ஐயப்பனும் அறிவியலும்: அறிந்தும், அறியாமலும் கிடைக்கும் சகல பலன்கள்?
சபரிமலைக்கு மாலை அணிபவர்களில் பெரும்பாலோனோர் 18 நாட்களில் இருந்து ஒரு மண்டலம் என்று சொல்லக்கூடிய 48 நாட்கள் விரதம் இருப்பது வழக்கம். விரதத்தை தொடங்குவதற்கு முன்னாள் வீட்டை சுத்தம் செய்துவிட்டு, துளசிமணி, ருத்திராக்சம் மாலையை குருசாமி கைகளால் அணிந்து கொண்டு, வீட்டில் உள்ள குடும்பத்தினரோடு விரதம் இருந்து, மாலை அணிந்தவர் இருமுடி கட்டி ஐயப்பன் தரிசனத்திற்கு செல்வது வழக்கம்.

ஒரு மண்டலம் விரதம்
பொதுவாக ஒருவருக்கு புகைப்பிடிப்பதோ அல்லது மதுப் பழக்கம் இருந்தால், அதை விட வேண்டும் என்று அவர்கள் விரும்பினாலும் அந்த பழக்கத்தில் இருந்து விலகுவது என்பது கடினமான செயலாக இருக்கும். ஆனால் ஒரு மண்டல விரதம் அதாவது 48 நாட்கள் சபரிமலைக்கு மாலை அணிவித்து சுத்தமாக விரதம் இருக்கும்போது, விரதம் கடைப்பிடிப்பவர்கள் தங்களிடம் உள்ள தீயப்பழக்கத்தில் இருந்து விலகி இருப்பார்கள். ஒருவர் 48 நாட்கள் ஒரு தீயப் பழக்கத்தில் இருந்து விலகி இருந்தால் அடுத்ததாக அந்த பழக்கத்தை கைவிடுவது என்பது மிகவும் எளிதான ஒன்று. எடுத்துக்காட்டாக காலை 6 மணிக்கு விழிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால், தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் காலை 6 மணிக்கு கண் விழித்து எழுந்தால் அடுத்த நாட்களுக்கு அலாரம் எதுவும் தேவைப்படாது அதன்பின் தாமாகவே விழித்துக் கொள்ள முடியும்.

உறக்கத்திலும் நன்மை...
பொதுவாக தலையணை வைத்து தூங்க வேண்டும் என்று பலதரப்பினரும் கூறி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் தலையணையில்லாமல் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் கோடி. ஆனால் விரதக் காலங்களில் தலையணை மற்றும் மெத்தை இல்லாமல் தரையில் தூங்கும் போது ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் உடலில் உள்ள பெரும்பாலான வியாதிகளும் பறந்து ஓடும் என்கின்றனர் சாமிமார்கள். யோகாவில் கூட அனைத்து வகையான யோகாசனங்கள் செய்து முடித்தப் பிறகு கடைசியாக செய்வது சாந்தியாசனம். இந்த வகையான யோகாவையை செய்யும் போது ரத்த ஓட்டம் சீராக அமைந்து உடலுக்கு ஒரு நிம்மதி கிடைக்கும். அதேபோல் 48 நாட்கள் இரவு முழுவதும் செய்யும் போது உடலுக்கு பல்வேறு பலன்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை:
வாக்கிங் செல்லும் பழக்கம் பெரும்பாலானோருக்கும் இருக்கும். இதில் நாம் வாக்கிங் செல்லும் பல்வேறு பகுதிகளிலும் பாத்திருப்போம், அங்கு கூழாங்கல் சிறிது தூரத்திற்கு பொருத்தப்பட்டிருக்கும். அந்த கற்களில் வெறும் கால்களுடன் நடக்க சொல்வார்கள். அது ஒரு அக்குபஞ்சர் முறையாகும். அதன்படி விரதம் இருக்கும் சாமிமார்கள் 48 நாட்கள் வெறும் கால்களுடன் நடக்கின்றனர். இதன்மூலம் மூட்டு வலி, கால் வலி உள்ளிட்ட கால்சார்ந்த உபாதைகள் பறந்து ஓடிவிடும் என்கின்றனர் சாமிமார்கள்.

பஜனையில் கிடைக்கும் நன்மை:
பஜனையில் சாமிமார்கள் ஒன்றாக கூடி ஐயப்ப பாடல் பாடுவது வழக்கம். இந்த பாடல்கள் ஒன்றாக பாடும் போது சுமார் 3 மணி நேரம் பாட்டிலும், பக்தியிலும் ஆழ்ந்து நிமிர்ந்து அமர்ந்திருப்பார்கள். இதன்மூலம் முதுகெழும்பிற்கு வலு கிடைக்கும் மேலும் இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாக தட்டிக்கொண்டே பாடல் பாடுவோம். அப்படி கைத்தட்டிக் கொண்டே இருந்தால் இருதய நோய் வராது என ஜெர்மனியில் நடைபெற்ற அக்குபஞ்சர் மருத்துவர்கள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சக மனிதர்களை கடவுளாக மதிப்பது
பொதுவாக கணவர்கள் மனைவியை பெயர் சொல்லி அழைப்பார்கள். அதேபோல் நண்பர்களையும் பெயர் சொல்லி வாடா,போடா என்று அழைப்பார்கள். பிறரும் நம்மை அப்படியே அழைப்பார்கள். ஆனால் இந்த 48 நாட்கள் சாமிமார்கள், கட்டிய மனைவி உட்பட அனைவரையும் சாமி என்றும், பிறர் சாமிமார்களை சாமி என்றும் அழைப்பார்கள். மனைவிக்கு மரியாதை கொடுக்கும் வழக்கத்தை விரதத்தில் கடைப்பிடிக்கப்படுவதும் இதில் உண்டு. மனது ஒருமித்த கருத்துடன் மனக்கட்டுபாடு இந்த விரத காலங்களில் வளரும் என்கின்றனர் சாமிமார்கள்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்:
ஐயப்பனுக்கும் விரதம் இருந்து இருமுடி தூக்கு சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள், முதலாவதாக செல்லும் இடம் எருமேலி அங்கு குளித்துவிட்டு கன்னிசாமி என்று சொல்லக்கூடிய முதல் முறை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் சாமிமார்கள் உட்பட அனைவரும் முதலில் செல்லும் இடம் வாவர் மசூதி. மசூதியை ஒரு சுற்றுசுற்றி வந்து வாவரை கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு யாத்திரை தொடங்குவார்கள். இதன்மூலம் ஜாதி மத பாகுபாடுகள் முற்றிலும் ஒழிக்கப்படுகின்றன.

பலன்கள், நன்மைகள்:
சபரிமலை விரதத்தில் இதற்குமேல் பல்வேறு நன்மைகள் கிடைப்பதாக சாமிமார்கள் தெரிவிக்கின்றனர். இந்த விரத காலம் என்பது முக்கியமான ஒன்று எனவும் சபரிமலை யாத்திரையில் மத நம்பிக்கையில் பிறர் தலையிட வேண்டாம் எனவும், அரசியலை உள்ளே புகுத்த வேண்டாம் எனவும் சாமிமார்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
PIC Courtesy: Socialmedia


Click it and Unblock the Notifications