5G Towers: உண்மையை உளறிட்டாங்க! ஏர்போர்ட் அருகில் 5ஜி டவர்களை வைக்க வேண்டாம்! மீறினால்?
ஏற்கனவே 5ஜி தொழில்நுட்பம் (5G Technology) மீது மக்களுக்கு எக்கச்சக்கமான சந்தேகங்கள் உள்ளன. இதற்கிடையில், அந்த சந்தேகங்களை மேன்மேலும் அதிகரிக்கும்படி இந்திய தொலைத்தொடர்புத் துறை (DoT) ஒரு உண்மையை உளறி உள்ளது!
அதென்ன உண்மை? விமான நிலையங்களுக்கு அருகில் 5ஜி டவர்கள் அமைக்கப்படுவதில் என்ன சிக்கல் உள்ளது? இதன் பின்னணியில் உள்ள ஆபத்து என்ன? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

சி-பேண்ட் VS அல்டிமீட்டர்!
விமான நிலையங்களுக்கு அருகில் 5ஜி டவர்கள் அமைக்கப்படுவதற்கு பின்னால் உள்ள சிக்கல்களையும், அதனை தொடர்ந்து வரும் ஆபத்துகளையும் பற்றி பேசுவதற்கு முன்னர்.. சி-பேண்ட் (C-Band) என்றால் என்ன? அல்டிமீட்டர் (Altimeter) என்றால் என்ன? என்பதை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்!
அப்போது தான் 5ஜி தொழில்நுட்பத்திற்கும் விமானப் போக்குவரத்துத் துறைக்கும் இடையே உள்ள சிக்கல் என்ன என்பதை பற்றி நீங்கள் புரிந்துகொள்ள முடியும்!

சி-பேண்ட் என்றால் என்ன?
சி-பேண்ட் என்பது ஏர்வேவ் ஸ்பெக்ட்ரமின் (Airwave spectrum) ஒரு பகுதியாகும். அதே சமயம் சி-பேண்ட் ஆனது 5ஜிக்கு மிகவும் பொருத்தமான ஒரு பேண்ட் ஆகவும் கருதப்படுகிறது.
ஏனெனில் இது அதன் முன்னோடி ஆன 4ஜியை விட வேகமான இணைப்புக்கு பயன்படுத்தக்கூடிய பரந்த அளவிலான ஸ்பெக்ட்ரம் வரம்பை வழங்குகிறது.
அதாவது இது 3.3 முதல் 4.2GHz வரையிலான அலை அதிர்வெண்ணை (Wave frequency) கொண்டுள்ளது. இந்த இடத்தில் தான் விமான போக்குவரத்து துறைக்கு ஒரு சிக்கல் உள்ளது. அதென்ன சிக்கல் என்பதை பற்றி அறிய அல்டிமீட்டர் என்றால் என்ன என்பதை பற்றி புரிந்துகொள்ள வேண்டும்!

அல்டிமீட்டர் என்றால் என்ன?
ரேடியோ ஆல்டிமீட்டர் அல்லது ரேடார் ஆல்டிமீட்டர் (Radio or radar altimeter) என்பது ஒரு விமானத்தில் உள்ள ஒரு கருவியாகும்.
ஒரு விமானம் ஆனது நிலம் அல்லது தண்ணீருக்கு மேலே பறந்து கொண்டு இருக்கும்போது, குறிப்பாக அந்த விமானம் தானியங்கி பயன்முறையில் (Automatic mode) இருக்கும்போது அதன் உயரத்தைப் பற்றிய நேரடித் தகவல்களை தரும் ஒரு கருவி தான் - ரேடியோ ஆல்டிமீட்டர் அல்லது ரேடார் ஆல்டிமீட்டர் ஆகும்!

துல்லியம் - மிக மிக முக்கியம்!
ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷனின் (Federal Aviation Administration) கூற்றுப்படி, ரேடியோ ஆல்டிமீட்டர் ஆனது ஒரு பாரோமெட்ரிக் அல்டிமீட்டரை (Barometric altimeter) விட மிகவும் துல்லியமாக செயல்படும்.
இது தரைக்கும், விமானத்திற்கும் இடையே உள்ள தூரத்தை மிகவும் துல்லியமாக கணக்கிட்டு சொல்லும். அந்த தகவல்கள் தரையிறங்கும் ஒரு விமானத்திற்கும் அல்லது மிகவும் குறைவான உயரத்தில் பறக்கும் ஒரு விமானத்திற்கும் தேவைப்படும் மிக மிக முக்கியமான விஷயங்களில் ஒன்றாகும்!

இந்த ஆல்டிமீட்டரும் 5ஜியின் சி-பேண்டும் எங்கே மோதுகின்றன?
மிகவும் எளிமையாக கூற வேண்டும் என்றால் - சி-பேண்ட்டின் சிக்னலும் ஆல்டிமீட்டரின் சிக்னலும் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்கின்றன!
விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், 5ஜி-யின் சி-பேண்ட் வழியாக வெளியிடப்படும் சிக்னல் ஆனது, ஒரு விமானம் எந்த அளவிலான உயரத்தில் உள்ளது என்கிற தகவலை அறிந்துகொள்ள உதவும் அல்டிமீட்டரின் சிக்னல்களில் தலையிடும்.
இதன் விளைவாக, லோ விசிபிலிட்டி லேண்டிங்ஸ் (low-visibility landings) அல்லது மோசமான வானிலையின் கீழ் நிகழ்த்தப்படும் லேண்டிங்ஸ் பாதிக்கப்படலாம்!

அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவிலும்!
அமெரிக்காவில் 5ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டபோது, விமான நிலையங்களுக்கு அருகில் அமைக்கப்படும் சி-பேண்ட் 5G டவர்கள் ஆனது விமானத்தில் பயணிக்கும் பல்லாயிரக்கணக்கான பயணிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று அமெரிக்க விமானத் துறை எச்சரித்தது.
அதேபோல, தற்போது பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா (Vi) உள்ளிட்ட இந்திய டெலிகாம் நிறுவனங்கள் ஆனது விமான நிலையங்களுக்கு அருகில் சி-பேண்ட் அடிப்படையிலான 5ஜி சேவைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு இந்திய தொலைத்தொடர்புத் துறை (DoT) கேட்டு கொண்டுள்ளது.

குறிப்பாக 2.1 கிலோமீட்டர்களுக்குள்!
இது தொடர்பாக வெளியான டாட் (DoT) அறிக்கையில், விமான நிலையங்களுக்கு அருகில் சி-பேண்ட்டை தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக ஓடுபாதைகளின் இரு முனைகளிலிருந்தும் 2.1 கிலோமீட்டர்களுக்குள் 3 GHz முதல் 3.67 GHz வரையிலான அதிர்வெண்களின் கீழ் 5ஜி-ஐ வழங்க வேண்டாம் என்றும் டெலிகாம் நிறுவனங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது!

உளறப்பட்ட உண்மை!
இந்திய தொலைத்தொடர்பு துறையின் இந்த அறிவுரை ஆனது 5ஜி தொழில்நுட்பத்தில் எந்தவொரு ஆபத்தும் இல்லை என்று கூறியவர்களின் முகத்திரையை கிழித்துள்ளது என்றே கூறலாம்.
5ஜி தொழில்நுட்பம் ஆனது விமான சேவையில் எந்த குறுக்கீடையும் ஏற்படுத்தாது என்றால், ஏன் இதுபோன்ற அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும்? ஆக அறிவுரை என்கிற பெயரின்கீழ் ஒரு உண்மை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது அல்லது உணரப்பட்டுள்ளது என்பது வெளிப்படை!

இந்த சிக்கலுக்கு ஒரு தீர்வும் உள்ளது!
டிஜிசிஏ (DGCA) எனப்படும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (Directorate General of Civil Aviation) கூற்றுப்படி, விமானத்தில் உள்ள அல்டிமீட்டர் பில்டர்களை மாற்றுவதன் மூலம் இந்த சிக்கலை சரி செய்ய முடியும்.
அது முடியும் வரை, விமான நிலையங்களுக்கு அருகில் 5G சேவைகளை வெளியிடுவது ஆபத்தில் முடியலாம்!
Photo courtesy: Wikipedia


Click it and Unblock the Notifications