எங்கள் முக்கியமான டார்கெட்டே இவர்கள் தான், விஷிங் கும்பல் குடுத்த வாக்குமூலம்!
எங்கள் முக்கியமான டார்கெட்டே இவர்கள் தான், இவர்களைக் குறி வைத்துத் தான் போன் செய்து பணத்தை அபகரிப்போம் என்று டெல்லியை சேர்ந்த 'விஷிங்' கும்பல் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளது. விஷிங் (Vishing) என்பது வாய்ஸ் கால் மூலம் செய்யப்படும் ஒரு வகையான பிஷ்ஷிங் (Phishing) மோசடியாகும். இந்த கும்பல் டெல்லியிலிருந்து தமிழில் பேசி தமிழர்களை எப்படி ஏமாற்றிச் சம்பாதித்தது என்று தெரியுமா?

விஷிங் மோசடி கும்பல்
டெல்லியின் வசந்த் விஹாரில் வசிக்கும் ஒரு கும்பல், இந்த விஷிங் மோசடி வேலையை நீண்ட நாட்களாகச் செய்து வந்துள்ளது. வங்கி ஊழியர்கள் போல் போனில் மக்களைத் தொடர்புகொண்டு, அவர்களின் OTP மற்றும் வங்கி விபரங்களை தெளிவாக அவர்களிடமிருந்து கறந்து, அதன் மூலம் நூற்றுக்கணக்கானவர்களின் கணக்குகளிலிருந்து ரகசியமாகப் பணத்தைத் திருடி வந்துள்ளனர்.

சிறப்புக் குழு அமைத்து விசாரணை
நகர காவல்துறை மற்றும் மாநிலத்தின் பிற இடங்களில் தொடர்ச்சியாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவின் வங்கி எதிர்ப்பு மோசடி பிரிவின் உதவி ஆணையர் எஸ்.பிரபாகரனின் கீழ் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் புகார்கள், எஸ்.எம்.எஸ்-கள் மற்றும் அழைப்பு பதிவுகளை ஆராய்ந்து, இந்த மோசடி கும்பல் தமிழர்கள் அதிகம் வசிக்கும் டில்லியின் ஆர்.கே.புரம் மற்றும் வசந்த் விஹார் அருகிலுள்ள இடங்களில் வசிக்கலாம் என்று கணித்தது.

மூவர் கைது
டெல்லி காவல்துறையின் உதவியுடன், சிறப்புக் குழு கண்காணிப்பை மேற்கொண்டு, ஆர்.கே.புரத்தைச் சேர்ந்த ஆர்.தேவ் குமார் (22); வில்சன் மேத்யூ, 25; மற்றும் வசந்த் விஹாரைச் சேர்ந்த ஆர். தீபக் குமார், 21 ஆகிய மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தது.

இவர்களுக்கு பிஷ்ஷிங் ஹேக்கிங் தந்திரங்கள் எப்படி தெரியும்?
இவர்களில் தேவ் குமார் பி.காம் படித்துள்ளார் என்றும், மற்ற இருவரும் எஸ்.எஸ்.எல்.சி. முடித்துவிட்டு வில்சன் மேத்யூ இத்தாலியத் தூதரகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.எஸ்.எஸ்.எல்.சி. முடித்தவர்கள் விஷிங், பிஷ்ஷிங் போன்ற ஹேக்கிங் தந்திரங்களை எப்படி எளிதாக கற்றுக்கொண்டனர் என்று காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர்.

கால் சென்டரில் பணிபுரிந்து வந்த கூட்டாளிகள்
இவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரி மற்றும் சேலத்திலிருந்து டெல்லிக்குக் குடிபெயர்ந்துள்ளனர். இவர்கள் கால் சென்டரில் பணிபுரிந்து வந்த போது விஷிங் தந்திரங்களைக் கற்றுக்கொண்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மக்களிடம் போனில் தொடர்பு கொண்டு, அவர்களின் வங்கி ஏடிஎம் கார்டு முடக்கம் செய்யப்பட்டுள்ளது என்று கூறி, அவர்களை நம்ப வைத்து விஷிங் வலைக்குள் சிக்க வைத்துள்ளனர்.

ஆசை வார்த்தை கூறி வலையில் சிக்க வைத்துள்ளனர்
அதேபோல், உங்களுக்குப் பரிசுத் தொகை விழுந்துள்ளது என்று ஆசை வார்த்தை கூறி, பணத்தை உங்கள் வங்கி அக்கௌன்ட்டில் சேர்க்க வங்கி விபரங்கள் வேண்டும் என்று OTP உட்பட அனைத்து தகவல்களையும் இந்த கும்பல் எளிதாகச் சேகரித்து, அடுத்த சில நொடியில் பாதிக்கப்பட்டவர்களின் கணக்கிலிருந்து பணத்தைத் திருடியுள்ளது. இந்த செயலை இவர்கள் வெறும் ஒரு ஆண்ட்ராய்டு போனை மட்டும் வைத்து செய்துள்ளனர் என்பதே காவல்துறையினருக்கு ஷாக்.

எங்கள் முக்கியமான டார்கெட்டே இவர்கள் தான்
இவர்கள் திருடிய பணம் அனைத்தும் குறிப்பிட்ட ஒரு மொபைல் பேங்க்கிங் கணக்கிற்குச் சென்றுள்ளது, அங்கிருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. இவர்கள் பயன்படுத்தி வந்த வங்கிக் கணக்கை டிரேஸ் செய்து இவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களின் முக்கியமான டார்க்கெட்டே மாநிலத்தின் மூத்த குடிமக்கள் தான் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உடனே புகாரிளியுங்கள்
இனி உங்கள் போனிற்கு யாரும் வங்கி ஊழியர் போல் கால் செய்து பேசினால் அல்லது உங்கள் வங்கி விபரம் மற்றும் OTP விபரங்களைக் கேட்டால் யோசிக்காமல் உடனே அந்த போன் காலை கட் செய்துவிட்டு, காவல்துறைக்கு உடனே அந்த எண்ணை அனுப்பி புகார் அளித்துவிடுங்கள். எப்போதும் வங்கி தொடர்பான சிக்கல்களுக்கு வங்கியை நேரில் அணுகித் தீர்வு காணுங்கள்.


Click it and Unblock the Notifications