ஆதாருடன் பான் எண் இணைக்க கடைசி நாள் இதுதான்: இல்லையெனில் ரூ.1000 அபராதம்..!
உங்களுடைய பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான இறுதி காலக்கெடு இப்போது நெருங்கிவிட்டது. இன்னும் சரியாகச் சொல்லப் போனால், உங்கள் பான் அட்டையை ஆதார் உடன் இணைக்க வெறும் 15 நாட்கள் மட்டுமே எஞ்சி இருக்கிறது. இதுவரை இன்னும் உங்களுடைய பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்காத நபர்கள் முக்கியமான இந்த 5 விஷயங்களைத் தெரிந்துகொண்டு உடனே உங்கள் ஆவணங்களை இணைத்திடுங்கள். இதைச் செய்ய மறுப்பவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்பதை மறக்காதீர்கள்.

ஆதார் அட்டையை இணைப்பதற்கான இறுதி காலக்கெடு
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, பான் மற்றும் ஆதார் அட்டையை இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசாங்கம் சமீபத்தில் நீட்டித்தது. முன்னதாக, இதற்கான காலக்கெடுவாக மார்ச் 31ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்குப் பின்னர், கொரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து பான் அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி, இந்த இறுதி காலக்கெடு முடிவடைய இன்னும் 15 நாட்கள் மட்டுமே உள்ளது.

அனைத்து ஆதார் மற்றும் பான் அட்டை பயனர்களுக்கு இது கட்டாயம்
உங்கள் வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கும், பான் அட்டையைப் பெறுவதற்கும் 12 இலக்க ஆதார் அடையாள எண் கட்டாயமாகிவிட்டது. உங்களுடைய பான் அட்டை, உங்கள் வருமான வரி மற்றும் வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ரூ .1,000 அபராதமா?
இந்த நிலையில் அனைத்து ஆதார் மற்றும் பான் அட்டை பயனர்கள் கட்டாயம் அவர்களின் ஆவணங்களை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஜூன் 30 ஆம் தேதிக்குள் இந்த ஆவணங்களை இணைக்கவில்லை என்றால், உங்கள் பான் அட்டை செயல்படாது. அதேபோல், ரூ .1,000 அபராதம் விதிக்கப்படும்.

பான் அட்டையுடன் ஆதாரை இணைக்க நீங்கள் செய்ய வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்
முதலில் பான் அட்டை இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம், உங்களிடம் பான் அட்டை இல்லையென்றால் நீங்கள் விரைவில் அதற்கு விண்ணப்பிக்க வேண்டும். நீங்கள் ஒரு புதிய பான் அட்டைக்காக விண்ணப்பிக்கும் போது, அந்த விண்ணப்பப் படிவத்தில் உங்களுடைய ஆதார் எண்ணைக் கட்டாயமாக உள்ளிட்ட வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

புதிய பான் அட்டை பயனர்களுக்கு
பான் தேவைப்படும் இடங்களில் நீங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தலாம், பான் மற்றும் ஆதார் எண்கள் ஒன்றுக்கொன்று இன்டர்லிங் ஆகக் கூடியவை என்பதனால், புதிய பான் அட்டை பயனர்களுக்கு ஆதார் இன்டர்லிங்கிங் தானாகவே செய்யப்படும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

பான் அட்டை செயலிழக்கப்படும்; ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும்
தற்போது பான் அட்டை வைத்திருக்கும் நபர்கள், ஜூன் 30 ஆம் தேதிக்குள் ஆதார் அட்டையை பான் அட்டையுடன்
இணைத்துக்கொள்ள வேண்டும். இது அனைவருக்கும் கட்டாயமாகும். இதை செய்ய மறுப்பவர்களின் பான் அட்டை செயலிழக்கப்படும் மற்றும் ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும். உங்கள் ஆதார் மற்றும் பான் அட்டையை வருமான வரித் துறையின் போர்ட்டல் மூலமாகவோ அல்லது எஸ்எம்எஸ் மூலமாகவோ நீங்கள் இணைக்கலாம். நீங்கள் ஆன்லைனில் இணைப்பதன் மூலம் அதன் விவரத்தைச் சரிபார்க்கலாம்.

எட்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள காலக்கெடு
இன்னும் பலர் தங்களின் ஆதார் அட்டையை, பான் எண்ணுடன் இணைக்காமல் இருக்கிறார்கள், உடனே எஞ்சி இருக்கும் காலம் முடிவடையும் முன்பு உங்கள் அட்டைகளை இணைத்துக்கொள்ளுங்கள். தற்போது இதற்கான காலக்கெடு எட்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முந்தைய தேதி டிசம்பர் 31, 2019 ஆக இருந்த நிலையில் தற்போது இறுதி தேதியாக ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதி வாய்ப்பை தவறவிடாதீர்கள்
இதைச் செய்யத் தவறும் பட்சத்தில், இந்திய அரசாங்கம் வழங்கிய காலக்கெடு முடிந்த பின்னர் இணைக்கப்படாத அனைத்து பான் அட்டைகளையும் வருமான வரித்துறை "செயல்படாத" அட்டைகளை என்று அறிவிக்கும். மேலும், ரூ. 1,000 கட்டாயமாக அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளது. அதேபோல், பான் அட்டை இல்லாமல் நீங்கள் வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்யவோ அல்லது அதை அடையாள ஆதாரமாக எங்கும் பயன்படுத்தவோ முடியாது என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications