ATM-ல் பணம் எடுக்க போகும் போது கார்டு சிக்கி கொண்டதா.. இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.. ஏன்?
கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை செய்தாலும், சில முக்கிய விஷயங்களுக்கு ஏடிஎம்-இல் இருந்து பணம் கையில் எடுத்து செலவு செய்யத் தான் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனாலும் ஏடிஎம்-இல் பணம் எடுக்கப் போகும் போது எப்போதுமே கவனமாக இருக்க வேண்டும். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது சமீபத்தில் தெற்கு டெல்லியில் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் திருடிய மூன்று பேரை காவல்துறையினர் பிடித்தனர். பின்பு உடனே விசாரணை நடத்தி கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட விஷால் மேகி, அமித் மெஹரா மற்றும் விஜயகுமார் என்ற மூவரும் பல விதமான ஏடிஎம் (ATM) முறைகேட்டில் ஈடுபட்டு பணத்தைத் திருடி இருப்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது இந்த மூன்று பேரில் இருவர் மட்டும் சென்று ஏடிஎம் மையங்களுக்குச் சென்று அங்கு இருக்கும் சிசிடிவி கேமராவை மறைத்துவிட்டு இயந்திரங்களில் உள்ள கார்ட் ரீடரை நீக்கி விடுகின்றனர். அதன்பின்பு பொதுமக்கள் அந்த ஏடிஎம்மில் பணம் எடுக்க போகும் போது, அதில் கார்டு ரீடர் இல்லாமல் இருப்பதால் கார்டு சிக்கிக் கொள்ளும்.
அப்போது தான் இந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் வாடிக்கையாளர் போல் உள்ளே வருவார். கார்டை வெளியே எடுக்க உதவுவது போல் நடிப்பார். அந்த சமயம் கார்டை வெளியே எடுக்க உங்களது பின் நம்பரை உள்ளிடச் சொல்வார். ஆனால் அதற்கெல்லாம் ஏடிஎம் கார்டு வெளியே வந்துவிடாது. அதாவது இதன் மூலம் உங்களது பின் நம்பர் இவர்கள் அறிந்து வைத்துக் கொள்வார்.

அதன்பின்பு நான் இங்கிருந்து உங்களது ஏடிஎம் கார்டை பத்திரமாகப் பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் உடனே உங்கள் வங்கிக்கு சென்று புகார் அளித்து விட்டு வாருங்கள் என்று சொல்லி அனுப்புவார்களாம். ஆனால் திரும்பி வருவதற்குள் உங்களது பின் எண்ணை பயன்படுத்தி ஏடிஎம் கார்டை கொண்டு உங்களது கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து விடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இவர்கள் ரோகினி, தென்மேற்கு டெல்லி, கிழக்கு டெல்லி, வடகிழக்கு டெல்லி மற்றும் தெற்கு டெல்லி போன்ற பகுதிகளில் 25-க்கும் அதிகமான இடங்களில் பணத்தை திருடியுள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன மூலம் இத்தகைய மோசடிகளை கற்றுக் கொண்டதாக இவர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பல்வேறு டெபிட் கார்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். ஒருவேளை உங்கள் ஏடிஎம் கார்டு ஏடிஎம் இயந்திரத்தில் மாட்டிக் கொண்டுவிட்டது என்றால் எந்த காரணத்தைக் கொண்டும் யார் வந்து கேட்டாலும் உங்களது பின் நம்பரையோ அல்லது கார்டு குறித்த முக்கிய விவரங்களை வெளியிடாதீர்கள் என்று காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதுதவிர ஏடிஎம் மையங்களில் ஏதேனும் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகள் நடப்பதாக உங்களுக்குத் தோன்றினால் உடனே காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். பின்பு ஆள் நடமாட்டமில்லாத பகுதி, இரவு நேரங்களில் பணம் எடுக்க ஏடிஎம் செல்லும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








