உஷார்: இந்த மெசேஜை தொடவோ, திறக்கவோ வேண்டாம்- சைபர் பிரிவு போலீஸார் எச்சரிக்கை!
இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் விடுத்துள்ள எச்சரிக்கை குறித்து பார்க்கலாம். அதில், வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு என குறிப்பிட்டு எச்சரிக்கை தகவல் விடப்பட்டுள்ளது. வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் மொபைல் எண்ணிற்கு அவர்களது வங்கியில் இருந்து அனுப்பப்படுவது போல் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.

வங்கி கணக்குடன் பான் கார்ட் விவரங்களை இணைக்க வேண்டும்
அந்த குறுஞ்செய்தியில் அவர்களது வங்கி கணக்குடன் பான் கார்ட் விவரங்களை இணைக்க வேண்டும் எனவே இந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் அப்டேட் செய்யுங்கள் என குறிப்பிட்டு ஒரு யூஆர்எல் லிங்க்கும் அனுப்பப்படுகிறது. இந்த குறுஞ்செய்தி பெறுபவர்கள் இதை வங்கியில் இருந்து அனுப்பப்பட்டது என நம்பி லிங்கை கிளிக் செய்து உள்நுழைந்து விடுகிறார்கள்.

வங்கி வெப்சைட் போன்று உருவாக்கம்
இந்த லிங்க் கிளிக் செய்து உள்நுழையும் போது, வங்கி வெப்சைட் போல் உருவாக்கப்பட்ட மோசடியான Phishing Website-ஐ திறக்கிறது. இது பார்ப்பதற்கு வங்கியின் பெயரில் வங்கியின் வெப்சைட் போன்றே காண்பிக்கப்படும். இதில் நபர்கள் வங்கி கணக்கு எண், ஏடிஎம் கார்ட் எண், ஓடிபி போன்ற விவரங்களை பூர்த்தி செய்யும்படி கேட்கப்படுகிறது. இவை அனைத்தையும் வாடிக்கையாளர்கள் பூர்த்தி செய்தவுடன் அவர்களது வங்கி கணக்கில் இருந்து பணம் மோசடியாக எடுக்கப்படும்.

வங்கி கணக்கு, பான் இணைப்பு
எந்த வங்கியும் பான் இணைப்பு, கேஒய்சி அப்டேட் செய்யவும் என லிங்க் உடன் மெசேஜ் எதுவும் அனுப்பப்படுவதில்லை. இதை அறியாத சிலர் தகவலை அளித்து பணம் மோசடிக்கு உள்ளாகி வருகின்றனர். வங்கி கணக்கு வைத்திருக்கும் நபர்கள் இதுபோன்ற மோசடி செயலுக்கு ஆளாகாமல் விழிப்புணர்வுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது என கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூகவலைதளம்
பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூகவலைதளங்களின் மூலம் நட்பாக பேசிப்பழகி பண மோசடி செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதுகுறித்து பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், ஏமாற்றுபவர்கள் நூதன முறையை கையாண்டு ஏமாற்றிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி
குறிப்பாக மின்னஞ்சல், செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உள்நாடு மற்றும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி அதற்கு முதற்கட்ட பணத்தையும் வாங்கி ஏமாற்றிய நிகழ்வையும் நாம் கேட்டிருப்போம். அதேபோல் பேஸ்புக்கில், வாட்ஸ் ஆப்பில் தொடர்புகொண்டு ஆசை வார்த்தைகள் கூறி பண மோசடி செய்தது குறித்த செய்திகளை நாம் கடந்து வந்திருக்கிறோம்.

கோடிக்கணக்கான பணம் பரிசு என மோசடி
அதுமட்டுமின்றி சில சமயங்களில் ஒரு பிரபல நிறுவனத்தில் இருந்து உங்கள் மெயில் ஐடிக்கு கோடிக்கணக்கான பணம் பரிசாக கிடைத்திருக்கிறது என ஒரு மின்னஞ்சல் வரும். ஓரிரு நாளில் விமான நிலையத்தில் இருந்து சுங்க அதிகாரி பேசுவதாக கூறி ஒருவர் போன் செய்து உங்களது பரிசுத் தொகை விமான நிலையத்திற்கு வந்துள்ளது. அதை பெறுவதற்கு வரி செலுத்த வேண்டும் போன்ற காரணங்களை கூறி நம்மிடம் முன்பணம் கேட்பார்கள். இதுபோல் மோசடி செய்பவர்கள் குறித்தும் கேள்விப்பட்டிருப்போம்.


Click it and Unblock the Notifications