கைரேகை சிக்கலுக்கு மாற்றுவழி: கண் கருவிழி ஸ்கேன் மூலம் ரேஷன் பொருட்கள்- அமைச்சர் சக்கரபாணி!
ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுப்பதற்கு என குடும்ப அட்டைதாரர்களுக்கு பயோமெட்ரிக் கருவி மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் கார்ட்களில் பெயர் உள்ள ஒருவர் கடைக்கு சென்று கைரேகை வைத்தால் மட்டுமே பொருட்கள் வாங்கப்படும். ஆனால் சில சமயங்களில் ஏற்படும் பயோமெட்ரிக் இயந்திர கோளாறு காரணமாக பொருட்கள் விநியோம் செய்வதில் சிக்கலை சந்திக்க வேண்டிய நிலை இருக்கிறது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் கண் கருவிழி சரி பார்க்கும் முறையானது முன்னோட்டத்திட்டமாக செயல்படுத்தப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார்.

நியாய விலைக் கடைகளில் பொருட்கள் விநியோகம்
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகளில் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஸ்மார்ட்கார்ட் வழங்கப்பட்டு பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளுக்கு கொண்டுவரப்படும் ஸ்மார்ட்கார்ட்டில் உள்ள க்யூ கார்ட் ஸ்கேன் செய்யப்படும். அதில் காட்டப்படும் பெயர்களில் உள்ளவர்கள் மட்டுமே கைரேகை பதிவு மிஷினில் விரல் வைத்து கைரேகை ஸ்கேன் செய்து பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இது முறையாக நடக்கிறதா என்பதை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கண்காணித்து வருகிறது.

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கம்
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தில், நியாய விலைக்கடைகளில் கைரேகை பதிவு செய்து பொருட்கள் விநியோகிக்கப்படும் முறையில் உள்ள சிக்கல்கள் குறித்து சட்டப்பேரவை உறுப்பினர் டிஆர்பி ராஜா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்திருந்தார். அதில் ஒரு சில இடங்களில் கைரேகை பிதிவில் சிக்கல்கள் இருப்பதாக பொதுமக்கள் குறிப்பிடுகிறார்கள், இந்த சிக்கலுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டார். இதற்கு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பதிலளித்தார். இதில் கூறப்பட்ட விவரங்களை பார்க்கலாம், அதில் உணவுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ், பயனாளிகளின் ஆதார் எண் மூலம் கை ரேகை சரிபார்ப்பு நடைமுறையில் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கைரேகை சரிபார்ப்பில் சிக்கலை சந்திக்கும் போது கையெழுத்து பெற்றும் பொருட்கள் வழங்கும்படி உத்தரவிடப்பட்டிருக்கிறது.

கண் கருவிழி சரி பார்க்கும் முறை
கடைக்கு நேரடியாக வரமுடியாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் பொருட்களை வாங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கைரேகை முறையில் சிக்கல் இருப்பதாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் குறிப்பிடுகின்றனர். கண் கருவிழி சரி பார்க்கும் முறை முன்னோட்டத் திட்டமாக நகரப்பகுதிகள், ஊரகப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக செயல்படுத்தப்பட்ட மாநிலங்கள்
முதியோர்கள் மற்றும் இதர காரணங்களால் பலருக்கும் சரிவர கைரேகை பதிவு செய்யப்பட இயலாத நிலையில் கண்விழி சரிபார்ப்பு மூலம் நியாய விலைக் கடைகளில் பொருட்கள் விநியோகிக்கும் முறையானது மகாராஷ்டிரா, அசாம், தெலங்கானா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்திலும் கண் கருவழி ஸ்கேன் மூலம் சரிபார்க்கும் முறை விரைவில் செயல்படுத்தப்படும் என குறிப்பிட்டார். இந்த முறை குறித்து நேரடியாக ஆய்வு செய்த பிறகு செயல்படுத்தப்பட்டு பொருட்கள் விநியோகம் சிறப்பாக செய்யப்படும் என அமைச்சர் சக்கரபாணி குறிப்பிட்டார்.

க்யூஆர் ஸ்கேன் செய்து பொருட்கள் விநியோகம்
முன்னதாக ரேஷன் கடைகளில் கை ரேகை பதிவு இயந்திரங்கள் வேலை செய்யாதபட்சத்தில் க்யூஆர் ஸ்கேன் செய்து பொருட்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதுகுறித்த அறிவிப்பை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் ராஜாராஜன் அரசாணை வெளியிட்டுள்ளார். அதில் இணைய இணைப்பு, தொலைத்தொடர்பு இணைப்பு சிக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சில நேரங்களில் கை ரேகை சரிபார்க்கும் இயந்திரம் செயல்படுத்த இயலாத நிலை இருக்கிறது. அந்த சமயத்தில் பொருட்கள் விநியோகம் செய்வதில் சிக்கல் இருக்கிறது.

பொருட்கள் விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள்
இந்த சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு வெவ்வேறு வழிமுறை பரிவர்த்தனைகளுக்கான ஏற்பாடுகள் விற்பனை முனைய இயந்திரங்களில் செய்து தரப்பட்டுள்ளன. அதன்மூலம் பொருட்கள் விநியோகம் செய்யலாம். இனி ரேஷன் கார்ட் பயனர்கள் எந்த சூழலிலும் பொருட்கள் விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இனி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் சேவை மையத்தை தொடர்பு கொண்டு டிக்கெட் எண் பெற்று சரி செய்ய வேண்டும். கோளாறு சரிசெய்யும் வரை பொருட்கள் விநியோம் செய்வதற்கு சில வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து ஸ்மார்ட் கார்ட்களிலும் க்யூஆர் கோர்ட் ஸ்கேன் செய்து ஸ்மார்ட் கார்டில் உள்ள குடும்ப அட்டை எண்ணை விற்பனை முனையத்தில் பதிவு செய்து, வாங்க வருபவர்களிடம் கையெழுத்துப் பெற்று பொருட்கள் விநியோகம் செய்யலாம். இயந்திரத்தில் உள்ள கோளாறு சரி செய்யப்பட்டதும் முறையாக விரல் ரேகை பதிவை ஸ்கேன் செய்து பொருட்கள் விநியோகம் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications