டிவிட்டர் போக்கை கண்டித்து டில்லி நீதிபதி கொடுத்த பதிலடி.. டிவிட்டர் மனுவில் என்ன சொல்லப்பட்டது?
மத்திய அரசின் புதிய விதிமுறையின்படி, சமூக வலைத்தளங்களில் பயனாளர்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உள் நாட்டிலேயே செயல்படக்கூடிய தகுதி வாய்ந்த குறை தீர்ப்பு அதிகாரியை நியமிக்கக் கோரி அறிவுரைக்கப்பட்டது. ஆனால், இதற்கு டிவிட்டர் நிறுவனம் செவிசாய்க்காமல் காலம் கடத்தி வந்தது. இதனால், டிவிட்டரின் போக்கைக் கண்டித்து, அடுத்த 8 வாரங்களுக்குள் குறைதீர்ப்பு அதிகாரியை நிறுவனம் நியமித்திருக்க வேண்டும் என்று டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் வசிப்பவரையே, குறை தீர்ப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும்
மத்திய அரசின் விதிமுறைப்படி, சமூக வலைத்தளங்களில் பயனாளர்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க இந்தியாவைச் சேர்ந்த குறை தீர்ப்பு அதிகாரியை நியமிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இருப்பினும் டிவிட்டர் நிறுவனம், அமெரிக்க பிரிவின் சட்ட கொள்கை இயக்குனர் ஜெரமி கெசல் என்பவரை, டிவிட்டர் இந்தியாவின் குறை தீர்ப்பு அதிகாரியாக நியமித்தது. ஆனால், இந்தியாவில் வசிப்பவரையே, குறை தீர்ப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும்' என, புதிய விதிமுறை கூறுகிறது.

மத்திய அரசு அறிவுறுத்திய விஷயங்களை டிவிட்டர் மீறியுள்ளது
மத்திய அரசின் விதிமுறைப்படி டிவிட்டர் நிறுவனம் செயல்படவில்லை என்றும், மத்திய அரசு அறிவுறுத்திய விஷயங்களை டிவிட்டர் நிறுவனம் மீறியுள்ளது என்று கூறி டில்லியைச் சேர்ந்த அமித் ஆச்சார்யா என்ற வழக்கறிஞர், டில்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

டிவிட்டரின் போக்கை கண்டித்த நீதிபதி
விசாரணையின் போது, டில்லி உயர்நீதிமண்ட நீதிபதி கூறியதாவது "புதிய குறை தீர்ப்பு அதிகாரியை நியமிக்க, டிவிட்டர் நிறுவனம் தனது போக்கில் கால அவகாசம் எடுத்துக் கொள்வதை நீதி மன்றம் கண்டிக்கிறது. இந்த போக்கை அனுமதிக்கவும் முடியாது' என, நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து, டிவிட்டர் தரப்பில் 8 வாரங்கள் கால அவகாசம் கோரப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதி, இன்றைய தினமே எப்போது புதிய குறைதீர்ப்பு அதிகாரி நியமிக்கப்படுவார் என்று தெரிவித்தாக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இறுதியாக டிவிட்டர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தது என்ன?
அதன்படி, டிவிட்டர் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் குறைதீர்ப்பு அதிகாரியாக, தகுதி வாய்ந்த நபர் தற்போது நியமிக்கப்படுவார் என்றும், 6ம் தேதி முதல் இந்தியாவில் வசிப்பவர் இந்த பதவியில் நியமிக்கப்பட்டுச் செயல்படுவர் என்றும் கூறியுள்ளது. அந்த நபர் மூன்றாம் தரப்பு நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு உள்ளார் என்று டிவிட்டர் சமர்ப்பித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications