்கும் ஹேக்கர்கள் 550,000 டாலர் என்ற விலையை நிர்ணயம் செய்துள்ளனர். இது இந்திய மதிப்பின்படி சுமார் ரூ .4 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒட்டுமொத்த தரவை வினவுவதற்கு ஒரு தேடல் போர்ட்டலையும் உருவாக்க ஹேக்கர்கள் திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

டோமினோஸ் மௌனம் காப்பது ஏன்?
இந்த விற்பனை டார்க் வெப் மூலம் நடக்கிறது மற்றும் இணைய மோசடி செய்பவர்கள் அடிக்கடி உலாவும் மற்ற வலைத்தளத்திலும் இது இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இப்போது வரை, டொமினோஸின் இந்தியா நிறுவனம் தனது நுகர்வோரின் தரவு அதன் சேவையகங்களிலிருந்து திருடப்பட்டதாக அல்லது கசிந்ததா என்பதைப் பற்றி நிறுவனம் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை என்பது இந்த இடத்தில் கவனிக்கத்தக்கது.

இந்தியாவில் 300% வளர்ச்சியடைந்துள்ள ஹேக்கிங் தாக்குதல்
சமீபத்தில் இந்தியா பல பெரிய அளவிலான இணைய மீறல்களுக்குப் பலியாகி வருவதால் இது மிகவும் கவலையாக உள்ளது. கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (சி.இ.ஆர்.டி-இன்) தரவுகளின்படி, இந்தியா மீதான கோவிட்-19 தொற்று இணையத் தாக்குதல்களின் போது கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 300% வளர்ச்சியடைந்துள்ளது, 2020 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 11,58,208 வழக்குகள் அதிகரித்துள்ளது, இது 2019 ஆம் ஆண்டில் வெறும் 3,94,499 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தீவிரமான மற்றும் மிகவும் கடுமையான தாக்குதல்
ஆசிய பசிபிக் மற்றும் ஜப்பானில் சைபர் பாதுகாப்பின் எதிர்காலம் என்ற தலைப்பில் சோஃபோஸ் கணக்கெடுப்பு நடத்திய ஆய்வில், இந்திய உள்நாட்டு நிறுவனங்களில் சுமார் 52 சதவீதம் நிறுவனங்கள் கடந்த 12 மாதங்களில் பல விதமான இணையத் தாக்குதலுக்குப் பலியானதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் அனைத்தும் பெரும்பாலான அளவில் வெற்றியடைந்த மீறல்கள் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக 71 சதவிகித நிறுவனங்கள் தீவிரமான அல்லது மிகவும் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது என்று ஒப்புக் கொண்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் சார்ந்த தீம்பொருள்
மேலும் 65 சதவீதம் பேர் ஏற்பட்ட தாக்குதலைச் சரிசெய்ய ஒரு வாரத்திற்கு மேல் எடுத்ததாகக் கூறியுள்ளனர். அடுத்த சில ஆண்டுகளில் வணிகத்தின் இணைய பாதுகாப்பிற்கு மிகவும் கடுமையான அச்சுறுத்தலாக மாறிவிடும் என்றும், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் சார்ந்த தீம்பொருள் ஆகியவை அரசால் வழங்கப்படும் சைபர் தாக்குதல்களாக இருக்கும் என்று சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் கணித்துள்ளனர்.

பெரிய கேள்விக் குறி?
இதை கேட்பதற்குச் சற்று அச்சுறுத்தலாக இருந்தாலும், தற்பொழுது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் இது சாத்தியமே என்கிறது வல்லுநர் குழு. டிஜிட்டல் உலகில் உண்மையிலேயே பாதுகாப்பு இருக்கிறதா என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications