Telegram செயலியில் இப்படியொரு நூதன மோசடி நடக்குதா? தமிழக டிஜிபி எச்சரிக்கை.!
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களை இணைக்கும் தளமாக மட்டும் இருந்த சமூகவலைதளம் இப்போது மெய்நிகர் மையங்களாகவும், மார்க்கெட்டிங் வணிகங்களை அணுகுவதற்கான தளமாகவும், வேலைகளை கண்டறியும் தளமாகவும் விளங்கி வருகிறது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மற்றும் வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற தளங்கள் இந்த செயல்களில் சிறந்து விளங்குகிறது.
இருந்தபோதிலும் டிஜிட்டல் யுகத்தில் ஒவ்வொரு செயலிலும் கவனமாக இருப்பது அனைவரின் கடமையாகும். அதாவது முன்பு கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்துத்தான் திருடினார்கள். இப்போது மொபைல்போன் மூலமாகவே எளிமையாகக் கொள்ளையடிக்கின்றனர். இந்நிலையில் டெலிகிராம் செயலியில் நடைபெற்று வரும் ஒரு நூதன மோசடி குறித்து டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதாவது டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியது என்னவென்றால், லேட்டஸ்டா ஒரு மோசடி வந்துள்ளது. வாட்ஸ் அப்பில் உங்களுக்கு ஒரு மெசேஜ் வரும். மெசேஜ் எப்படி என்றால், இந்த டெலிகிராம் குரூப்பில் சேருங்க.. சேர்ந்து முதலீடு செய்தால் நிறைய நன்மைகள் கிடைக்கும் என்று சொல்லி சேரச்சொல்வார்கள்.
அப்படி என்னதான் அதில் இருக்குன்னு ஆசைப்பட்டு நீங்களும் அந்த டெலிகிராம் குரூப்பில் சேர்ந்திடுவீங்க. பின்பு அந்த டெலிகிராம் குரூப்பில் நிறையப் பேர் உரையாடிக் கொண்டிருப்பார்கள், எப்படி என்றால், நான் வருமானம் இல்லாமல் இருந்தேன்,வாழ்க்கையில் விரக்தி அடைந்து இருந்தேன். தற்கொலை பண்ணலாம்னு இருந்தேன். அப்பதான் சொன்னாங்க, ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் 10,000 கிடைக்கும் என்று சொன்னார்கள். நானும் முதலீடு செய்தேன், பின்பு மாதம் மாதம் 10 ஆயிரம் கொடுக்குறாங்க. இதுவரை நான் ஐந்து லட்சம் டெபாசிட் செய்தேன், இரண்டு வருடத்தில் 25 லட்சமாகிவிட்டது என்று கூறுவார்கள்..
நீங்களும் இதை உண்மை என நம்பி ஒரு லட்சமோ, இரண்டு லட்சமோ டெபாசிட் பண்ணுவீங்க. அதற்கு பிறகு நீங்க டெபாசிட் பண்ணுன உடனேயே, பணம் வந்து உங்கள் கணக்கில் வந்துவிட்டதாக அத்தாட்சி அனுப்புவார்கள். உங்களுக்கு மாதம் மாதம் எவ்வளவு வட்டி வருதுன்னு அந்த அக்கவுண்ட்டில் காட்டி விடுவார்கள்.
இந்த சூழலில் இன்னும் கொஞ்சம் பணம் முதலீடு செய்ய சொல்வார்கள். நீங்கள் அதை நம்பி முதலீடு செய்வீங்க. பின்பு 25 லட்சம் ஆனவுடன் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்று கேட்பீர்கள். அவர்கள் 50 லட்சத்தில் தான் கொடுப்போம் என்று சொல்லுவார்கள். இன்னொரு 25 லட்சம் கட்டி 50 லட்சம் ஆகிவிட்டது என்று சொல்வார்கள். பணத்தைத் திருப்பி கொடுக்க வேண்டும் என நீங்கள் கேட்கும் போது உங்களுக்குப் பணம் வராது.

அதாவது உங்களை அந்த டெலிகிராம் குரூப்பில் இருந்து நீக்கி விடுவார்கள். அதன்பின்னர் நீங்கள் எங்கு சென்றாலும் அந்த பணம் கிடைக்காது. இது நவீன மோசடி. புதிதாக நடைபெற்று வருகிறது. இந்த டெலிகிராம் மோசடிக்கு தமிழ்நாட்டில் எந்த நபருமே ஆளாகிவிடக்கூடாது. தமிழ்நாட்டில் இப்படி ஒரு மோசடி நடைபெறக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில், தமிழக காவல்துறை முன்னெச்சரிக்கையாக முன்னதாகவே உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம். எனவே அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் டிஜிபி சைலேந்திர பாபு.


Click it and Unblock the Notifications








